மிகச்சரியாக உளறுதல்

sayal


 


கிபி எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த சீனக்கவிஞர் பை ஜீயி  1986 வாக்கில் சுந்தர ராமசாமியால் மொழியாக்கம் செய்யப்பட்டு காலச்சுவடு மும்மாத இதழில் அறிமுகம் செய்யப்பட்டதனூடாக தமிழ் வாசகர்கள் நடுவே பரவலானார். சுந்தர ராமசாமி ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தான் அக்கவிதைகளை தமிழாக்கம் செய்தார். அன்று மிக இறுக்கமான மொழியும் படிமச்செறிவும் கொண்ட கவிதைகளே தமிழில் எழுதப்பட்டன. சோர்வுநிறைந்த இருண்மைமண்டிய கவிதைகள். பெரும்பாலும் பெருமூச்சுநிறைந்த டைரிக்குறிப்புகள். விதிவிலக்கு பிரமிள் தேவதேவன் போல சிலர்.


 


சுந்தர ராமசாமி பை ஜூயியின் கவிதைகளை அவற்றின் எளிமைக்காகவே மொழியாக்கம் செய்தார். அவற்றில் என்னதான் கவிதை இருக்கிறது என்று சாதாரண வாசகன் கேட்பான். அவை பெரும்பாலும் நேரடியான வாழ்க்கைக்குறிப்புக்கள். அவற்றின் நேரடித்தன்மையே கவிதை என்று அதற்குப்பதில் சொல்லப்பட்டது. ‘ஒன்றுமில்லை, சும்மா சொல்லிக்கிட்டேன்’ எனும் பாவனை. உட்பொருள் தேடுபவர்கள் ஏமாந்துபோகக்கூடும். ஆனால் எளிமையாக வாசிப்பவர்கள் அவற்றை நெடுங்காலம் நினைவில் வைத்திருப்பார்கள். ஏன் நினைவில் நிற்கின்றன அவை என்று பார்க்கும்போது அவற்றின் கவித்துவத்தை உணர்வார்கள்


 


இணையத்தில் சில பை ஜூயி கவிதைகளின் மொழியாக்கத்தை வாசித்தேன்.


 


இரவு முழுதும் உட்கார்ந்திருந்தது


 


 


ஒரு முழு நாளும்


என் வீட்டு வழிநடையில்


இருட்டும் வரையில்


காத்து நின்றிருந்தேன்;


பின் இரவு முழுவதும்


என்னறையில்


விடியும்வரை


உட்கார்ந்திருந்தேன்;


நான் எதுவும் சொல்லாமல்


இதற்கான காரணத்தை


நீ அறிய முடியாது.


இவை அனைத்தையும்


கவனித்திருந்தால்


நீ கேட்டிருக்கக்கூடும்


இரண்டு அல்லது மூன்று


பெருமூச்சுக்களை.


[தமிழாக்கம் சுந்தர்ஜி பிரகாஷ்]


 


விக்ரமாதித்யனின் சமீபத்தைய கவிதைத்தொகுதியை வாசித்தபோது பை ஜூயியின் எளிமை என்று ஒர் எண்ணம் நெஞ்சில் ஓடியது. இத்தகைய கவிதைகளை கண்ணுக்குத்தெரியாத இலக்கு நோக்கி மொழியை எறிதல் என்றுதான் சொல்லவேண்டும். நாலிலே ஒன்றிரண்டு சென்று படுகின்றன, அவை கவிதைகளாகின்றன. எஞ்சியவை வரிகளாக மிஞ்சுகின்றன. பை ஜூயியும் அவ்வாறுதான் எழுதியிருப்பார்


 


கவிமனசு


 


சூரியரே சந்திரரே


சொல்லுங்கள்


நட்சத்திரங்களே


நட்சத்திர நாயகர்களே கூறுங்கள்


 


இபப்டியே


எத்தனை காலம்


 


கடலலைகளும்


சாந்தம் கொள்கின்றன


 


வேட்டைக்காரன் கூட


ஓய்வெடுக்கிறான்


 


கவிமனசு


காற்றில் செய்ததா?


