சபரிநாதன் நேர்காணல்

”தனது காலத்தின் அகச்சமநிலையை மீட்க முயல்வதுதான் கலையின் நோக்கம்.”
 நேர்கண்டவர் : பிரவீண் பஃறுளி

3(1)



சபரிநாதன் தமிழ் நவீன கவிதையில் அண்மையில் வெளிப்பட்டுள்ள ஒரு சுதந்திரமான குரல். இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன. நமது காலத்தின் ஒரு உள்ளீடற்ற தன்மை, குழப்படிகள் மீது நுட்பமான அறிதல்களை நிகழ்த்துகின்றன. ’சமகாலம்’ என்பது போன்ற விமர்சன வழக்குச்சொல்லில் தன்னை பொருத்திக்கொள்ள விரும்பாத மனவியல்புடன், ஒரு கவிஞனாக தனது காலம் பல்வேறு காலங்களோடும் பல்வேறு மரபுகளுடனும் மயக்கம் கொண்டது என்கிறார். கவிதை சார்ந்த தனது நேரடிக்காலத்தின் அழுத்தங்களிலிருந்து விலகி தனதேயான மிகச் சுதந்திரமான பாதைகளை உருவாக்கிக் கொள்கிறார். மிகச் சாவதானமான ஒரு மயக்கமும் தற்போக்கான மனவெழுச்சிகளும், சுதந்திரமான எடுத்துரைப்புகளும் சபரிநாதன் கவிதைகளில் தனித்த அழகு சேர்க்கின்றன. தனது கவியுலகம் குறித்து தன் சுயம் சார்ந்து பேசுவதில் ஒருவித தயக்கமும் சந்தேகமும் கொள்கிறார். ’கவிதை தன் விளிம்பில் இருப்பதே அதன் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும்’ என்கிறார்.


1989 இல் பிறந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கழுகுமலை. பொறியியல் பட்டதாரி. தற்போது உதகையில் அரசுப்பணியில் உள்ளார். களம் – காலம் -ஆட்டம்( புதுஎழுத்து வெளியீடு, 2011) வால் (மணல்வீடுவெளியீடு, 2016) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. உறைநிலைக்குக்கீழ் (கொம்பு வெளியீடு) என்னும் ஸ்வீடிஷ் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளின் மொழியாக்கநூல் வெளிவந்துள்ளது. கவிதையியல் சார்ந்த ஆழ்ந்த விமர்சன கட்டுரைகளும் எழுதிவருகிறார். தேவதச்சன் கவிதைகள் குறித்த தேவதச்சம் கட்டுரை குறிப்பிடத்தக்கது.


இந்த நேர்காணல், ’இடைவெளி’ இதழுக்காக, மின்னஞ்சல் வழியே மேற்கொள்ளப்பட்டது.


***


கே : தொண்ணூறுகளின் இறுதி மற்றும் இரண்டாயிரத்தின் தொடக்கங்கள் தமிழ்க்கவிதையில் ஒரு உடைப்பு நிகழ்ந்தகட்டமாக இருந்தது. இருண்மை, அகவயத்தன்மை, சுயத்தின் ஆத்மபரிசோதனை, துக்கம், தத்துவார்த்த அழுத்தம் என்பதிலிருந்து விலகி வேடிக்கை, விளையாட்டு, உரைநடை, எளிமை, புனைவிய குதூகலங்கள், குறிப்பாக மற்றமை, சமூகம் எனபு றவயமாக, கவிதை ஒரு புதிய மனச்சூழலை அடைந்த கட்டமாக அது உள்ளது. கவிதைக்குள் குதூகலமான, புத்துணர்வான நம்பிக்கைகள் எழுந்த கட்டமாக அது இருந்தது. இதற்குபிறகான ஒரு தலைமுறையில் , ஒரு இடவெளிக்குப்பின் நீங்கள் எழுத வருகிறீர்கள். நீங்கள் எழுத வரும்போது கவிதைக்குள் என்ன ஒரு மனச்சூழலை உணர்கிறீர்கள். ? இன்று நீங்ங்கள் பொதுவான படைப்புச்சூழல், மனத்தளம் என்று உணரத்தக்கதாக ஒன்று உள்ளதா?


ப : நான் நவீனக்கவிதை எழுதத்துவங்கிய காலத்தில் சமகால தமிழ் இலக்கியச்சூழல் குறித்த பரிச்சயம் மட்டுமல்ல தோராயமான ஒரு அகவரைபடம் கூட என்னிடம் இல்லை. வானம்பாடி கவிதைகள் ஆசிரிய விருத்தங்களில் துவங்கி ஆங்கில கவிதை வாசிப்பின் மூலம் நான் எனதேயான ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தேன் என்று தான் கூறமுடியும். அத்தகைய கவிதைகளை அதிக அளவில் எழுதிக்கொண்டு கவிஞன் என்ற சுயவரையறையோடு இருந்தேன். அதனால் தொடக்கத்தில் தமிழ் இலக்கியச் சூழலின் எதார்த்தத்தை புரிந்துகொண்டு அதில் என்னை பொருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. முழுபிரக்ஞையுடன் நான் நவீன தமிழ்க்கவிதையை அறிமுகம் செய்துகொண்டது 2009 வாக்கில். 2011 இறுதியில் என் முதல் தொகுப்பு வெளியானது. எனக்கு தமிழ் இலக்கியச் சூழல் குறித்து பெரிய அவதானிப்பெல்லாம் அப்போது இல்லை. அந்த சமயம் தமிழின் முக்கியமான நிறைய கவிஞர்களை வாசித்திருந்தேன் எனினும் தமிழ் நவீனக்கவிதை குறித்த ஒருமித்த சித்திரம் எனக்குள் இல்லை. இப்போதும் கூட சமகால கவிதைச் சூழலுக்குள் மட்டுமே நான் என்னை குடியிருத்திக் கொள்ள விரும்பவில்லை. எதார்த்தில் என் காலம் என்பது நான் வாழும் வருடக்கணக்காக இருக்கலாம். ஆனால் என் கற்பனையில் அப்படியில்லை. ஒரு எழுத்தாளனாக என் சமகாலம் என்பது நீண்டது அகண்டது என்றே நம்ப ஆசைப்படுகிறேன்.. அங்கு இளங்கோவடிகளோ மாணிக்கவாசகரோ மிலோஷோ எலியட்டோ என் சமகாலக் கவிஞர்களே..


