வெற்றி –கடிதம் 2

images



வணக்கம் ஜெயமோகன்


ரொறொன்டோவிலிருந்து சுமதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் ”வெற்றி” சிறுகதை வாசித்தேன், ஒரு காலகட்டத்தின் பதிவை அதாவது காஸ்மபொலிட்டன் கிளப் இன் ஆரம்பம், அங்கு வந்து செல்லும் ஆண்கள் எப்படியிருப்பார்கள், அங்கே என்ன நடக்கும், என்ன பேசிக்கொள்வார்கள் போன்றவற்றைப் பதிவு செய்து வாசிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாகக் கதையை நகர்திக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள்.


நமச்சிவாயத்தின் மனைவியின் அறிமுகத்தின பின்னர் கதை இப்படித்தான் முடியப் போகின்றது என்று நான் எதிர்பார்த்தது போலவே முடித்தும் உள்ளீர்கள். என்ன ஒரு வக்கிரம். உங்களிடம். முடிவு இப்படியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு காச நோய் மகனை அறிமுகப்படுத்தி, அவன் உயிருக்குப் போராடுவதயாய் கதையை நகர்த்தி, மகனின் உயிரைப் பகடக்காயாக்கி, நீங்கள் எழுத விரும்பியதை நியாயப்படுத்தியிருக்கின்றீர்கள்.


பெண்களை வெல்ல முடியும், வெல்ல முடியாது என்பது இங்கு வாதமல்ல. அது இருவர் மனம் சம்மந்தப்பட்டது, ஆனால் பணம் படைத்த எந்த ஆணும், கையறு நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை வெல்ல முடியும் என்ற உங்கள் கற்பனைதான் வலிப்பதாக உள்ளது. விளையாடிப் பார்க்கின்றீர்களோ என்ற கோவம் வருகின்றது. பணத்துக்கும் மீறிய ஒன்றுள்ளது. நீங்கள் ஆணாக இருப்பதனால் அதனை உங்களால் அடையாளம் காண முடியவில்லை.


நட்புடன்

சுமதி


***


அன்புள்ள சுமதி,


கடுமையான கடிதம். எனக்கு நண்பராக இருப்பது கொஞ்சம் கடினம்தான் என்ன?


நான் அக்கதையை வழக்கம்போல என் பாணியில் எழுதினேன். ஒரு களம், சில மனிதர்கள். ஆணும் பெண்ணுமாக அம்மனிதர்களின் வாழ்க்கையை நான் உணர்வுபூர்வமாக நடிக்கிறேன். அதுவே என் எழுத்து. அக்களத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது அக்களமே முடிவெடுக்கிறது. அதற்கு வெளியே இருக்கும் நான் அல்ல. பலசமயம் என் எண்ணம், நிலைபாட்டுக்கு மாறாகவேகூட என் கதைகள் அமைகின்றன. அது அப்படித்தான்.


வெற்றி கதை எனக்குக்கூட கொஞ்சம் உறுத்தல்தான். ஆனால் நேற்று எழுதிய வெண்முரசில் அமைச்சர் அரசனிடம் சொல்கிறார். ‘அடிப்படையில் அத்தனை மனிதர்களும் பலவீனமானவர்கள். அதைத்தான் மந்திரம் போல அரசன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளவேண்டும்’ அதுதான் அக்கதையின் சாரம் என எனக்கே நானே சொல்லிக்கொண்டேன். பெண்ணோ ஆணோ அல்ல. அக்கதையில் அத்தனை பேரும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள்


இதுதான் என் தரப்பா என்று கேட்டால் இல்லை. இக்கதைக்குள் இப்படி நிகழ்ந்தது. இவ்வுண்மையைக் கண்டு அஞ்சி நான் ஓடி அறம் போன்ற ஒரு கதைக்குள் ஆறுதல் தேடவும் செய்வேன்


ஜெ


***


வெற்றி [சிறுகதை]


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.