கிசுகிசு,நேரு,அரவிந்தன் கண்ணையன்

aravi


கிசுகிசு வரலாறு குறித்து…

அன்புள்ள ஜெயமோகன்,


இந்த மின்னஞ்சல் உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன். மீண்டும் விவாதத்துக்குள் செல்லத் தேவையில்லை. நம் தரப்புகள் வெவ்வேறு. ஆனால் உங்கள் மறுப்பில் இருக்கும் சில கருத்துகளுக்கு மட்டும் விடையளிக்க விரும்புகிறேன்.


பேஸ்புக் விவாதமாக இது முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தனிப் பதிவாக எழுதினேன். மேலும், பதிவாக எழுதும் போது இன்னும் விரிவாகவும் எழுத முடியும் என்பதால். மற்றபடி உங்களை பேஸ்புக் விவாதத்திற்கு அழைப்பது நோக்கமல்ல.


“அவர் மானுடத்தை, மனிதர்களை நம்பியவர். தன்னைச்சூழ்ந்தவர்களுக்கு இனியவர்.  கடுமையான மறுப்புகளைச் சொல்லும் திராணியற்றவர்.அவரது ஆட்சியில் அவருடைய உறவினர்களின் செல்வாக்கு மிதமிஞ்சி இருந்தது. கிருஷ்ண மேனன் போன்றவர்களை நட்பின் பொருட்டே அவர் முதன்மைப்பதவிகளில் வைத்திருந்தார். அவருடைய காதலிகள் ஆட்சியில் பலவகையில் செல்வாக்கு செலுத்தினர்.தனிப்பட்ட உணர்வுகளை ஆட்சியுடன் கலந்துகொள்வது அவருடைய பலவீனமாக இருந்தது.”


மேலே இருக்கும் பத்திக்கு மட்டும் சுருக்கமான பதில்.


நேருவைப் போன்ற எதார்த்தவாதியை கான்பது அரிது. வரலாறின் மாணவன் அவர். நேரு கனவு நாயகன் (கராகா அவரை ‘Lotus eater from Kashmir’ என்றார்) என்பதும் லட்சியவாதிகளின் நாயகன் என்பதும் ஒருவகையான ‘back hand complement’. ராம் மனோகர் லோஹியா நேருவால் சிறைவைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் எழுதியக் கடிதத்தில் நேருவை ‘வசிஷ்ட பிராமணன்’ என்று சாடினார். உங்கள் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. காலம் காலமாக சொல்லப்பட்டவை தான். ஆனால் நேருவைப் பற்றி அநேகர் எழுதியதை இன்றும் வாசிப்பவன் என்கின்ற முறையில் அக்குற்றச்சாட்டுகளில் சாரம் இல்லை என்பதே முடிவு.  நேருவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய பழைய நண்பர்கள் பலரும் பல காரணங்களுக்காக அவரைப் பிரிந்தார்கள். ராஜாஜி, லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயன், ஆச்சார்யா கிருப்ளானி என்று அந்தப் பட்டியல் நீளும். எல்லோரிடமும் நற்பெயர் சம்பாதிக்க முனையும் ஒருவர் இத்தனை பகையை சம்பாதித்துக் கொள்ள மாட்டார். தன் நண்பன் என்ற போதிலும் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று நினைத்து ஷேக் அப்துல்லாவை சிறை வைத்தார்.


அப்புறம் அந்த காதலிகள் விவகாரம். நேருவின் காதலிகள் இருவர். ஒருவர், எட்வினா. எட்வினா நேருவினால் எந்த பதவி சுகமும் அனுபவிக்காதவர். இரண்டாமவர், பத்மஜா நாயுடு. பத்மஜா பின்நாளில் மேற்கு வங்க ஆளுநர ஆனார். 20 வருடங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் பத்மஜா. மீண்டும் சொல்கிறேன் நேரு அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ அல்ல.


பட்டேலை நிர்வாகத் திறன் மிக்கவர் என்று முன்னிறுத்துபவர்கள் மறப்பது பட்டேல் இறந்தப் பிறகு 14 வருடங்கள் நேரு ஆட்சி செய்தார். திறம்படவே. பட்டேல் ஒரு தளகர்த்தர் அவ்வளவே. அதை நன்கு உணர்ந்தவர் காந்தி. நேரு சீரிய நிர்வாகி. கனவுகளையும் லட்சியங்களையும் எதார்த்த நிதர்சனமாக்கத் தெரிந்தவர். நேருவின் பதவிக் காலத்தில் அவரால் உருவாக்கப் பட்ட ஸ்தாபனங்களின் பட்டியலை நோக்கினாலே அது தெளிவாகும்.


ஸ்ரீநாத் ராகவனின் புத்தகத்தில் நேரு வெளியுறவு அதிகாரிகளுக்கான அமைப்பை உருவாக்கினார் என்கிறார். அமெரிக்காவில் ப்ரூக்கிங்ஸ் ஆய்வகம் மிக மிக முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முடிவுகள் எடுக்க வல்லுநர்களின் ஆய்வுகள் தேவை என்றுக் கருதி 1916-இல் நிறுவப்பட்டது. இந்தியாவில் அப்படி வெளியுறவுக்கு ஸ்தாபனம் அமைக்கப் பெற்று முதல் பட்டதாரிகள் 1948-இல் தான் வந்தார்கள். சுருங்கச் சொன்னால், ‘கனவு நாயகன்’, ‘லட்சியவாதி’ என்பது சரியல்ல.


போஸுக்கு நாஜியினைரையோ, ஹிட்லரையோ சரியாகப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் முன் 1939-இல் ஆரம்பித்து நேரு இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்களில் எழுதிய தொகுப்பை சமீபத்தில் படித்து அதுப் பற்றியும் எழுதினேன். உண்மையிலேயே நேருவுக்கு இருந்தப் புரிதல் சர்ச்சிலுக்கு கூட இல்லை என்பது தான் நிஜம். போஸ் பற்றி நல்ல வரலாறு புத்தகங்கள் உள்ளன. நேருவையும் போஸையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட ‘Nehru and Bose: parallel lives’ by Rudrangshu Mukherjee and ‘Her Majesty’s Opponent’ by Sugata Bose இரண்டும் நல்ல நூல்கள். தவிர, மேக்ஸ் ஹேஸ்டிங்ஸ் இரண்டாம் உலகப் போர் பற்றி சமீபத்தில் வெளியிட்டப் புத்தகத்தில் போஸின் ராணுவ அமைப்பின் போதாமை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல வரலாறுப் புத்தகங்களுக்கு இப்போது பஞ்சமில்லை. இந்திய ராணுவம் இரண்டாம் உலகப் போரில் ஆற்றியப் பங்கு பற்றி ஸ்ரீநாத் ராகவனும் யாஸ்மின் கானும் நல்ல நூல்களை எழுதியுள்ளனர்.


“அவரை தெய்வநிலைக்கு கொண்டுசெல்வதில், அவருடைய பிழைகளுக்கும் சரிவுகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை.”


நானும் இது வரை நேருவை தெய்வமாக்கவில்லை. மேலும் அவரின் எந்த தவறுக்கும் சப்பைக்கட்டும் கட்டவில்லை. தரவுகள் என்னை இட்டுச் செல்லும் இடத்திற்கு நான் செல்கிறேன். சம கால எந்த உலகத் தலைவரோடும் ஒப்புமைச் சொல்லக் கூடியவர் நேரு என்பதில் எனக்கு இது வரை ஐயமில்லை.


அரவிந்தன் கண்ணையன்.


***



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.