சமகாலக் கவிதை என்பது ஒருவித விமர்சன மாதிரி அலகாக வேண்டுமானால் இருக்கலாம். ஒரு கவிஞனாக இத்தகைய கால வகைப்பாடுகள் எனக்கு துல்லியமானதாகத் தோன்றவில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு நோக்கும் பாங்கு நாம் அறியாமலே நம்மை பீடித்திருக்கிறது. தொழில்நுட்ப சந்தை எப்படி அடிக்கடி தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறதோ அதே போல வாழ்வின் எல்லா பாதைகளும் தம்மை அடிக்கடி தகவமைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அது சாத்தியமில்லை. பொருளியல் மாற்றத்தைப் போல விழுமிய மாற்றங்களோ ஆழ்மன மாற்றங்களோ துரிதமாக ஏற்படுபவை அல்ல. அதேபோலத் தான் தொழில்நுட்பத்தின் இயங்குவிசை வேறு இலக்கியத்தின் உள்ளாற்றல் வேறு. கலை இலக்கியத்தின் மாற்றமானது அடிப்படையில் Organic ஆன ஒன்று. அது ஒரு நதியைப் போலத் தான் பயணிக்கும். ஸ்போர்ட்ஸ் காரைப் போல திரும்பமுடியாது அதனால். ஆனால் நாம் அப்படி எதிர்பார்க்கிறோம். இலக்கியச் சூழலிலும் டி20 ஆட்டங்களைப் போல் எதாவது நடந்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்படி இல்லை என்றால் இலக்கியம் தேங்கிவிட்டது என விசனிக்கிறோம்.


விமர்சன வகைப்பாடாகக் கொள்வதெனில் சமகாலத்தில் எழுதப்படும் கவிதைகள் பாடுபொருளிலும் பாணியிலும் பெரும்பாலும் தொண்ணூறுகளின் கவிதையின் தூரத்து மெல்லிய நீட்சி என்று தான் சொல்லவேண்டும். அது அப்படித்தான் இருக்கவும் முடியும். ஏனெனில் இப்போதைய எதார்த்தம் தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளியல் மற்றும் கலாச்சார உடைப்பின் மூலம் வார்க்கப்பட்ட ஒன்று தான். அதனின்றும் சமீபத்தில் எழுதப்படும் கவிதைகளை ஏதேனும் ஒருவகையில் தனித்துவப்படுத்த வேண்டுமெனில், முன்னெப்போதுமற்ற ஒரு வகை அளப்பரிய சுதந்திரத்தால் ஆட்பட்ட கவிதைகள் என்று கூறலாம். அதேபோல எண்ணிக்கைப் பெருக்கத்தாலும் மதிப்பீடுகளின் வெற்றிடத்தாலும் போலிவெள்ளத்தாலும் முன்னெப்போதையும் விட கவிதை ‘de-value’ செய்யப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்றும் சொல்லலாம்.


*


கே : தமிழ் நவீனகவிதை அடிப்படையில் சிறுபத்திரிக்கை இயக்கம் வழியாகவே பரிணமித்து வந்துள்ளது. இன்று சிறுபத்திரிக்கை இயக்கம், அதன்மதிப்பீடுகள் ஒரு வெற்றிடத்திற்கு வந்துள்ளன. எழுத்து–வாசிப்பு என்னும் இடத்தில் , உற்பத்தியும் – நுகர்வும்வைக்கப்பட்டுள்ளன. சிற்பத்திரிக்கைச் சூழலின்அரசியல், கலை, கருத்தியல்கள் அனைத்தும் அவற்றின் சாராம்சங்கள் தூர்ந்து இன்று கவர்ச்சிகரமான நுகர்பொருள்களாக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கமொழி, இடதுசாரிகள் உருவாக்கியமொழி, என அனைத்தும் ஒரு வரலாற்று சுற்று முடிந்து காலியாகியுள்ளது போலவே சிறுபத்திரிக்கை மொழியும் இன்று உள்ளீடு காலியாகி தேய்வழக்கான வடிவங்கள், மனநிலைகள், பிரதியெடுப்புகள் என சரிந்துகொண்டுள்ளது. இத்தகைய ஒரு வலுவான எதிர்மறைச்சூழலில் சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்த ஒரு மறுமலர்ச்சி, மொழிக்குள் ஓர் உள்ளார்ந்த புத்தியக்கம் என்பதற்கு இன்று நவீனகவிதை கொண்டிருக்கும் சாத்தியங்கள் எத்தகையவை?