 


என்னும் கவிதை  விக்கியண்ணாச்சியின் வாழ்க்கையை நன்கறிந்தவர்களுக்கு அளிக்கும் உள எழுச்சி  இவற்றை கவிதையாக்குகிறது. ஆனால் இவ்வரிகளை மட்டுமே நினைவிலிருந்து எடுக்கையில் காற்றில் அலைந்த தாசித்தெருக் கம்பனும்,  கஞ்சா பாரதியும் வழியாக நினைவிலெழும் ஒரு முகமிலாக் கவிஞன் இவற்றை மேலும் கவிக்கனம் கொண்ட வரிகளாக்குகிறான்


 


இனம்புரியாத வலிகளாலான கவிதைகள். அவற்றை விளக்காமல் விரிக்காமல் ஏன் சொல்லாமல் பதிவுசெய்ய முயல்கிறார் என்று தோன்றுகிறது


 


என்ன பாடு படுத்துகிறது


 


பக்கத்துப் படுக்கை


காலியாகக் கிடந்தது


என்ன செய்தோம்?


 


பக்கத்துப்படுக்கை


காலியாகக் கிடக்கிறது


என்ன செய்வோம்


 


பக்கத்துப் படுக்கை


காலியாகவே கிடக்கும்


என்ன செய்ய?


 


என்ன பாடு படுத்துகிறது


இந்த பக்கத்துப் படுக்கை


 


விக்கியண்ணாச்சியின் கவிதைகளில் இரு வகை குரல்கள் உண்டு. ஒன்று புலம்பல் என்று சொல்லத்தக்க ஒரு வகை தன்னிரக்க விளக்கம். புலம்பல் என்பது தமிழ் கவிதையின் ஒரு வகை. பத்ரகிரியார் புலம்பல் நம் மரபின் பெருங்கவிதைகளில் ஒன்று. திருவிக கூட முதுமை உளறல் என அதேவகைச் செய்யுள் ஒன்றை அமைத்திருக்கிறார். இது முதல்வகை


 


இன்னொரு வகை அவருடைய பிரகடனங்கள். அவைதான் எப்போதும் ஒரு படிமேலான கவிதைகள். இயல்பாக அவற்றில் ஒரு நக்கலோ சொல்விளையாட்டோ அமைகையில் அவை ஒருவகை ஞானக்கிறுக்குத்தன்மையை அடைகின்றன. இக்கவிதையில் இருப்பு என்னும் சொல் அமைந்துவருவதைப்போல.


 


இப்படி இருக்கிறது


 


தென்காசியிலேயே


இருக்கப்படாது


தமிழ்நாட்டிலேயே


இருக்கப்படாது


இந்தியாவிலேயே


இருக்கப்படாது


இப்படி இருக்கிறது


இருப்பு


 


 


என்னும் வரிகளில் மிகச்சாதாரணமான ஒரு புன்னகை இருக்கிறது. ஆனால் எங்கோ இதை உறுதியாக நீங்கள் திருப்பிச் சொல்லப்போகிறீர்கள். எப்படியோ இது இந்தக்காலகட்டத்தின் வரியாக நீடிக்கப்போகிறது. மெல்லமெல்ல நகர்த்தி நகர்த்திக்கொண்டுவந்து நம் சமகாலப் பொது உணர்வுகளின் அருகே தன் சொல்லாட்சியை கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் விக்கியண்ணாச்சி.


 


விக்கி அண்ணாச்சி உளறுகிறார் என்பதே சரியானது. மிகச்சரியாக அது  அமைந்துவிடுவதற்குப்பின்னால் இருப்பது அவருடைய மொழியறிவு, நாற்பதாண்டுக்காலம் கவிதையன்றி பிறிதிலாது அவர் வாழ்ந்த வாழ்க்கை, அந்த அர்ப்பணிப்புக்கு பரிசாக  அந்த தேவி அளித்த இருள்வெளித்திரிதல்


*


சாயல் எனப்படுவது யாதெனின்


வெளியீடு

படிகம்

நவீன கவிதைக்கான இதழ்

4 – 184 தெற்குத் தெரு ,

மாடத்தட்டுவிளை ,வில்லுக்குறி – 629 180


தொடர்பு எண் – 98408 48681


 


இலக்கியமும் சமகாலமும்


 


தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்


ஒருநாளின் கவிதை


விக்ரமாதித்யனுக்குச் சாரல் விருது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2017 10:38
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.