இருவெற்றிகள்

thirumula

திருமூலநாதன்


அன்புள்ள ஜெயமோகன்,


என் முனைவர் பட்ட ஆய்வு சென்ற வாரத்தோடு நிறைவடைந்தது. ஆய்வேடும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வேட்டின் முன்னட்டை இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஆடல் கோட்பாடு சார்ந்தது என்பது தாங்கள் அறிந்ததே. ஆய்வின்போது ஆய்வாளர் குழுமங்களில் மட்டுமல்லாமல் வேறுபல பொறியியல் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஆடல் கோட்பாடு குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நம் சொல்புதிது குழுமம் அதில் முக்கியமானது. அந்தவகையில் இக்கோட்பாடுகளுக்கு ஒரு வாசகப்பரப்பு உருவாகி வந்ததில் மகிழ்ச்சி.


நேற்று (திங்கட்கிழமை) முதல் 1 நிறுவனத்தில் பணிநிமித்தமாகச் சேர்ந்திருக்கிறேன். உண்மையில் என்னுடைய மாணவப்பருவம் நிறைவடைந்திருப்பது இப்போதுதான் என்பதால் கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. செம்மையாகச் செய்வேன் என்று நம்புகிறேன். தங்கள் ஆசிகளைக் கோருகிறேன்.


அன்புடன்,


த.திருமூலநாதன்.


***


அன்புள்ள திருமூலநாதன்,


அரிய ஒரு தலைப்பில் முக்கியமான ஆய்வைச் செய்து வென்றிருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஆய்வைப்பற்றிய கட்டுரை எனக்கு முக்கால்வாசிகூட புரியவில்லை. ஆனால் பல விவரமறிந்த நண்பர்கள் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டார்கள்.


ஜெ


***


அன்புள்ள சார்.


நலம்தானே!


தெலுங்கு பத்திரிகையாளராக எனக்கு ‘லாட்லி ஊடக விருது’ நேற்று முந்தினம் அளித்தார்கள். ‘Population first’ என்ற தன்னார்வ நிறுவனம் வழங்கும் விருது இது.


பெண்களின் பிரச்சனைகள் மற்றும் சாதனைகளுக்கு சம்பந்தப்பட்ட செய்தி, கட்டுரைகளுக்கு அளிப்பார்கள். இந்தியாவில் விவித மாநிலங்களில் உள்ள செய்தியாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள் தம்மில் சிலருக்கு கொடுக்கும் விருதுதான் இது.


ஆனாலும். எங்கள் ஊடக நிறுவனத்தை கடந்து நாங்கள் பெரும் ஒரு சிறிய ஊக்கம் இது. நான் ஈநாடு தெலுங்கு பத்திரிக்கையில். தினசரி வரும் ‘வசுந்தரா’ என்ற பெண்கள் இதழில் கடந்த நான்கு ஆண்டுகளாய் பணிபுரிகிறேன். 2015-16ல் நான் இஸ்ரோவின் ‘மங்கள்யான்’ ப்ராஜெக்ட் துணை இயக்குநர் ரித்து கரிதால் பற்றி எழுதிய கட்டுரைக்காக இந்த விருது.


அதே வருடம்தான் நான் வானவன் மாதேவி சகோதரிகளை பற்றியும் எழுதி இருந்தேன். 2015 டிசம்பர் விஷ்ணுபுரம் விருது விழாவில் அவர்களை சந்தித்து. பிறகு தொலைபேசியில் பேட்டி எடுத்தேன். அவர்களை பற்றி உங்கள் குறிப்புகளையும் தெலுங்கில் மொழிபெயர்த்து அந்த கட்டுரை எழுதி இருந்தேன். மிக சிறப்பாக. உத்வேகத்துடன், அவர்களின் இயல்பான நகைச்சுவையுடன் வந்த கட்டுரை அது.