ப : சிறுபத்திரிக்கையை எவ்வளவு தூரம் இயக்கம் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் நவீன இலக்கியத்தை பொறுத்தளவில் கிட்டத்தட்ட ஒற்றைப் பெருந்தரப்பாக முன்னெடுத்தது சிறுபத்திரிக்கைகள் தான் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தோன்றியவை. ரஷ்யாவிலோ ஐரோப்பாவிலோ செவ்வியல் நாவல்களின் காலத்தில் சிற்றிதழ்கள் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும். அந்த விதத்தில் சிற்றிதழ்களை நவீனத்துவத்தின் சிருஷ்டி எனலாம். எல்லா மொழிகளிலும் நவீனத்துவத்தின் குறிப்பாக நவீன கவிதையின் வாகனமாக அது தான் இருந்து வந்தது. நவீனத்துவத்தின் எதிர்நிலை நோக்கை சிற்றிதழ்கள் சுவீகரித்துக் கொண்டன. சிற்றிதழ்களின் விமர்சனத் தரப்பு நவீனத்துவத்தை போஷித்தது. ஆனால் சிறுபத்திரிக்கைகளின் ஆரம்ப காலகட்டத்தோடு ஒப்பிட்டால் நாம் இப்போது இருப்பது முற்றிலும் வேறான ஒரு காலகட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இந்த காலகட்டத்தில் சிற்றிதழ்கள் எவ்வாறு இயங்கக் கூடும் என்பது குறித்து எனக்கு மட்டுமல்ல சிறுபத்திரிக்கை ஆசிரியர்களுக்கே கூட தெளிவான திட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. சிறுபத்திரிக்கைகளின் Crisisக்கு முக்கியமான காரணம் இணையத்தின் வரவு தான். நடுநிலை இதழ்களோடு சிற்றிதழ்களும் சேர்ந்து இயங்குவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் இணையத்தின் வரவு முற்றிலும் புதிய ஊடகத்தை உருவாக்கியுள்ளது. இதன் இயல்முறைகளோ வாய்ப்புகளோ முன்னுதாரமற்றவை. இப்போது நடுநிலை இதழ்களே கூட இணையத்தில் பரவியுள்ள வாசகப்பரப்பைத் தவறவிட விரும்புவதில்லை. அவர்களின் பிரதானமான கவனம் கூட அச்சுவெளி என்பதை விட இணையமாகத் தான் உள்ளது. தவிர இப்போது இலக்கியத்தின் மையமே இணையம் தான். இப்போது இலக்கிய சர்ச்சைகள் மட்டுமின்றி மதிப்பீடுகள் கூட அங்கு தான் உருவாகின்றன. ஒரு புத்தக வெளியிட்டின் புகைப்படத்தை நீங்கள் upload செய்தால் தான் அந்த புத்தகம் வெளிவந்ததாக அர்த்தம். இது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை சாமான்யர்களுக்கும் தான். விர்ச்சுவல் உலகில் அக்கவுண்ட் இல்லாத நபர் ஒருவித ‘non-exitent entity’ தான்.


அதே நேரம் இணைய இதழ்கள் அவ்வளவு மூர்க்கமாக செயலாற்ற முடியும் என்றும் நான் நம்பவில்லை. அதனால் இத்தகைய நிதர்சனத்திற்குள் சிற்றிதழ்களின் புத்தெழுச்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிற்றிதழுக்கான தேவை இருக்கிறதா என்றால் ஆமாம் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்றால் அநேகமாக இல்லை. ஆனால் எல்லாவகை எதார்த்தத்திற்கும் கேள்வியின்றி தகவமைத்துக் கொள்வது trendy ஆக இருக்கலாம் ஆனால் அது ஆபத்தானது. நாம் இழந்தது என்னவோ அதிகம் தான். முக்கியமாக படைப்புத் தீவிரமும் ஆழ்ந்த வாசிப்பும். நீங்கள் சொல்வது போல் உற்பத்தியும் நுகர்வுமாக கலை அனுபவம் மாறியுள்ளது உண்மை தான். அது முன்னமே வால்டர் பெஞ்சமின் போன்ற கலாச்சார மார்க்சியர்கள் ஊகித்தது தானே. ஆனால் அதற்கு பின்னரும் அபாரமான படைப்புகள் எழுதப்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போதும் எழுதப்படுகின்றன. அதே நேரம் இலக்கியத்திற்குள் சந்தை மதிப்பீடுகள் முன்னெப்போதையும் விட ஆழமாக ஊடுருவியுள்ளது என்பது நிஜம். பின்நவீனவாதிகள் எல்லா மதிப்பீட்டு அடிப்படைகளையும் கேள்விக்குட்படுத்தி காலிசெய்து விட்டால் சுதந்திரம் கிட்டிவிடும் என்று நம்பினார்கள். ஆனால் உலகம் முழுதுமே அப்படி நடக்கவில்லை. அந்த வெற்றிடத்தை சந்தையும் மேலோட்டமான அரசியல் சரிநிலைகளும் கைபற்றின. high culture serious, art போன்ற விஷயங்கள் ரொம்ப நாட்களாகவே மேலை நாடுகளில் சரியத்துவங்கி விட்டது. சமீபத்தில் பாப் டிலனுக்கான நோபல் அச்சரிவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான்(தனிப்பட்ட ரீதியில் பாப் எனது நாயகர்களில் ஒருவர் தான் எனினும்… )


