ஓரு யானையின் சாவு

IMG-20170509-WA0003(1)


 


வணக்கம்.


நேற்று காலையிலேயே அறிந்த ஒரு செய்தி இப்போதுவரை மனசைக் குடைந்துகொண்டிருக்கிறது. ஒரிசாவில் கோடை வெயில் தாளாமல் ஒரு யானை இறந்திருக்கிறது. கோடை வந்தால் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் வாடிவந்தங்கிச் சாவதை சமீப ஆண்டுகளில் கண்டுவருகிறோம். ஆனால், யானை என்னும் பேருயிர் அப்படிச் செத்துப்போனது என்பது எனக்குப் பெரிய அதிர்ச்சி. தாகம் தணிக்கவும் பசியாறவுமாக களக்காடு மலைக்கிராமங்களில் புகும் யானைகள் எனக்கு ஒருவித உற்சாகத்தை அளிக்கின்றன. அவை தன் தேவைகளை எளிதில் அடைகின்றன. அவற்றின் முன் பிற உயிர்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. காட்டில் உலவும் யானைக்கு மனித தலையீடு இல்லாமல் இறப்பு சாத்தியமல்ல என்பது இதுநாள் வரை என் நம்பிக்கை. அப்பது அப்படி அல்ல என்று இப்போது ஊர்ஜிதப்படுவது போல் இருக்கிறது. சூரிய உஷ்ணத்தில் வீழ்ந்த அந்த யானை ஒரு பெரும் சக்தியின் தோல்வி என்று தோன்றுகிறது.


என்பி லதனை வெயில்போலக் காயுமே


அன்பி லதனை அறம்.


என்ற குறளும் இச்செய்தியின் பின்னணியில் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெயில்காய்ந்து கொன்ற யானை இக்குறளையும் எவ்வளவு வலுவானதாக்குகிறது! அறமென்னும் வெயில் கொஞ்சம் பயமளிக்கவும் செய்கிறது.


இன்றும் காலையிலேயே ஒரு செய்தி அத்தோடு ஒரு குறள் இதுவரை மனதை நிரப்பியுள்ள குறளுடன் இணைந்து நெருக்குகிறது. சேற்றில் சிக்கி ஐந்து நாட்களாக வெளியேறமுடியாமல் தவிக்கிறது அசாம் சரணாலயத்தில் உள்ள யானை ஒன்று. இதைப் படித்த கணம் முன்வந்து நிற்கும் குறள்,


காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா


வேலாள் முகத்த களிறு.


யானையின் வீழ்ச்சி ஜீரணிக்க முடியாத வலி. அதைத்தாங்கும் பயிற்சியை உங்கள் புனைவுகளின் மூலம் பழகிக்கொள்கிறேன். இயற்கையின் பெருவலியை உணர்த்துவதாயியும் மயக்குகிறேன்.


deva


தேவதேவனின் மூன்று யானை கவிதைகள் நினைவில் மீள்கின்றன.


 


யானை


 


இப் பூமி ஓர் ஒற்றை வனம்


என்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.


வலம் வரும் நான்கு தூண்களுடைய


ஒரு பேராலயமாகி


வானுயரத் துதிக்கை தூக்கி


கானகம் அதிர ஒலிக்கும்


உலக கீதம்.


 


யானை


 


அப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை


நான் கண்டதில்லை எனினும்


கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ


 


முறியும் பெருங்கிளைகள்


சாயும் குறுமரங்கள்


சிக்கித் தவிக்கும் உயிரினங்கள்


சரிந்த புதர்கள்


நடுவே


திடமாக


எதையோ


பூமியில் ஊன்றி விதைத்துப் போகும்


ஒரு விரல் போல்


யானை ஒன்று நடந்து செல்வதை


 


கோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்


 


ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும்


ஊருக்கு வெளியே இருந்தான் அவன்


ஆற்றில் வெள்ளம் பெருகியபோதெல்லாம்


அடித்துச்செல்லப்பட்டது அவன் குடிசை


(அப்போது அவன் ஒரு சுட்டெறும்பைப்போல்


ஒரு மரத்தில் தொற்றிக்கொண்டான்)


கோபம் கொண்ட யானை


காட்டுக்குள்ளிலிருந்து இறங்கியபோதெல்லாம்


அவன் தோட்டம் சூறையாடப்பட்டது


கவனமாய் விலகி நின்று


அவன் அதைப் பாரத்துக்கொண்டிருந்தான்


 


மறுபக்கம்,


எப்போதும் தூய காற்று


அவனுள் புகுந்து வெளியேறியது,


மன்னிக்கத்தக்க


ஆகக் குறைந்த சிறு அசுத்தத்துடன்.


மிகுந்த ஆரோக்கியத்துடனும்


அச்சமற்றும் இருந்தன


அவனது தோட்டத்து மலர்கள்.


அவனது வானம்


எல்லையின்மைவரை விரிந்திருந்த்து


அந்த வானத்தை மீட்டிக்கொண்டிந்தன


பறவைகளின் குரல் விரல்கள்.


கண்கண்ட ஜீவராசிகள் அனைத்தும்


அவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக்கொண்டன


ஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளாதபடி


பார்த்துக்கொண்டன விண்மீன்கள்


 


என்றாலும்


ஒரு பெரிய துக்கம்


அவனைச் சவட்டிக்கொண்டிருந்தது


அடிக்கடி


 


அன்று அது தன் பணிமுடித்துத்


திரும்பிக் கொண்டிருந்த காட்சியை,


அதன் பின்புறத்தை, பின்புலத்தை


அவன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்


அதன் கோபம்


அதன் அழிமாட்டம்


அதன் பிறகு அது மேற்கொள்ளும்


நிதானம்


தீர்க்கம்


பார்வைவிட்டு மறையுமுன்


வாலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.


 


*


திருக்குறளும் ஒரு யானை இல்லையா! :-)


 


ஸ்ரீனிவாச கோபாலன்


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 11:37
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.