கடிதங்கள்

vikram


அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,


தங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும் ஏராளமான இளைஞர்களும் தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உறுதி இது – ஊழையும் உப்பக்கம் காணும் உலைவின்மை.


மாமலருடன் முதற்கனலையும் நாளுக்கு அய்ந்து அத்தியாயம் என்ற கணக்கில் -அத்துடன் திரு. அசோகமித்ரன் அவர்களின் சிறுகதைகள்-குறுநாவல்கள், திரு. பிரபஞ்சன் அவர்களின் “நாவல் பழ இளவரசியின் கதை” சிறுகதை தொகுப்பு என சிலவற்றையும் வாசித்து வருகிறேன். தொடக்கத்தில் இது ஒரு இயந்திரத்தனமான சடங்கு போல் தோன்றியது இப்போது சுகமான ஒன்றாக செல்கிறது.


மாமலரையும் முதற்கனலையும் ஒரே சமயத்தில் படிப்பது சற்று குழப்பிவிடும் என்று எண்ணினேன் ஆனால் அவ்வாறு ஆகவில்லை. மனம் அவ்வவற்றை தனித்தனியாக பிரித்துக்கொண்டு அவ்வவற்றின் வழியே தொடர்கிறது. உங்கள் இணையப் பக்கம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக படித்தது, தஞ்சை சந்திப்பு வந்தது இவற்றின் வாயிலாக ஏதோ ஒன்று ஆகிவிட்டது – வெளியேற்ற முடியாத பாம்புக் கடியின் விஷம் போல – அனுமன் வாலில் இடப்பட்ட தீ போல – குருவிடம் பெற்ற தீட்சை போல – ஏறிக்கொண்டே செல்கின்ற, வளர்ந்து கொண்டே செல்கின்ற, பின் திரும்புதல் இல்லாமல் முன்னேறி மட்டுமே செல்ல வழிதருகின்ற ஏதோ ஒன்று ஆகிவிட்டது.


அன்பைப் பகிர்தலே இலக்கியம் என்று இப்போது தோன்றுகிறது. தாக்கத்தினால் மனத்தில் தோன்றுபவற்றை எல்லாம் உங்களுக்கு எழுதுவேன், பொருட்டாக கொள்ளத்தக்கது என்று தாங்கள் கருதுபவற்றை மட்டுமே பொருட்டாக கொள்வீர் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு உங்களிடம் எனக்கு இருப்பதால்.


அன்புடன்,

விக்ரம்,

கோவை


 


அன்புள்ள ஜெ,


மடிக்கணினி முடங்கியதால் பட்ட அவதிகளை விவரித்திருந்தீர்கள். சேவைத்துறை ஊழியர்களின் பொறுப்பு துறப்பு தரும் அவதி புதிதல்ல என்றாலும், உங்கள் வெண்முரசு தொடரின் வரலாற்று முயற்சியின் இடையில் இது போன்ற இடர்களும் நேர விரயமும் வருத்தமளிக்கின்றன. இதை ஒட்டி ஒரு கேள்வி. பொருத்தமில்லாதது என்றால் மன்னிக்கவும்:


தாளில் எழுதும் வழக்கத்தை முற்றிலும் துறந்து விட்டீர்களா? எழுதும் முறை படைப்பூக்கத்தைப் பாதிக்கிறதா? இரு நாட்களும் தாளில் எழுதி இணைய நிலையத்தில் மின் நகல் எடுத்து தளத்தில் பதிவேற்றியிருந்தால் வெண்முரசை உங்கள் கையெழுத்தில் படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமே! அல்லது கைபேசியில் புகைப்படமாக நண்பர்களுக்கு அனுப்பியிருந்தால் அவர்கள் தட்டச்சு செய்து திருப்பி அனுப்பியிருப்பார்களே (வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் செய்வேன்).


கைபேசியில் செல்லினம் போன்ற செயலியை நிறுவிக்கொண்டால் இது போன்ற அவசரத்தேவைக்கு உதவக்கூடும். சற்று மெதுவாக நடக்கும் ஆனால் வேலை முடிந்துவிடும். பழகிவிட்டால் மடிக்கணிணி இல்லாத அவசரப்பயணங்களில் உதவக்கூடும். சமீபமாக இதை முயன்று பார்த்ததால் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.


இணையதளத்தில் தட்டச்சு செய்ய https://www.google.com/intl/ta/inputt... எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் உள்ளிடும் முறைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் (இதில் உள்ள தமிழ் (பொனெடிக்) முறை எனக்கு எளிதாக இருந்தது).


அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை


 


மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,


குற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும் , என் வாசிப்பை குறித்தும் நான் கொண்டிருந்த ஐயங்களை நீங்கள் நீக்கி விட்டீர்கள்.அப்படி பார்த்தால் உணர்வுப்பூர்வமாக நான் கண்டடைந்த இடம் சோனியாவின் பாதங்களை ரஸ்கோல்னிகோவ் முத்தமிடும் அந்த இடம்,பின் அவர்கள் இடையே நடக்கும் அந்த உரையாடல் அந்த கதையின் ஒரு மிகவும் உணர்வார்ந்த இடம் என்று எனக்குப்பட்டது. பின் இறுதியில் ரஸ்கோல்னிகோவ் சோனியாவுக்காக தன் வாழ்க்கையை அமைத்து நாவலை முடித்து இருந்த விதம் எப்படி அந்த மனிதன் கற்பானா வாதத்தில் இருந்து எதார்த்ததிற்குப் படிப்படியாக வந்தான் என்று சொல்லி முடித்து அந்த இடத்தில் இருந்து ஒரு புதுக் கதை பிறக்கிறது.


ஆனால் நீங்கள் சுட்டி காட்டி சொல்லிய அந்த கடிதம் ரஸ்கோல்னிகோவ் அவன் சகோதரிக்கு எழுதியதாக குறிப்பிட்டு இருந்ததீர்கள்.ஆனால் அவன் அம்மா தானே அந்த கடிதத்தை ரஸ்கோல்னிகோவுக்கு எழுதியது.பின் துனியாவும் அவனுடைய தங்கை தானே.நீங்கள் அந்த கடிதத்தை தான் சொல்கிறீர்கள் என்றால் அது உண்மையே. அதை புரிந்து கொள்ள எந்த

விமர்சனத்துணையும் தேவை இல்லை தான் .


நான் ஏதேனும் அதிகப் படியாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.என் கடிதத்திற்கு எனக்கு விளக்கம் அளித்தமைக்கு


நன்றி


இப்படிக்கு ,


பா.சுகதேவ்.

மேட்டூர்.


 

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்
சிறுகதைகள் கடிதங்கள் 19
சிறுகதைகள் கடிதங்கள் 18
சிறுகதைகள் கடிதங்கள் 17
சிறுகதைகள் கடிதங்கள் 16
சிறுகதைகள் கடிதங்கள் -15
சிறுகதைகள் கடிதங்கள் -14
கடிதங்கள்
கடிதங்கள்
தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2
தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2
கடிதங்கள்
கடிதங்கள்
ஒரு பழைய கடிதம்
யானைடாக்டர், கடிதங்கள்
கடிதங்கள்
ஏழாம் உலகம் :கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.