அதற்காக இப்போது சும்மா இருக்க வேண்டியது தான் என்றில்லை. தீவிர இலக்கியத்தின் மரபார்ந்த மதிப்பீடுகளையும் அடிப்படைகளையும் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று தான் கூறுவேன். இலக்கியத்திற்கு தற்போது பொதுவெளியிலும் பிரபல ஊடகங்களிலும் கிடைத்திருக்கும் இடத்தை எதிர்மறையாக நோக்க வேண்டியதில்லை. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். என்ன அவை இலக்கிய மதிப்பீடுகளை ஜனரஞ்சகத்தை முன்னிட்டு உருவாக்குவதற்கான ஆபத்தையும் கொண்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் அத்தகைய காலகட்டத்தை நோக்கித் தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது (இந்த இடத்தில் நான் எனது pessimism த்தை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என நினைக்கிறேன்) ஆயினும் எல்லாவற்றையும் விட முக்கியமான வழி நல்ல படைப்புகளை உருவாக்க முயல்வதுதான் இல்லையா.. சொல்லப் போனால் அது தான் எளிமையான வழியும் கூட.


இன்னொரு விஷயம் தொண்ணூறுகளின் நாவல் குறித்து நீங்கள் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொண்ணூறுகளில் உருவான நாவலின் எழுச்சி தமிழ் இலக்கியத்தின் பெருநிகழ்வுகளில் ஒன்று என்பது தான் எனது எண்ணம். அதற்கு முன் நல்ல நாவல்கள் வந்தன தான் எனினும் நாவல் வகைமையின் முழுச்சாத்தியத்தையும் அவை பயன்படுத்தவில்லை என்பது நிதர்சனம். இந்நிகழ்வை வெறும் சந்தைமயத்தின் அல்லது அச்சுத்துறையின் வளர்ச்சியின் விழைவாகக் கூறுவதெல்லாம் தத்துவார்த்த க்ளிஷேவில் சொல்வதென்றால் எந்திரவியக் குறுக்கல்வாதம். அப்படி பார்த்தால் ரஷ்ய செவ்வியல் நாவல்களை என்ன சொல்வீர்கள். மகாபாரதத்தையும் கம்பராமாயணத்தையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள். எல்லா செயல்பாடுகளைப் போலவே இலக்கியத்தின் மீதும் பொருளியல் எதார்த்ததின் தாக்கம் உண்டு தான். ஆனால் அது தான் இலக்கியப்ப்போக்கை தீர்மானிக்கிறது என்பது நடைமுறை உண்மையில்லை. பொதுச்சூழலை வேண்டுமானால் அவை பாதிக்கலாம். ஒரிஜினலான கலைஞர்களைப் பொறுத்தவரை அப்படி குறுக்கிவிட முடியாது. வேறெதையும் விட எழுத்தாளனின் படைப்பைத் தீர்மானிப்பது அவனது சொந்த கனவு தான். அது சொந்தமாகத் தான் இருக்கும் என்பதில்லை பெரும்பாலும் தனது முன்னோடிகளிடம் இருந்து அவன் ஆகர்ஷித்துக்கொண்டதாகக் கூட இருக்கலாம். தாந்தேயை நரகத்தினூடும் சொர்க்கத்தினூடும் வழிநடத்திச் சென்றது விர்ஜில் தானே. அது எப்போதுமே அப்படித்தான் இலக்கியம் சமூக வரலாற்றைக் காட்டிலும் இலக்கிய வரலாற்றுக்கே நெருக்கமானது.


*


கே: உங்கள் கவிதையில் ஒரு வேடிக்கைப்பையன், முதிராமனம், பிள்ளைமைப் பைத்தியநிலை என்பது ஒரு விசாரணைக்குரலாக, கலைத்துப்போடுதலாக, நையாயாண்டித் தரப்பாகவும், மறுபக்கம் மருட்சியும் மடமும் கொண்ட பீதியுற்ற மனமாகவும் வெளிப்படுகிறதே ?


ப : நிஜம் தான். எனக்கு அது போன்ற ‘boyish’ ஆன கவிதை சொல்லியின் குரல் மிகவும் பிடித்துள்ளது. முக்கியமானது அதில் உள்ள vulnerability கூடவே உற்சாகமும். அந்தக் குரல் தடுக்கி விழுந்த கண்டுபிடித்த ஒன்று தான், கவனமாக நெய்யப்பட்டதல்ல. அது தன்னளவிலேயே ஒரு விளிம்பு நிலையில் உள்ள குரல் என்பதால் அதால் பெரிய பாவனையெல்லாம் சுமக்க முடியாது. நம் காலத்தில் நடக்கும் எல்லாவற்றையும் பார்த்து சிரிப்பதற்கான ஒரு கோணம் உள்ளது என நம்புகிறீர்களா, ஒட்டுமொத்தத்தையும் ஒரு நையாண்டியாக மாற்றுவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருந்திருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் அந்த வாய்ப்பு அதிகம். அதற்காக என் கவிதைகள் American funny videos போன்றோ standup comedy போன்றோ அல்லது feel good moviesகளாகவோ ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை எப்போதுமே உண்டு, வாசகப் பொதுவெளி அதை விரும்பினாலும் கூட. அது போன்ற கவிதைகளை நிறைய வாசிக்கமுடிகிறது இப்போதெல்லாம். எனக்குத் தெரியாது நானே கூட அப்படிப்பட்ட சில கவிதைகளை எழுதியிருக்கலாம்.


