சேவை மோசடிகள்

77317914



அன்புள்ள ஜெ,


சிங்கப்பூர் சந்திப்பு வரவேண்டும் என எண்ணியிருந்தேன், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போனது. நண்பர்கள் சிறப்பாக இருந்தது என மகிழ்ந்து சொன்னார்கள்.


இன்று ஒரு சிறிய சம்பவம்..


இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல கெ.பி.என் பேருந்தில் பதிவு செய்திருந்தேன். பெருங்களத்தூருக்கு 11.15 மணிக்கு வரவேண்டும் ஆனால் தாமதமாக 12 மணிக்குத்தான் வரும் என ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது, இருந்தாலும் பேருந்து 12.30 மணிவாக்கில் தான் வந்தது.


பதிவு செய்திருந்தது ஸ்லீப்பர், ஆனால் வந்தது ஒரு செமிஸ்லீப்பர். அவ்வளவு நேரம் காத்திருந்த மக்கள் கொதித்துவிட்டனர். அந்த டிரைவரும், பொறுப்பாளரும் மிக சாதாரணமாக பதிலளித்தனர். இதுவாவது கிடைத்ததே என சந்தோஷப்படுங்கள் என்ற தோராணையில்.


ஒரு இருபது நிமிடம் நடந்த வாக்குவாதம் முடிவில், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணம் திரும்ப வந்துவிடும் என அந்த பொறுப்பாளர் சொன்னார். முழுவதும் நம்ப முடியாவிட்டாலும், இந்த நடு இரவில் அந்த சமாதானம் போதுமானதாக எனக்கு இருந்தது.

மற்றவர்களும் வேறு வழி இல்லை என உணர்ந்து பஸ்ஸில் ஏறினர். ஆனால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கோபம் இருந்ததை கவனிக்க முடிந்தது.


என்ன திமிரா பேசுறாங்க, அந்த 40 பஸ் எரிச்சது சரிதான் என்றார் ஒருவர். கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் இதையே வெவ்வேறு வாக்கியங்களில் சொன்ன பின்னர் கொஞ்சம் எளிதானது மாதிரி தெரிந்தது.


உண்மையில் பெங்களூரில் 40 கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்டபோது மிக வருத்தமாக இருந்தது, என்ன தான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் அந்த இழப்பு மிக வருத்தமாகவே இருந்தது, அந்நிறுவனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தோன்றியது. தமிழர் என்ற அடையாளத்துகாகத் தாக்கப்பட்டதால் இன்னும் கொஞ்சம் வருத்தம்.


இப்போது, அதே நிறுவனம் நமக்கு ஒரு அநீதி இழைக்கும்போது, நிஜமாகவே கொஞ்சம் எளிதானது போல தோன்றுகிறது.


இனி அந்த அநீதிக்கு கவலைப்படத் தேவை இல்லை, இவனுகளுக்கு நல்லா வேணும். எவ்வளவு பெரிய நிம்மதி.


அன்புடன்


சுரேஷ் பாபு


***


அன்புள்ள சுரேஷ் பாபு


இந்தியாவில் மிக மோசமான நிலையில் உள்ளது சேவைத்துறைதான். எந்தத்தளத்திலும் சேவை என்பதில் நினைத்துப்பார்க்கமுடியாத மெத்தனம், பொறுப்பின்மை. அதைப்பற்றிய கண்டனமே நமக்கில்லை, ஏனென்றால் நுகர்வோர் உரிமை குறித்த உணர்வு நம்மிடம் இல்லை. ஆகவே சேவைநிறுவனங்கள் எதையுமே கண்டுகொள்வதில்லை.


சென்னையில் ஓலா முதலிய டாக்ஸிகளை தாம்பரத்திற்கு அருகே உள்ள என் மகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்காக அழைத்தால் டிரைவர்கள் இருமடங்கு பணம் கேட்கிறார்கள். ஓலாவில் புகார் செய்வேன் என்றால் செய்வதைச் செய்துகொள் என்பது பதில். ஓலா எந்நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதை அவர்கள் அறிவார்கள்.


மேக் மை டிரிப் போன்ற பயணச்சேவை நிறுவனங்களில் கணிசமான விடுதிகள் தங்கள் உண்மையான மதிப்பை மும்மடங்கு ஏற்றி பொய்யான புகைப்படங்களும் தகவல்களும் அளித்து ஏமாற்றுகின்றன. சமீபத்தில் திரிச்சூரில் உள்ள மெரிலின் இண்டர்நேஷனல் என்னும் ஓட்டலில் தங்கினேன். மேக் மை டிரிப் இணையதளத்தில் அவர்கள் தங்களை ஒரு ஸ்டார் ஓட்டல் என சொல்லிக்கொள்கிறார்கள். நேரில் சென்றால் தெருமுனை ஓட்டல் அது. அவர்களின் இணையதளத்தில் கருத்திடும் வசதி இல்லை – அதாவது கருத்துக்கள் அவர்களே போட்டுக்கொள்வது


ஏற்கனவே சென்னையில் பெல் என்னும் ஓட்டல் இதே மோசடியைச் செய்ததை நான் மேக் மை டிரிப்பில் புகார்செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. பென் ஓட்டல் அப்படியே நட்சத்திர ஓட்டலாகவே மேக் மை டிரிப் பட்டியலில் உள்ளது


என்ன காரணம் என்றால் வலுவான நுகர்வோர் அமைப்பு இல்லை. நுகர்வோர் நீதிமன்றங்கள் நம் வழக்கமான நீதிமன்றங்களைவிட தாமதமும் பணச்செலவும் உளச்சோர்வும் அளிப்பவை. ஆகவே எவரும் அப்பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை. பணம் பிடுங்கும் எந்நிறுவனமும் சேவையில் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம் என்னும் நிலையே நீடிக்கிறது


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.