இலக்கியநட்பு, புகைப்படங்கள்…

thikasi


அன்பின்


ஜெ.மோ. அவர்களுக்கு


“எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ]


மேற்படியான தங்களின் வரி இந்த ரம்ழான் மாத நோன்பு பிடிக்க எழுந்திருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் என் 25 / 30 ஆண்டுகால வாசிப்பு பயணத்தின் பயனெதுவென கண்டுகொண்ட தரிசனத்தை தருகிறது. எல்லோரையும் போல பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து இலக்கியம், சமூகவியல், தத்துவம், மதம் குறித்த பார்வை ஒரு முழு சுற்றுசுற்றிவிட்டு பிள்ளையாரைப் போல நின்ற இடமே என் புத்தகயாவாகிப் போனது. தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த என் பால்யகால நண்பர்களான அரவிந்தனாகிய அழகியபெரியவன் – இராமபிரபுவெனும் யாழன்ஆதியுடன் தனிப்பட்ட முறையிலும், அவர்களின் ஒட்டுமொத்த படைப்புகள் மற்றும் செயல்பாட்டுக்காகவும் கொண்டிருக்கும் உறவு ஆத்மார்த்தமானது. இதொரு தொடக்கம், அங்கு தொடங்கியது கால, தேச இடைவெளி கடந்து எங்கெங்கோ வேர்விட்டு படர்ந்துவிரிகிறது. நன்றி – நமஸ்காரம்


கொள்ளு நதீம்


***


அன்புள்ள கொள்ளு நதீம்


இலக்கிய நட்புகள் பிறநட்புகளைப்போல எளிமையான கொடுக்கல் வாங்கல்கள் அல்ல. அறிவார்ந்த உறவுகள் என்பதனால் எப்போதும் மோதல்களும் இருக்கும். அப்பாற்பட்டு பேணினால் அவை திரும்பி நோக்கும்போது வாழ்ந்தோம் என்ற நிறைவை அளிப்பவை/. பிற உலகியல் உறவுகளில் அந்நிறைவு நிகழ்வதே இல்லை. இதை நான் பல பெரியவர்களின் உறவுகளில் கண்டிருக்கிறேன். வெங்கட் சாமிநாதனுக்கும் தி.க.சிவங்கரனுக்குமான உறவு ஓர் உதாரணம்.,


வாழ்த்துக்கள்


ஜெ


***


அன்பு ஆசானுக்கு ,


நான் ஜெயக்குமாரன். photographer . ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன் . சந்திப்பு முடிந்தவுடன் நீண்ட கடிதம் ஒன்றை தொடர்ந்து எழுதி இன்னும் உங்களுக்கு அனுப்பாதவன். அடிக்கடி மனதில் தோன்றினவற்றை தொடர்ந்து எழுதி அக்கடிதத்தை முடிக்கும் போது ஏப்ரல் மாதம் ஆகியிருந்தது. 2 மாதம் கழித்து இதை அனுப்புவது சரியில்லை என விட்டுவிட்டேன். விஷயம் அதுவல்ல .

எனது முகநூல் பக்கத்தில் நம் வாசகர் சந்திப்பின் போது உங்களை எடுத்த படங்களை சமீபத்தில் பதிவிட்டேன். இன்று காலை ஆனந்த விகடனிலிருந்து அழைத்தார்கள். என்னுடைய பல படங்களை உபயோகிக்க கேட்டிருந்தார்கள் . அதில் உங்கள் படமும் ஒன்று. மற்ற படங்களை அனுப்பி விட்டேன் . அனுமதி இல்லாமல் உங்கள் படத்தை அனுப்புவது சரியல்ல என்று தோன்றியது. முகநூல் பதிவு கீழே .


https://www.facebook.com/jaidigitalworks/posts/850932815044885?pnref=story


அன்பும் நன்றிகளும் ,


ஜெயக்குமாரன்


***


அன்புள்ள ஜெயக்குமாரன்


வாழ்த்துக்கள். படங்களில் தொடர்ந்து நடிப்பது ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது


ஜெ


***


திரு ஜெ அவர்களுக்கு,


தங்களின் வலைத்தளத்தில், அம்பேத்கரின் தம்மம் 1-4 கட்டுரைகளை வாசித்ததிலிருந்தே ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஓவ்வொரு புத்தகத்திரு விழாவின் போதும் NCBH ல் சொல்லி வைத்து இதுவரை மறுபதிப்பு வரவே இல்லை.


சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ் முழக்கம் புத்தகக் கடையில் சொல்லி வைத்ததில் டாக்டர் வீ சித்தார்த்தா (பெரியார் தாசன்) அவர்களின் மொழி பெயர்ப்பில் 1996ல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பவுத்த ஆய்வு மையம் வெளியிட்ட பதிப்பு கிடைத்து வாசித்து வருகிறேன். நூலை வாசிக்க தங்கள் கட்டுரையே தூண்டுதலாக அமைந்தது. நன்றி. NCBH வெளியீடு மொழி பெயர்ப்பு யார் எனத் தெரிய ஆவல். அன்புடன்


சேது வேலுமணி


***


அன்புள்ள சேதுவேலுமணி,


அது ‘வாசிக்க’ வேண்டிய நூல் அல்ல. ஒரு மதமூலநூல் போல கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கவேண்டியது. நூல் உங்களுடன் எப்போதுமிருக்கட்டும்


ஜெ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.