களம் காலம் ஆட்டத்தில் நிறைய கவிதைகள் நீங்கள் சொல்வது போன்ற முதிராக் குரலில் எழுதப்பட்டிருந்தன என நினைக்கிறேன். ஆனால் வாலில் கணிசமான அளவு அந்த தன்மையை தாண்டியிருப்பதாகவே படுகிறது. ஆயினும் எப்போதும் அந்த பதின்வயது நேரட்டரை கூட கொள்ளவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். ஏனெனில் விளையாட்டுத்தனம் படைப்பூக்கத்திற்கு அருகில் உள்ள ஒரு மனோபாவம் தான். அத்தகைய மனோபாவத்துடன் பார்க்கும் போது ரியாலிட்டியில் இல்லாத பல புதிய ரகசிய சுரங்கப் பாதைகளைக் காணமுடிகிறது. கூடவே விளையாட்டு என வரும் போது அதில் மற்றவை அவசியமாகிறது இல்லையா. அது மட்டுமல்ல அந்த மற்றமைக்கு உங்கள் சுயத்துக்குள்ள அதே சரிசமமான இடமும் வழங்கப்பட்டாக வேண்டியுள்ளது. போரில் எதிராளியை அழிக்க வேண்டியுள்ளது. விளையாட்டிலோ எதிராளி அவசியமாகிறான். முக்கியமான விஷயம் அதன் நோக்கம் எந்த எதிர்மறைத்தன்மையும் அற்றது. ஆனால் கவிதையின் நோக்கம் விளையாட்டு காட்டுவதல்ல. வாசகனுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதல்ல. படைப்பூக்கம் வற்றிவிட்டால் இந்த விளையாட்டுத்தனம் வெறும் கைவித்தையாக மாறிடலாம். பின் சலிப்பூட்டக்கூடிய ஒரு மேஜிக் ஷோ பார்ப்பதைப் போலாகிவிடும். அதில் மந்திரமும் இருக்காது விளையாட்டும் இருக்காது கவிதையும் இருக்காது.


*


கே: 2000த்திற்குப் பிறகு தமிழ்க்கவிதையில் புனைவம்சம் என்பது மேலோங்கி நிற்கிறது. நிறைய மாந்தர்களும், சம்பவ விவரணைச் சித்திரங்களும், காட்சித்தன்மையும் கூடிய கதைப்பரப்பாக இன்றைய கவிதை இருக்கிறது. பிரவர் கவிதை வருகை இதில் ஒரு பெரும்பாதையை திறந்துவிட்டது. உங்கள் கவிதையிலும் அதிஉரைநடைத்தன்மை, சம்பவவிவரணைகள், காட்சிப்புலத்தன்மை, கதைகூறல் அம்சம் மிகுந்து காணப்படுகிறது. பலவிதமான கதைமாந்தர்களும், புனைவுச் சந்தர்ப்பங்களும் நிறைந்த பரப்பாக அது உள்ளது. ஒரு சம்பவம் அடுக்கப்பட்டது போன்ற தோரணை இருந்தாலும், ஒரு விசித்திர ஒழுங்கு, தனித்த அறிதல் என்பது வழியாகவே கவிதைக்கான இணைபிரதி உருவாகிவிடுகிறது. இந்தக்கதை அம்சத்தை உங்கள் கவிதைகள் சார்ந்து கொஞ்சம் விளக்கமுடியுமா?


ப: கவிதையில் Narrative poem என ஒரு வகை உண்டு. விவரணைக் கவிதை எனக் கூறலாம். இது தமிழில் மட்டுமல்ல செம்மொழிகள் எல்லாவற்றிலுமே நீண்ட நெடுங்காலமாக வழக்கில் உள்ள ஒன்று. காப்பியங்களை கதைப்பாடல்களை இதன் வகைப்பாட்டிற்குள் தோராயமாக அடக்கலாம். ஆனால் காப்பிய வகைமைக்கென தனிக்கவிதையியலே உண்டு. ஆனால் சங்ககாலத்தின் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் ஒரு புனைவுத்தருணமும் ஒரு பாத்திரமும் உள்ளன என்பது முக்கியம். கலித்தொகை அகநானூறு போன்ற பழையபாடல்களிலேயே விவரணைக் கவிதைகள் தொடங்கிவிட்டன. அவை சங்கப்பாடல்களின் அழகியலை ஏற்றிருந்தாலும் அதை மீறிச் சென்று நாடகீய சுவாரஸ்யத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம். நவீனக்கவிதையைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே விவரணைக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பிரபலமான உதாரணங்கள் என்றால் பாரதியின் சுயசரிதை, பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடைநாரணன் போன்றவை விவரணைக் கவிதைகள்தானே… ஞானக்கூத்தன் ஆத்மாநாம் போன்றவர்கள் ஒப்பீட்டளவில் அதிக விவரணைக்கவிதைகள் எழுதியவர்கள் எனலாம்.


