அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

gul


 


ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நலமா?


நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. ஆனால் நான்கு ஐந்து வருடங்களாக உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடய அனைத்துச் நாவல்களையும் சிறுகதைகளையும், பயணக்கட்டுரைகளையும், வெண்முரசு வரிசையும், வாசித்திருக்கிறேன். தினமும் உங்களுடய வலைதளதையும் வாசிக்கிறேன். இருந்தும் உங்களுக்கு கடிதம் எழுத தோன்றவில்லை. உங்களுடனான தொடர்பு உங்கள் எழுத்தின் மூலமே எனக்கு கிடைத்து விட்டிருந்தது. அச்சமாக கூட இருக்கலாம், ஏன் என்று தெரியவில்லை.


முதல் முதலில் நான் படித்த நாவல் பொன்னியின் செல்வன், ஏனோ சமகாலத்தைவிட சரித்திர நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்தது, பின்பு சாண்டில்யன் நாவல்களில் முக்கால்வாசி படித்து முடித்த பின்பு ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. எதிலோ விஷ்ணுபுரம் நாவலை சரித்திர நாவல் என்று போட்டிருந்தது. நீங்கள் கூறியது போல் விஷ்ணுபுரம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் எளிதில் நெருங்கவிடாத ஒன்று தான் நம்மை பெரிதும் கவர்கிறது. இதுவே எனது நவீன இலக்கிய அறிமுகம், அதன் தீவிரமும், கவித்துவமும், கணவுத்தன்மையும் என்னை ஈர்த்தது. அதன் பின்பு பொழுது போக்கு நாவலை வாசிக்கமுடியவில்லை. பின்பு அசோகமித்திரன், சு. ரா, க. நா. சு, தி. ஜா, என்று முழுநேர நவீன இலக்கிய வாசகனாகிவிட்டேன்.


இப்பொழுது மொழிப்பெயர்ப்பு நாவல்கள் வாசித்து கொண்டிருக்கிறேன் குர் அதுல் ஹைதருடய அக்னிநதி வாசிக்கும் பொழுது முதல் சில அத்யாயங்கள் விஷ்ணுபுரம் வாசிப்பது போல் இருந்தது. கெளத்தம நீலாம்பரனும், பிங்கலனும் பல விதத்தில் ஒன்று போகிறார்கள், கொற்றவையில்வாசித்தது போல் இளைஞர்கள் பெண்கள் அனைவரும் புத்த மதம் நோக்கி செல்கிறார்கள். நாவலின் கட்டமைப்பு வியப்பூட்டுவதாக இருக்கிறது.


காலப்பிரவாகத்தை ஓடையைப் போல் தாண்டுகிறார்கள். முழுவதும் வாசிக்கவில்லை. எதையோ எழுத நினைத்து இதில் முட்டி நிற்கிறேன். இன்னும் பலவாசிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஆசை படுகிறேன்.


நன்றி


இப்படிக்கு


அன்புடன்


ராம்


***


அன்புள்ள ராம்


நீங்கள் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக நாவல்களின் மையங்கள் உருவகங்களாக இருக்கும். ஆங்கிலத்தில் மெட்டஃபர் என்பார்கள். அக்னிநதியில் அந்த நதி- கங்கை- காலமாகவே வருகிறது. அதைத்தான் அக்னிநதி என்கிறார் ஆசிரியை


நாவல்களை வாசிக்கையில் அந்தரங்கமாக ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டே செல்வது ஒரு மிகச்சிறந்த வாசிப்புதான். வாழ்த்துக்கள்


ஜெ


***


அன்புள்ள ஜெமோ


நான் சமீபத்தில் கொற்றவையை வாசித்து முடித்தேன். வாசிப்பதற்கு மிகப்பெரிய தடையை அளித்த நாவல். வாசித்து முடிக்க 3 மாதம் ஆகியது. ஆனால் மூன்றுமாதம் நான் அதில் வாழ்ந்தேன் என்று தோன்றியது. அதன் ஆழம் எனக்கு இன்னும்கூட தெரியவில்லை. ஆனால் அந்த நிலம் மக்கள் எல்லாவற்றிலும் பூர்வஜென்மம் போல இருந்தேன். மூன்றுமாதங்களில் என் மனசு சிந்தனை எல்லாமே மாறிவிட்டது. சரித்திரத்தையும் சிலைகளையும் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. பெரியநாவல்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னீர்கள். என்னை இந்த அளவுக்கு எந்த நாவலும் மாற்றியதில்லை. நான் நகரத்தார் என்பதனால் எனக்கு கண்ணகி குலதெய்வம். அதுகூட காரணமாக இருக்கலாம்


கதிர்


***


அன்புள்ள கதிர்


ஒருநாவல் உங்களில் ஊடுருவுவது உங்களிடம் அது நிகழ்த்தும் விவாதம் மூலமே. நீங்கள் வலுவாக இருக்கையில் விவாதம் ஆழமானதாக ஆகிறது. அதையே தடை என்கிறீர்கள்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.