சிங்கை சந்திப்பு -கடிதம்

1 (1)


 


அன்புள்ள ஜெயன்


 


 


வேணுவும் நானும் இன்று மதியம் கோவை வந்து சேர்ந்தோம். குறுமுனியை பத்திரமாக அவருக்கான பேருந்தில் ஏற்றிய பிறகே எனக்கான இடத்துக்கு நான் புறப்பட்டு வந்தேன்.


 


 


சென்ற புதன்கிழமை வரையிலும் புறப்படுவதைப் பற்றிய நிச்சயம் இல்லாதிருந்தவன் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் இருந்துவிட்டு திரும்பியதை மகிழ்வுடனும் வியப்புடனும் நினைத்துக் கொள்கிறேன்.


 


 


எப்போதும் போல நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி கச்சிதத்துடன் செறிவுடன் அமைந்திருந்தன. கவிதையைப் பற்றிய உரையாடலின்போது நான் சொல்ல நினைத்தது இது.


 


 


கூட்டுவாசிப்பின்போது அதிலும் தரமான கவிஞர்களின் முன்னிலையில் அவ்வாறு நிகழும்போது ஒரு மொழியின் கவிதைப் போக்கே மாறிப் போயிருக்கிறது. மலையாளக் கவிதையின் சமீபகால வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும், அம் மொழியின் கவிதைப் போக்கை இரண்டாகப் பிரிக்கிறார்கள் – குற்றாலம் இருமொழி கவிதையரங்குக்கு முன்னும் பின்னும் என. தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், யுவன், மோகனரங்கன் போன்றவர்களும் மலையாளத்திலிருந்து ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், அன்வர் அலி, ராமன் போன்றவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் ஐந்து கவிதைகள். தமிழ் கவிதைகளை மலையாளத்திலும், மலையாளக் கவிதைகளை தமிழிலும் மொழிபெயர்த்துத் தந்திருந்தீர்கள்.


 


 


இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் இரண்டாம் அரங்கும் நடந்தது. இரு மொழியிலிருந்தும் இன்னும் சில புதிய கவிஞர்கள் கலந்து கொண்டனர்.


 


 


இந்த அமர்வுக்குப் பின்னர் மொத்த மலையாளக் கவிதைப் போக்கே மாறிப்போய்விட்டது.


 


 


இதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை. இன்று வேணுவுடன் ரயிலில் வரும்போது இதைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன்.


 


 


உங்களுடனும் நண்பர்களுடனும் கழித்த இந்தப் பொழுதுகள், குறிப்பாக லேசர் காட்சியைக் காண்பதற்காக நடந்தோடிச் சென்ற அன்றைய இரவு மறக்க முடியாத ஒன்று. எங்கள் மீது நீங்கள் காட்டிய தனிப்பட்ட அக்கறையும் கவனமும் எப்போதும்போல உவகையையும் கூடவே பொறுப்பையும் கூட்டுவதாகவே உணர்கிறேன்.


 


 


இன்னும் ஒன்றை நான் இந்த நான்கு நாட்களில் கவனித்தேன் ஜெயன், நீங்கள் மெத்தக் கனிவுற்று இருக்கிறீர்கள். சினந்து கடிந்த பொழுதுளே இல்லை. சிங்கப்பூரின் ஆசிரியப் பணி அப்படியொரு ஆசிரியப் பக்குவத்தை அளித்திருக்கிறதா?


 


 


நிறைவுடன்


 


கோபாலகிருஷ்ணன்


 


 


1 (2) 

அன்புள்ள கோபால்


 


 


அப்படி ஒரு கனிவு கூடியிருந்தால் நல்லது. உண்மையில் நாவல் எழுதிமுடிந்த இடைவேளை. ஆகவே விடுதலையாக உணர்ந்தேன். கொந்தளிப்போ எரிச்சலோ இல்லாமலிருந்தேன். இதுதான் சொல்லத்தோன்றியது.


 


 


உங்கள் வருகையும் பங்கேற்பும் முக்கியமானதாக இருந்தது. சு வேணுகோபாலின் கொந்தளிப்பும் கொப்பளிப்பும் ஒரு பக்கம் மறுபக்கம் உங்கள் அமைதியும் மிகையற்ற தன்மையும் கொண்ட உரையாடல்


 


 


அரங்கில் ஒரு பெரிய exodus நாவல் பற்றிப்பேசினோம். அது நினைவிலிருக்கட்டும். எதிர்பார்க்கிறேன்


 


 


ஜெ





தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2016 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.