ஒன்பதாவது ஆண்டில் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒரு பாதை – பனி மூட்டம் நிறைந்திருந்தது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில், தெரிவதெல்லாம் பனிமூட்டம். வேறெதுவும் தெரியவில்லை. ஒரு கார் பயணிக்கிறது, அதன் பிரதான முன் விளக்குகள் எரிகின்றன. அவற்றின் வெளிச்சம் படுகின்ற தூரமெல்லாம் பாதை தெரிகிறது. காரும் பனிமூட்டங்கள் துளைத்து பயணிக்கிறது வெளிச்சத்தின் தயவால்.


இப்படியான ஒரு அனுபவம் தான் எழுதுவதும். எழுதுவதன் அழகு கூட, அதனை தொடங்குகின்ற நேரத்தில் தான் வெளிச்சம் போட்டுக் கொள்கிறது. எழுத எழுத பாதை தெரியத் தொடங்கும். ஈற்றில், முழுமையும் வந்து சேரும்.


கடந்த 18 (18.09.2014) ஆம் திகதியோடு, நிறம் தனது எழுத்துப் பயணத்தின் எட்டாவது ஆண்டைப் பூர்த்தி செய்து, ஒன்பதாவது ஆண்டிற்குள் நுழைந்து கொண்டது.


niram-nine-01


வாழ்வின் சிதறிக் கிடக்கின்ற சின்னச் சின்ன குதூகலங்களைக் கோர்த்துச் செய்யப்பட்டது நிறம். துன்பங்களை ரசித்து ஆள வேண்டுமென்ற மனதை செதுக்க தேட்டம் கொண்டது தான் நிறம்.


இங்கு எல்லாமுமே அழகாய் இருக்கிறது. ஆனால், அவை எல்லோருக்கும் அப்படியாக இருப்பதில்லை. அவை அப்படி இருக்கவும் முடியாது.


சுவையான வாழ்வின் அழகிய தருணங்கள், எல்லோருக்கும் உள்ளன. அந்தத் தருணங்களை ஒவ்வொருவரும் நினைவில் குடிகொள்ளச் செய்கின்ற போது, வாழ்வு இனிக்கத் தொடங்கிவிடும். சாதிப்பது சாத்தியமாகிவிடும். இதை நிறம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறது.


எதையும் தொடர்ச்சியாகச் செய்கின்ற நிலையில், அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். அப்போது அதில் தேர்ச்சியும் பெற்றிருப்போம். அது அப்போது, வெறும் செய்கை என்று சொல்லப்படாது, பழக்கமான வழக்கமாக என்றும் எம்மோடு ஒட்டிக்கொள்ளும்.


குதூகலம் தருகின்ற பழக்க நிலைகளை எமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்ற நிலையில், எம் நினைவுகளில் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.


ஆக, இங்கு எல்லோரும் தம்மில் தாமே முதலீடு செய்ய வேண்டியது முக்கியமாகவிருக்கிறது. ஆன்மா, உடல், மனம் என முதலீட்டுத் தளங்கள் ஏராளம் உள்ளன.


படைப்புகள் சொல்கின்ற ஒரு விடயம், வாழ்க்கை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் இன்னும் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் அடைகாக்கப்படுகின்றன என்பதும் தான்.


வெறுங்காலோடு, ஒரு இரவுப் பொழுதில், மரத்தின் இலைகள் உதிர்ந்து பாதையெல்லாம் மூடிக் கிடக்கின்ற போது, அதன் மேல் நடக்கின்ற சுகம் பற்றி சொல்லிவிட முடியாது. வாழ்க்கையின் அரும்பு துளிர்த்தெழுதல் அங்கு நடக்கும். அது நடந்தது. இந்தச் சின்னச் சின்ன குதூகலங்களின் சேர்க்கைதான் வாழ்க்கை.


பாதங்கள், இலைகளின் நரம்புகளை வருட, துன்பங்கள் பற்றிய நினைவுகள் கூட தொலைந்து போகும். காற்றின் பூரிப்பின் ஸ்பரிசத்தில், இன்பத்தின் எல்லை தெரியத் தொடங்கும். மரத்திற்கும் மனிதனுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. அதுபோலத்தான், எழுத்திற்கும் மரத்திற்கும் ஆயிரம் தொடர்புகள் காணப்படுகின்றன.


இந்தப் பூமியின் அழகிய நிலைகள் பற்றிய நினைவூட்டலையும் வாழ்வின் வசந்தம் பற்றிய புரிதலையும் நிறத்தின் பதிவுகள் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும். நீங்கள் தேனீர் அருந்துகின்ற போதும் கூட, அதனை உலகின் அற்புதங்களின் ஒன்றென எண்ணிக் கொண்டு சுவைத்தலே, மனவெளியின் உச்ச நிலை குதூகலமென்று நான் நம்புகின்றேன்.


ஒன்பதாவது ஆண்டில் நுழையும் நிறத்தோடு பயணிக்கின்ற அன்பான உங்களுக்கு நன்றி சொல்கின்றேன். இன்னும் சேர்ந்து நிறையப் பயணிப்போம்.


வாழ்க்கையை வாசிக்கின்ற வாய்ப்பை இந்த நிறம் உங்களுக்கு கொண்டுதரும் என்ற நம்பிக்கையை விதைத்தவனாக, இந்த எட்டாண்டு நிறைவின் குதூகலத்தையும் ஒன்பதாவது ஆண்டின் தொடக்கத்தின் திடசங்கல்ப்பத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


நன்றிகள் கோடி.



உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu


Filed under: அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2014 01:12
No comments have been added yet.