திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின் ஒரு திறந்தவெளி அரங்கு மிக அழகானது.
கருணா எழுதும் அனுபவக்குறிப்புகளை இணையத்தில் வாசித்தேன். பேருந்தில் முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எழுந்து இடம் கொடுப்பது பற்றிய இரு அனுபவங்களை எழுதியிருக்கிறார். இரண்டு எல்லைகளில் உள்ள இரு அனுபவங்களைக் கோர்த்திருப்பதில் நுட்பம் தெரிகிறது. இரண்டுவகையான பண்பாட்டுச்சூழல். ஆனால் உண்மையான எதிர்வினைகள் ஒன்றுதான்.
மேலைநாடுகளில் முதியோருக்கு எழுந்து இடமளிப்பது அவர்களால் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது உண்மை. அதைப் பரிதாபம் அல்லது ஒதுக்குதல் என அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியன் அதற்காகத் தன் வளர்ப்பால் அடைந்த பண்பாட்டை விட்டுவிடவேண்டுமா என்ன?யோசிக்க வைக்கும் சின்னவிஷயம்.
Published on August 16, 2011 11:30