எனக்கு லாட்லி விருது அதற்குத்தான் தருவார்கள் என்று எதிர்பார்தேன். கடந்த வருடம் விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வரும் முன். வானவன் மாதேவிக்கு தொலைபேசினேன். ‘விழாவுக்கு வரீங்க இல்லையா.’ என்று கேக்க. வல்லபிதான் எடுத்தார். ‘அக்கா பேசமுடியலை. உடல் நலம் சரியில்லை!’ என்றார். கோவை வரும் வழியிலேயே. இறங்கி சேலம் சென்று பார்த்தேன். வானதி குச்சியாக இருந்தார். பேச்சில் ஒலி குறைந்து இருந்தாலும். அந்த தெளிவு மாறவில்லை. அதே சிரிப்பு. கம்பீரம்! அவர்களை பற்றி தெலுங்கில் எழுதிய என் கட்டுரை வாசித்து காண்பித்தேன். தெலுங்கு அவருக்கு 90 சதவிதம் புரிந்துதான் இருக்கிறது. நடுவில் தடுமாற்றத்துடன் என் தமிழ் மொழிபெயர்ப்பு! புன்னகையுடன் கேட்டுகொண்டு இருந்தார். உங்களின் வாக்கியங்கள் வரும் போதெல்லாம். ‘வாத்தியார் சொன்னது தானே!’ என்றது போல் சிரிப்பு.


‘இந்த கட்டுரை லாட்லி அவார்டுக்கு nominate பண்ணியிருக்கோம்’ என்றேன். ‘நிச்சயமா வரும் பாருங்க.’ என்றார் வானதி. அடுத்து எங்கள் பேச்செல்லாம். வெண்முரசு பற்றி நகர்ந்தது. சத்யவதி, குந்தி, திரௌபதி. என்று மிக இயல்பாக அவர்களின் நடுவே ஒரு சரடை வரைந்தார் வல்லபி. வெண்முரசுவின் வசனங்கள். வல்லபியின் வட்டார மொழியில், கிண்டலுடன் வெளிவருவது புதுமையாக இருந்தது. வானதி புன்னகையுடன் கேட்டு கொண்டு இருந்தார்.


இன்னொரு விஷயம். தெலுங்கில் இவர்களை பற்றி பிரசுரம் ஆன பிறகு எத்தனையோ குழந்தைகளின். பெற்றோர் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். நான் சென்ற நாளுக்கு கூட விசாக்கப்பட்டினத்தை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அங்கேயே தங்க வைத்து சிகிழ்ச்சை வழங்கி கொண்டு இருந்தார்கள்! வானதி திடீர் என்று. ‘உங்க பத்திரிக்கையில் demonetisation பற்றி எப்படி எழுதுரிங்க. Support பண்றீங்களா.?!’ என்றார். ஆமாங்கா!’ ‘oppose பண்ண தைரியம் இல்ல. இல்லையா.’ ரொம்ப கோபமாக சொன்னார்.


நம்ம கைல ஒன்னும் இல்லீங்க. எசமான்கள் எப்படி சொன்னா அப்படி.’. ‘ஏன் முதுகெலும்பு இல்லலாம இருக்கீங்க.’ என்றார் எரிச்சலாக. நான் இயல்பாக இருப்பதற்காக ‘நல்ல சாப்பிடுங்க வானதி! உங்கள மறுபடியும் பார்க்கும் போது உடம்பு தேறி இருக்கணும்.’ ‘அப்படியே தேறிடுறேன்.’ என்றார் சட்டுனு பாந்தமாக.  லாட்லி பற்றி எழுதத்தான் துவங்கினேன். என் ஆசானாக உங்களுடன் இந்த சிறு மகிழ்ச்சியை பகிர்வது தான் முதலில் என் உத்தேசம்.  திடீர் என்று ஞாபகதுக்கு வந்து விட்டார் சார்.


அன்புடன்,


ராஜு,


ஹைதராபாத்.


***


அன்புள்ள ராஜு


பரிசுபெற்றமைக்கு வாழ்த்துக்கள். இதழியலில் முதன்மையான பரிசுகளுக்கு கடுமையான போட்டி உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். இது உங்கள் வெற்றிதான்


ஜெ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.