வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

6885832


அன்புள்ள ஜெ


ஆரம்ப கட்டக் கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு வாசிப்பே போதுமானதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அதுவே ஒரு உரையாடல்தான். மீண்டும் கடிதம் எழுத இதுபோன்ற நிகழ்வு குறித்த அறிவிப்பு வேண்டியிருக்கிறது.


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்கிற அறிவிப்பிற்குப் பின்னர் வந்த கடிதங்களில் இருக்கும் ஒற்றுமையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். வாசகர்கள் அனைவரும் தங்களுக்கே விருது கிடைத்த பெருமிதத்தில் இருக்கிறார்கள். அல்லது தங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவருக்கு அளிக்கப்படவிருக்கும் கவுரவம் என்கிற வகையில் நோக்குகிறார்கள்.


2015 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வண்ணதாசன் அவர்களை முதல்முறையாக சந்தித்தேன். நண்பர் சாம்ராஜ் அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய கவிதைத் தொகுப்புகள் பலவற்றை வாசித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவருடன் எதையுமே பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை. உடனிருந்த கணங்களில் எதைக் குறித்தும் பேசாமல் உடனிருந்தால் போதும் என்கிற மனநிலை.


இம்முறை விஷ்ணுபுரம் விருது விழா முன்னெப்போதையும் விட சிறப்பான ஒன்றாக அமையவிருக்கிறது. ஆண்டுதோறும் விருதிற்கான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கு வழிகாட்டி உங்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.


அன்புடன்


கோபி ராமமூர்த்தி


***


அன்புள்ள ஜெ


வண்ணதாசனுக்கு விருது எனக்கே அளிக்கபப்ட்ட விருது. நான் எத்தனையோ முறை அவருக்கு போதிய கௌரவம் கிடைக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். வண்ணதாசனைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருபவர் என் அலுவலகத்தில் முதலில் இருந்த கணேசய்யர். நான் அறியாப்பாலகனாக இங்கே வந்தபோது அவர்தான் என்னை சிரித்தபடி வரவேற்றார். சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு அனைவருமே எதிரிகளாகத்தான் தெரிந்தார்கள். கணேசய்யர் அத்தனைபேரும் மனிதர்களே என்று எனக்குச் சொன்னார். காட்டினார் என்று சொல்லவேண்டும். ஒரு நட்பான புன்னகையால் வெல்லப்பட வேண்டியதுதான் இந்த உலகம் என்று எனக்குக் காட்டினார்


அதேபோலத்தான் எனக்கு வண்ணதாசன். அவர் இல்லாவிட்டால் என் குடும்பச்சூழல் காரணமாக நான் கசப்பு நிறைந்தவனாக இருந்திருப்பேன். போனவாரம் ரயிலில் ஒரு சின்னப்பாப்பா கையில் சிவப்புக்கண்ணாடி வளையல் போட்டிருந்தது. அதை வாங்கி கொஞ்சவேண்டும் என்று தோன்றியது. கைநீட்டியதுமே வந்தது. அந்த வளையலை முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன்


அப்போதுதான் தோன்றியது அந்தப்பரவசம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. எனக்கு அது முக்கியம் என்று தோன்றுகிறது, அந்த அருமையான மனநிலை வாய்க்கிறது. அது மற்றவர்களிடமில்லை. அதை எனக்குக் கொடுத்தவர் வண்ணதாசன் அல்லவா?


என் ஆசானுக்கு வணக்கம். அவருக்கு விருது அளித்த உங்களுக்கும் வணக்கம்


கணேசமூர்த்தி


***


ஜெமோ


நான் உங்கள் வாசகன் அல்ல. சொல்லப்போனால் உங்களைப்பற்றி நிறையவே கசந்து எழுதியிருக்கிறேன். ஆணவமும் தோரணையும் எனக்குப் பிடித்தமானவை அல்ல. இருந்ததுபோல தெரியாமல் இருந்துவிட்டுச் செல்வதே நல்லது என்பதுதான் எனக்குப்பிடித்தமான கொள்கை


அதோடு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவமும் பெரியாரிய வெறுப்பும் எனக்கு மிகவும் கசப்பு அளிப்பவை. நான் உங்கள் எழுத்திலே ஒருவரி கூட படித்தது இல்லை. சில கட்டுரைகளும் சிலகுறிப்புகளும் உதிரிவரிகளும்தான் வாசித்திருக்கிறேன். நீங்கள் என் ஆள் அல்ல. பெரியாரை நிராகரிக்கும் எவரும் எனது எழுத்தாளர் இல்லை


ஆனால் என் அன்புக்குரிய வண்ணதாசனுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுக்காக உங்களை வாழ்த்துகிறேன். இதையெல்லாம் திராவிட இயக்கம் செய்திருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விருது அவருக்கு ஒரு பொருட்டு இல்லை. ஆனால் அவரது வாசகர்களாக எங்களுக்கு இது முக்கியம்


தமிழ்வேள் குமரன்


***


அன்புள்ள ஜெ,


வண்ணதாசனின் கவிதை ஒன்று


ஒரு முடிவு செய்தது போல்


எல்லா இலைகளையும்


உதிர்த்துவிட்டிருந்தது செடி.


ஒரு முடிவும் செய்ய


முடியாதது போல்


செடியடியில் அசையாதிருக்கிறது


சாம்பல் பூனை


இந்த வரி என்னை அடிக்கடி தொந்தரவு செய்தது. என்ன என்றே தெரியாமல் ஒரு அனுபவம். அதைத்தான் நான் வண்ணதாசன் கதைகளில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை எந்த விமர்சனமும் சொல்லிவிடமுடியாது


அர்த்தமில்லாத அனுபவத்தை அளிக்கும் எழுத்துக்கள் வண்ணதாசன் எழுதுபவை. அவருக்கு விஷ்ணுபுரம் அளிப்பதில் மனநிறைவு


வாழ்த்துக்கள்


செண்பகா


 


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2016 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.