அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்

anandamurthi


ஜெ


மூன்று இந்திய நாவல்களை ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். சுருக்கமான ஒப்பீடுதான். ஆனால் மூன்றுநாவல்களையும் ஆழத்தில் சென்று தொடுவதற்கான ஓர் அடிப்படையை அது அளிக்கிறது


கோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மீண்டன என்பதே முக்கியமானது.


கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடிசார் மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.


என்ற ஒப்பீடு இயல்பாக நின்றாலும் அடுத்த வரியில் நீங்கள் சட்டென்று அனந்தமூர்த்தியை ஒரு படி கீழிறக்கிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.


சம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே.


அனந்தமூர்த்தியை அப்படிச் சொல்லிவிடமுடியுமா?


எஸ்.மாதவன்


bhaira


அன்புள்ள மாதவன்,


நான் எவரையும் கீழிறக்கவில்லை. அவற்றின் ஆழம் எங்கே செல்கிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.


தாகூர் சென்றடைந்த மானுடவாதம் என்பது ஐரோப்பாவில் நாநூறாண்டுகளுக்கு முன்னர் ஒரு கொள்கையாக எழுந்தது. ரோமேய்ன் ரோலந்தும், விக்தர் ஹ்யூகோவும் முன்வைத்தது. மானுட உள்ளத்தில் என்றுமுள்ள ‘நான் மானுடன்’ என்னும் தன்னுணர்வின் தத்துவ வெளிப்பாடு அது. மானுடநாகரீகம் அனைத்தையும் தான் என உணரும் பெருநிலை அது. ஒரு மாபெரும் இலட்சியவாதம்.


பைரப்பா சென்றடைவது மரபின் ஆழத்தை. அதன் பழங்குடித்தன்மையை, விலங்கியல்பை, உயிரின் இயக்கவிசையை. அதில் சரிதவறுகளால் ஆன நெறிகள் இல்லை. வாழ்வெனும் மகத்தான நிகழ்வு மட்டுமே உள்ளது. இச்சையை, தாய்மையை, பிறப்பை, இறப்பை அதன் தனிவடிவில் நின்றுநோக்கும் ஒரு மூர்க்கமான தொல்நோக்கு அது. அதன் ஆழம் மேலும் தொன்மையானது.


tagore


தாகூர் முன்வைத்தது ஒரு கவிஞன் சென்றடையும் ஆழம். பைரப்பா முன்வைப்பது ஒரு ஞானி கண்டடையும் வெறுமையும் விளங்கிக்கொள்ளமுடியாத பொருள்செறிவும் நிறைந்த பேராழம்.


அனந்தமூர்த்தி சென்றடையும் இருத்தலியம் சென்ற நூறாண்டுக்காலத்தில் ஐரோப்பாவில் உருவான ஒரு தத்துவத்தை. அடிப்படையில் அது எதிர்மறைத்தன்மைகொண்டது. சோர்வுநோக்குடையது. இலட்சியவாதத்துக்கு எதிரானது. அதனாலேயே குறுகலானது. அனந்தமூர்த்தியின் பிராணேஸாச்சாரியார் அவர் சென்றடைந்த இடத்தில் நிற்கமுடியாது. மேலும் முன்னகர்ந்து தாகூரையோ பைரப்பாவையோதான் சென்றடைவார்


ஜெ


***


தனிப்பயணியின் தடம்


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2017 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.