தமிழக அரசியல் வரலாறு Quotes

Rate this book
Clear rating
தமிழக அரசியல் வரலாறு (பாகம் #1) தமிழக அரசியல் வரலாறு by ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar)
106 ratings, 4.09 average rating, 16 reviews
தமிழக அரசியல் வரலாறு Quotes Showing 1-1 of 1
“முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முடிவுசெய்தது. பள்ளிப்படிப்பைக்கூட நிறைவுசெய்யாதவர் கருணாநிதி; அப்படிப்பட்ட நபருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை ஏற்கமுடியாது என்பது ஒரு தரப்பு மாணவர்களின் வாதம். பொதுவாக டாக்டர் என்பது கல்வித்தகுதியின் அடிப்படையில் மட்டும் தரப்படுவதில்லை. கருணாநிதிக்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் அவர் கொடுத்த பங்களிப்புகளுக்காகவே என்றது பல்கலைக்கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ், இந்திய மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட்ட மாணவர்கள் சிலர் கருணாநிதிக்கு எதிராகத் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுக் கண்டித்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைக் கட்டித் தொங்கவிட்டுக் கேலி செய்ததாக செய்திகள் பரவின. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதலமைச்சர் கருணாநிதி சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டார். அதன்பிறகுதான் அடுத்த சர்ச்சை வெடித்தது. மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலையில் முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே மாலையில் மாணவர்கள் காவலர்களால் தாக்கப்பட்டனர் என்ற செய்தி மாணவர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் குளத்தில் உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதக்கிறது என்ற செய்தி மாணவர்களைக் கதிகலங்க வைத்தது. காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த உதயகுமார் குளத்தில் வீசப்பட்டாரா அல்லது தாக்குதலில் இருந்து தப்பிக்கக் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பதுதான் அப்போது எழுந்த சர்ச்சை. இறந்தது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது காவல்துறை. குளத்தில் விழுந்ததால் முகம் உப்பிப்போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்ததால் உடலை உதயகுமாரின் பெற்றோராலேயே அடையாளம் காணமுடியவில்லை. காவல்துறையினரின் மிரட்டல் காரணமாகவே பெற்ற மகனை இல்லை என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. இறந்துபோன மாணவன் யார் உதயகுமார் என்ற மாணவர் எங்கே போனார்? பட்டமளிப்பு விழா முடிந்து, முதல்வர் புறப்பட்டபிறகும், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாலை வரை எதற்காக இருக்கவேண்டும்? காவலர்கள் மாணவர் விடுதிக்குள் நுழைந்தது ஏன்? தமிழக அரசு சார்பில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. குளத்தில் கிடந்தது உதயகுமாரின் உடலாக இருக்கலாம்; அதேசமயம், அந்த மரணத்துக்கும் காவல்துறை நடத்திய தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறியது. இருக்கலாம் என்ற பதத்துக்கான அர்த்தம் இன்னமும் விளக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மாணவர்கள் தாக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்த குரல்களுள் ஒன்று கருணாநிதியுடையது. தற்போது அதே கருணாநிதி ஆட்சி நடக்கும்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அவருடைய ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளி. 1971 ஜூலை மாதத்தில் நடந்த பல்கலைக்கழகக் கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ஜனசக்தியில் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கட்டுரை ஒன்றை எழுதினார். அதிலிருந்து ஒருபகுதி மட்டும் இங்கே: பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் குழப்பங்களுக்கு மூல காரணம். பட்டம் பெறாத பலர் உலகில் பல அரங்கங்களில் ஆற்றியுள்ள பணிகளை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால், இந்தக் கூச்சல் எழுந்திராது. பட்டம் பெற்று ஒருமாதம் ஆவதற்குள் அடுத்த பிரச்னை தலையெடுத்தது. தமிழ்நாட்டில் அப்போது மதுவிலக்கு அமலில் இருந்தது. பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது அத்தியாவசிய நடவடிக்கை என்றும் பேச்சுக்கள் எழுந்தன. கொள்கை சார்ந்த பிரச்னை என்பதால் மதுவிலக்கு குறித்து கட்சியிலும் பலத்த விவாதங்கள் எழுந்தன.”
R. Muthukumar, Tamilaga Arasiyal Varalaru - Part - 1