கவிதை உரைநடைக்கு பல்லாண்டுகள் மூத்தது. ஆனால் ஆச்சர்யகரமாக நிறைய மொழிகளில் நவீனக்கவிதை உரைநடையுடன் ஒட்டிப் பிறந்ததாகவே உள்ளது. எலியட் ஓரிடத்தில் சொல்கிறார் நவீனக்கவிதை பேச்சுமொழியின் ஓசையைக் கைப்பற்ற வேண்டுமென. கூடவே ஜனநாயகம், நவீன அறிவியல் போன்றவற்றால் உருக்கொள்ளத் துவங்கியிருந்த நவீன உணர்திறனை செய்யுளுக்கு புகுத்துவது அசாத்தியமானதாக இருந்தது. ஒரு நவீனஅனுபவத்தை உரைநடை கலவாமல் செவ்வியல்மொழியில் கூறினால் அது தானாகவே பகடியாக மாறுவதைக் காணலாம். சி.மணி இப்படி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். ஆக அது தவிர்க்க முடியாமல் உரைநடையை சென்று சேர்ந்தது. சொல்லப்போனால் உரைநடைக்கவிதைகள் ஆரம்பகால கவிஞர்களான பாதெலேர் மல்லார்மே ஆஸ்கர்ஒயில்ட் போன்றோராலேயே எழுதிப்பார்க்கப்பட்டவைதான். புதியமுயற்சிகள் அல்ல அவை.


ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழில் இந்த விவரணைக் கவிதைகள், கவிதை என்றாலே இந்த வடிவம்தான் எனக் கருதப்படும் அளவுக்கு எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் என்ன என்று சரியாக ஊகிக்கமுடியவில்லை. வாசகமனோபாவமும் இலக்கியபோக்கும் பேரளவு புனைவை நோக்கித் திரும்பியதாலா அல்லது நவீனபுனைவு கவிதையை உட்செறித்துக்கொண்டதாலா.. அல்லதுசுவாரஸ்யத்தினாலா, பொதுச்சூழல் எனும் புதுச்சிக்கலாலா தெரியவில்லை. நவீனத்தின் தனிச்சுயம் தன்னை காலிசெய்து விட்டு மற்றமையில் ஆர்வம் கொண்டது முக்கியமான விஷயமாக இருக்கலாம். எனது கவிதைகளிலும் நீங்கள் கூறும் புனைவம்சம் நிறையவே உண்டு. எனக்கு தனிப்பட்ட ரீதியில் புனைவில் உள்ள ஆர்வம் கூட காரணமாய் இருக்கலாம். என் கவிதைகளில் இணைபிரதிகள் உருவாவது குறித்து எனக்கு சந்தோஷமே. ஆனால் அது திட்டமிட்டு செய்யப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அடிப்படையில் அதற்கான பொறுமை இல்லை எனக்கு. நான் பெரும்பாலும் உத்வேகத்தை நம்பி எழுதக்கூடிய ஒருவன். அதனால் இந்த கவிதைத் தொழில் நுட்பத்தில் எல்லாம் எனக்கு பெரிதாக ஆவல் இருந்ததில்லை. ஒரு விமர்சகனாகத்தான் அவை என் கண்ணில்படுகின்றன. அதேசமயம் ‘வால்’ தொகுப்பு குறிப்பிடத்தக்கஅளவில் lyric poemகளை கொண்டிருந்தது என நினைக்கிறேன்.


*


கே: தத்துவம், வரலாறு, மனிதன், விடுதலை, இலட்சியம், புரட்சி–இச்சொற்கள் சென்ற நூற்றாண்டில் ‘மந்திரத்தன்மை வாய்ந்தவை… இந்தநூற்றாண்டில் அவை உள்ளீடு தூர்ந்து காலிச்சொற்கள் ஆகிவிட்டன. நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பகளும், உழைப்பும், படைப்பூக்கமும் கொண்ட ஒரு வரலாற்றுக்கட்டம் முடிந்து உள்ளீடற்ற மாதிரிகளின் உற்பத்திக்கட்டமாக இது உள்ளது. சாராம்சமற்ற இந்தகாலத்தின், வெற்றிடத்தின் வினோத வேடிக்கைகளை ஒரு துயரமும் கொண்டாட்டமும் கலந்த மனநிலையில் உங்கள் கவிதைகள் அணுகுகின்றன எனலாமா?


ப : அப்படி சொல்லலாம் தான். ஆனால் முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். என் படைப்புகளை என்னால் புறவயமாகக் பார்க்க முடிந்ததில்லை. அவற்றைக் குறித்து நான் பெரிதாக சிந்தித்ததுமில்லை. தவிர கலை இலக்கியம் என்பது ஒருவரது தனிப்பட்ட ஆளுமையின் வெளிப்பாடாகக் கருதவில்லை நான். அதனால் என் உளக்கூறுகளோ நம்பிக்கைகளோ கருத்துக்களோ எவ்வளவு தூரம் என் கவிதைகளை பாதித்துள்ளது என்பது பெரிய சந்தேகமே. பலநேரம் எனக்கு ஒவ்வாத நான் நம்பாத பல விஷயங்களை கோணங்களை எழுதியிருக்கிறேன். எனவே என் கவிதைகள் சார்பாக ஓரெல்லைக்கு மேல் பேசமுடியாது என்பதை சொல்லி விடுகிறேன்.


