ஜக்கி கடிதங்கள் -6

wpid-wp-1488155550714.jpeg


ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1


ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2


 



ஆத்மநமஸ்காரம்.


இன்று தங்களின் வலைதளத்தில் சித்தாஸ்ரமம் பற்றி “கேரளத்திலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் தொன்மையான அமைப்பு கட்டற்ற பாலுறவை தன் உறுப்பினர்களுக்கு அமைத்துள்ளது. அன்னைக்கும் மகனுக்கும் இடையேகூட உறவு அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு.”


என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு மேலதிகமாக சித்தாஸ்ரமம் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைக் குறித்த ஐயத்தாலேயே இந்தக் கடிதம்.


நம்முடைய பிதா உலக சாந்தியின் பொருட்டு நமக்களித்த வாழ்க்கை முறையே சாமாஜம் ஆகும். இங்கு ஆண் பெண் என்கிற பேதம் இல்லாததாகும். சுக்கிலம் என்பது பிரம்மமாகும். அவ்வாறான சுக்கிலத்தை உலக சாந்தியின் பொருட்டு சந்தானம் உண்டாக்க வேண்டி மட்டுமே நாசம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் கட்டற்ற பாலுறவு என்பதாக அபத்தமான ஒரு வாதத்தை முன் வைத்த காரணத்தினாலேயே இவ்வாறு எழுத நேரிட்டது அன்றி நமது பிதா கூறியவாறு சமாஜத்தின் நோக்கம் உலகோர் நலமடைய வேண்டியல்லாது உலகோருக்கு புரிய வைக்க வேண்டி அல்ல.


நன்றி


முத்துக்குமார்


*


மதிப்பிற்குரிய முத்துக்குமார் அவர்களுக்கு


மன்னிக்கவும், அச்சொல்லாட்சி பிழையானதுதான்


எளிய ஒழுக்கநெறிகளுக்கு அப்பாற்பட்டு பாலுறவை நோக்கும் அணுகுமுறை என சொல்லியிருக்கவேண்டும்.


ஜெ


 


ஆத்மநமஸ்காரம்.


 



தனது வயிற்றில் பிறந்ததாலேயே தாம் அன்னையாகும் என்றும் தமது பிள்ளை நிமித்தம் தனக்கும் தனது நிமித்தம் பிள்ளைக்குமான கடமைகள் என்று யாதொரு பந்தமும் இல்லை என்பதே சித்தாஸ்ரம சட்டமாகும் அன்றி இங்கு பாலுறவு என்பது குழந்தை பேற்றிற்காக மட்டுமே அதுவும் அவரவரது விருப்பத்தின் பேரில் மட்டுமேயாகும்.

தங்களது கருத்துக்கான நமது மறுப்பையும் தங்களது தளத்தில் பதிவு செய்வது அனைவருக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி.

***


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


ஜக்கி – அவதூறுகள், வசைகள், ஐயங்கள் வாசித்தேன். நான் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.


ஜக்கியின் அத்தனைக்கும் ஆசைப்படு ஆனந்தவிகடனில் வெளிவந்த சமயம் முதல் நான் ஜக்கியை வாசித்தும் அவர் பேச்சுக்களை கேட்டும் வருகிறேன். குமுதத்தில் நித்தியானந்தாவின் கதவைத்திற காற்று வரட்டும் தொடர் ஏற்படுத்திய ஒரு திறப்பை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என்னிடம் ஜக்கியை பற்றியும் நித்தியானந்தாவைப் பற்றியும் என் நண்பர்கள் விவாதித்ததுண்டு. ஒரு சிலர் பகுத்தறிவாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு அதை மறுபடி ஒப்புவிப்பவர்கள் இன்னும் சிலர் ஆழமான கடவுள் நம்பிக்கை பக்தியுடையவர்கள். இந்து மதத்தில் பக்தியும் நம்பிக்கையும் உடையவர்கள் கார்ப்பரேட் சாமியார்களை விமர்சிப்பதற்கு கூறும் காரணம் அவர்களின் நிறுவனங்களின் செல்வ செழிப்பின் மீதான பார்வை தான். அவர்களைப் பொருத்தவரை ஒரு சாமியார் கோவணத்தைத் தவிர வேறு எதையும் சொந்தமாக வைத்திருக்கக்கூடாது. இராமகிருஷ்ணரைப் போலவும் ரமணரைப் போலவும் மிக எளிமையான வாழ்க்கை முறையை தேர்வு செய்திருக்க வேண்டும். உல்லாசமான கார்களில் வலம் வரும் சாமியார்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


நான் அவர்களுக்கு கூறியதெல்லாம் ஒரு சாமியார் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நம் நாட்டில் இல்லை. அவர் செயல்பாடு பிடிக்கவில்லையென்றால் அங்கு போகவேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியாக தவறு செய்திருந்தால் நிரூபணம் செய்யுங்கள் தண்டனை பெற்றுக் கொடுங்கள் அதை விடுத்து வெறுமனே சமூக வலைதளங்களில் கூச்சலிடுவதால் என்ன பயன். ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் தான் என்னை துணுக்குற வைத்தது. மக்கள் அறியாமையை பயன்படுத்தி கார்ப்பரேட் சாமியார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று. என்னால் நீங்கள் கூறியது போல விரிவாக விளக்கிக் கூறும் ஞானம் இருக்கவில்லை. நான் கூறியதெல்லாம் ஒன்றுதான். மக்களை முட்டாளாக எண்ண வேண்டியதில்லை. அதுவும் கார்ப்பரேட் சாமியார்களிடம் பெரும்பாலும் செல்பவர்கள் நிரம்பப் படித்த நிறைய சம்பாதிக்கும் மனிதர்கள். அவர்கள் அறியாமையுடன் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று. இன்று நீங்கள் விரிவாக கூறிய கருத்துக்களை அவர்கள் முன் வைக்க இயலும்.


நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களின் வாசகனாக இருப்பதை நான் பெருமையாக எண்ணுகிறேன் என்று கூறத்தான். இன்னும் சொல்லப்போனால் நான் உங்களின் வாசகன் மட்டுமே இந்நாள் வரை. இன்னும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை உங்களின் கட்டுரைகளை வாசித்து குறிப்பெடுத்து வைத்துள்ளேன். முழுநேர வாசகனாக வேண்டும் என்பதே அவா. மற்றவர்களை வாசித்ததில்லை ஆதலால் தெரியாது. ஆனால் இச்சூழலில் அனைத்து தரப்புகளையும் காழ்ப்பின்றி முன்வைத்து அறிவார்ந்த தளத்தில் விவாதிக்கும் எழுதும் ஒரு எழுத்தாளருடைய வாசகன் என்பது நிச்சயம் பெருமைக் கொள்வதற்குரிய விஷயம் தான்.


என்னிடம் அடையாளச் சிக்கல் எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இதை எழுதும் இந்த நொடி எனக்கு தோன்றுவது நான் நல்ல வாசகனாக இந்திய ஞான மரபின் மேல் நம்பிக்கை உரியவனாக ஆக வேண்டும் என்பதே.


அன்புடன்,


முருகன்.


 


அன்புள்ள ஜெ,



ஈஷா யோகா மையம் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றிய எதிர்ப்புநிலை வதந்திகளுக்கு தாங்கள் அளித்த மிகத்  தெளிவான ஆழமான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் மற்றும் எனது கணவர் மோகன் இருவரும்    தங்களுடைய நீண்ட நாள் வாசகர்கள். மேலும் ஈஷா அன்பர்கள் கூட. உண்மையில் தங்களுடைய படைப்புகளை வாசிப்பதற்க்கும் புரிந்துகொள்வதற்கும் ஈஷா யோகா பயிற்சியே காரணமாக அமைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஈஷா மையத்தின் எதிர்ப்பு (நேரடி மற்றும் இணையதள) தாக்குதலுக்கு தங்களின் பதில் மிகக் கைகொடுத்தது.

 தங்களின் ஒவ்வொரு படைப்பையும் வாசித்து முடிக்கும் தருவாயிலும் கடிதம் எழுத நினைத்து வார்த்தை கிடைக்காமல் விட்டுவிடுவேன்.
இன்று நன்றிப் பெறுக்குடன் எழுத விழைகிறேன்.
 நன்றி,
ராஜி மோகன்.

 


ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1


ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2017 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.