நான் எப்போதுமே நேரெதிரான உள்விசைகளால் அல்லலுறுபவனாகவே இருந்திருக்கிறேன். வாழ்வின் பிரமாண்டமான அல்லது ஆழமான அடிப்படைகளை நோக்கி ஈர்க்கப்படுபவனாகவும் அதேநேரம் சின்ன சந்தோஷங்களிலும் சிறிய உண்மைகளிலுமே மீட்சி உள்ளதாக நம்புபவனாகவுமே இருந்து வருகிறேன். இந்த இரண்டு தரப்புகளுக்குமே எழுதியுள்ளேன் என நினைக்கிறேன். ஒருவேளை ஒப்பீட்டளவில் இரண்டாவது கட்சிக்கு கூடுதலாக வாக்களித்திருக்கலாம். சமீபத்தில் வெர்ரியர் எல்வின் பற்றி ராமசந்திரா குஹா எழுதிய நூலை ரொம்ப சீரியஸாக படித்துக்கொண்டிருக்கையில் அடுத்த அறையில் அம்மா சமையலில் ஈடுபட்டிருக்கும் சப்தத்தில் கவனம் சென்றது. ஈரப்பாத்திரங்களின் ஒலிகள் கடுகு வெடிக்கும் ஓசை கொத்தமல்லி அறுபடும் சத்தம் தோசை ஊற்றப்படும் நாதம்… நான் சிரித்தபடியே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நான் இந்த இரண்டையுமே எழுத கடமைப்பட்டுள்ளேன் என. புரட்சிக் கவிஞரான நெருதாவின் ‘ode to elementary things’ எவ்வளவு அற்புதமான புத்தகம், தமிழில் அரசியல் கவிஞராக அடையாளப்படுத்தப்படும் ஆத்மாநாம் இயற்கையையும் குழந்தைகளையும் குறித்து அழகான கவிதைகளை எழுதவில்லையா? பேரனுபவங்களையும் இலட்சியங்களையும் போலவே முக்கியத்துவமற்ற எளிய நிகழ்வுகளும் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன தானே. புதுமைப்பித்தன் ஓரிடத்தில் எழுதியிருப்பார் ‘இலக்கியத்தின் பணி வாழ்விற்கு பொருள் அளிப்பது’என்று. எவ்வளவு எளிய துல்லியமான கூற்று. இதே போல பாரதி கவிதைத் தலைவியில் எழுதுகிறார் ‘லௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் பேதை மாசக்தியின் பெண்ணே வாழ்க’ என்று.


உள்ளீடற்ற மாதிரிகள் எல்லாக் காலத்திலும் உற்பத்தி செய்யப்பட்டவை தான். என்ன இந்தக் காலத்தில் அவை கொஞ்சம் கூடுதலாக செய்யப்படுகின்றன. உற்பத்தி அளவிற்கு விமர்சன செயல்பாடு இல்லை என்பதால் எழுதுவதெல்லாமே ஆபத்தான மறதிக்குள் செல்ல நல்ல படைப்புகளை இந்த ’பொதுச்சூழல்’ என்ற உருவக எதார்த்தம் முழுங்கிவிடுகிறது. அதனால் தான் நான் ஒரேடியாக சூழலைக் குறித்தே உரையாடுவது பயனற்றது எனக்கருதுகிறேன். மாறாக நாம் தனித்தனிக் படைப்புகளைக் குறித்து பேசுவேண்டும். எல்லாக் காலத்திலுமே ஒரிஜினலான எழுத்தாளர்கள் குறைவாக இருப்பார்கள். முன்னர் நகல்களும் அதனால் மீடியாக்ரிடியும் குறைவாக இருந்தன இப்போது அது சூழலின் ஓர் அம்சமாக மாறியுள்ளது அவ்வளவு தான் வித்தியாசம்.


ஒரு சுவாரஸ்மான விஷயம் என்னெவென்றால் கவிதை நிரந்தரமாக அவசர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய ஒரு நோயாளியைப் போலவே வாழ்ந்து வந்துள்ளது. பாரதிக்கு பின் வந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார் என்ற முன்னரே சொல்லியாயிற்று. பாரதியும் அவர் காலக் கவிதையின் நிலை குறித்து வருந்தியுள்ளதாக ஞாபகம். எழுத்தில் இருந்து எந்த சிற்றிதழ்களின் தலையங்கத்தைப் பார்த்தாலும் கவிதை குறித்த உற்சாகத்தை விட கவலையே மிகுந்துள்ளதைக் காணலாம். எழுத்தின் தொடக்க கால கட்டுரைகளில் மட்டும் தான் உற்சாகம் தென்படுகிறது. இப்போது கூட வருடத்தில் நாலைந்து பேராவது சொல்லிவிடுகிறார்கள் கவிதை முட்டுசந்தில் நிற்கிறது மூலையில் நிற்கிறது என. ஒருவேளை கவிதை எப்போதுமே முட்டுசந்தில் தான் நிற்கும் போல. ஒருவேளை எல்லா மொழிகளிலுமே இப்படி தான் போல. ஏனெனில் பொதுவான சூழலைப் பற்றி எண்ணுகையில் அத்தகைய மனநிலை மட்டுமே எஞ்சுவதாக இருக்கலாம். ஆனால் எல்லா சூழலிலுமே நல்ல கவிஞர்கள் தம் போக்கில் எழுதிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது, விமர்சகர்கள் கவனித்தார்களோ இல்லையோ.


கலைக்கும் தத்துவத்திற்கும் ஆன உறவு ஒரு கோணத்தில் எதிரானது ஒரு கோணத்தில் நுட்பமானது. பிளேட்டோவின் சிந்தனை கவித்துவத்திற்கு நெருக்கமானது. ஆனால் அவர் கவிஞர்களை நாடு கடத்த விரும்பினார். ஏனெனில் கலை பெருமளவு உணர்ச்சிகளின் மீது வேலை செய்வது. தத்துவ மனதால் அதை ஆபத்தாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இரண்டும் பலநேரம் ஒரே விதமான அடிப்படைக் கேள்விகளை எதிர்கொள்பவை. தற்போது தத்துவம் கிட்டத்தட்ட ஒரு கல்விப்புலமாகச் சுருங்கிவிட்ட பின் அதன் பல கேள்விகள் அறிவியலின் தோளுக்கு மாற்றப்பட்ட பின் தத்துவார்த்தமான அக்கறைகளுக்கு இப்போது இருக்கும் ஒரே இடம் கலை இலக்கியம் தான். அதே நிலை தான் ஆன்மிகத்திற்கும்-ஆன்மிக சந்தையை கணக்கில் எடுக்காவிட்டால். ஆனால் எப்போதுமே இலக்கியம் ஆன்மிகம் தத்துவம் இரண்டிற்குமே மிக நெருக்கமான உறவையே பேணிவந்ததுள்ளது. அது எப்பவும் அப்படித்தான் இருக்கும். அதேநேரம் அவற்றுள் கரையாமல் இருந்து வருவதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் அதனுடைய பணி வேறு.


புரட்சி விடுதலை.. இதைப்பற்றி என்ன சொல்ல. நாம் என்ன சொன்னாலும் புரட்சியின் நூற்றாண்டு முடிந்துவிட்டது. அதனால் தான் பகடி இல்லாமல் நம்மால் பொதுவிஷயங்களைக் குறித்து எழுதமுடிவதில்லை. அவநம்பிக்கை தான் சூழ்ந்துள்ளது இதில் பொய்த்தோரணை எல்லாம் காட்ட விருப்பமில்லை. உபயோகம் தான் முக்கியம், மோடி நமது பிரதமராகியுள்ளார் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகி உள்ளார். சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின் நாம் எல்லோருமே பிரபலங்கள் ஆகிவிட்டோம். போதும் மீண்டும் எனது பெசிமிஸத்தை பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் பிரதானமான விஷயம் கலாச்சாரத்தின் மீதும் சமூகத்தின் மீது நமக்கு அக்கறை உள்ளதா என்பது தான். அவநம்பிக்கையும் விமர்சனமும் இந்த அக்கறையின் பாற்பட்டதாக இருந்தால் ஒரு வகையில் அது அவசியமே.


மற்றபடி இலக்கியம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றெல்லாம் தோனவில்லை. அது இலட்சியங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ரொம்ப அதிகம். போன நூற்றாண்டின் பேரழிவுகளுக்குள் இருந்து எழுதிய கவிஞர்களின் அபிப்ராயம் கூட அது தான். ஏனெனில் கலைக்குள் இயல்பான ஒரு செயலூக்கமற்ற தன்மை இருக்கிறது என தோணுது. பங்குபெறாத ஒருவித பார்வையாளத்தனம். வியாசர் கூட முதலில் குருஷேத்திரப் போரை நிறுத்தத் தானே முயற்சித்தார் . ஆனால் அவரால் முடியவில்லை, அவர் பாரதம் பாடினார். ஏனெனில் அவரால் முடிந்ததெல்லாம் உலக நாடகத்தையும் மானுட மேன்மையையும் கீழ்மையையும் பதிவு செய்வது தான். பலநேரங்களில் அது தான் அனைவருக்கும் சாத்தியம் அதாவது சாட்சியமாக இருப்பது.


*


கே: நிரந்தர மோட்சங்கள், சாரமான அனுபவங்கள் என்பதை விட இனி தற்காலிகமான குதூகலங்கள், தருணஅனுபங்களே சாத்தியம் என்னும் பார்வை உங்கள் கவிதைகளில் ஓடுகிறது. இன்றைய ஸ்திதியில் நமக்கு எல்லாமே கிடைக்கக்கூடியனதான். ஆனால் எதுவும் அதன் சாரத்தில் இல்லாமல் ஒரு பின்னத்தன்மையில், ஒரு நகல் அனுபவம் தான் சாத்தியம் என்னும் பார்வை வெளிப்படுகிறதே?


ப : நிரந்தர மோட்சங்கள் எல்லாம் நமது நோக்கமில்லை. உரையாடல்களின் போது நண்பர்கள் சிலர் எனை சாரம்சவாதி என விமர்சித்ததுண்டு. ஓரெல்லை வரை அதை நான் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். அடிப்படைகளை குறித்த கவனம் இலக்கியத்திற்கு அவசியம். ஆனால் அவற்றைக் நேரடியாகக் கையாள்வது சாத்தியமில்லை. தவிர இப்போது மட்டுமல்ல எப்போதுமே பின்னமான நகல் அனுபவம் தான் மனித இனத்திற்கு வாய்த்துள்ளது. கேவல ஞானம் போன்ற சாராம்ச அனுபவம் நமக்கு வாய்ப்பில்லை. பிளேட்டோ கவிஞர்களை மெய்ம்மையில் இருந்து மூன்றடுக்கு விலக்கி வைப்பது ஒரு விதத்தில் சரிதான். ஏனெனில் அருவத்தைப் பற்றி பாடுவதென்றால் கூட உருவத்தை தான் பயன்படுத்த வேண்டும். நோக்கம் universal ஆக இருக்கலாம் ஆனால் எழுத்தின் பாதை particular இல் தான் இருக்கிறது. அதனால் வெள்ளரிக்காய்களைப் பற்றியும் தீயணைப்பானைப் பற்றியும் வீடு காலி செய்வதைப் பற்றியும் எழுதுவதை வேறொன்றின்றகான ஒரு வாய்ப்பாகத் தான் நான் கருதுகிறேன். வாழ்வு பெரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2017 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.