மனத்திற்கு ஒரு மடல்
நீ பேசுவதையோ, எழுதுவதையோ இன்னொருவன் புரிந்து கொள்கின்ற விதம் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்க முனையவும் கூடாது.
பொதுத்தளத்தில் எழுதப்படுகின்ற எழுத்துக்களாகட்டும், பொதுக்கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளாகட்டும் — ஒவ்வொரு தனிநபரையும் வெவ்வேறு வகையில் சந்திக்கின்றன.
உன் எழுத்துக்கள், ஒருவனின் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதன் மடங்குகள் தான், நீ ஆயிரம் பேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவாக இருக்க முடியாது. அது அப்படி ஒருபோதும் நடப்பதுவுமில்லை.
ஒருவனுக்கு உன் உரை மூலம் நீ சொல்ல வந்த விடயம் கொண்டுவரும் தாக்கத்தை கூட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையால் பெருக்கி, உன் உரையின் நிலையில் கூட்டத்திலுள்ளோர்கள் பெற்ற அனுபவ உயர்நிலையை நீ எண்ணி மகிழ்ச்சி கொள்ளக்கூடாது. அது அவ்வாறு பெருக்கி வருகின்ற கணிதமல்ல.
ஒருவனிடம் காட்டுகின்ற அன்பின் வடிவத்தை, ஒரு கூட்டத்திடம் உன்னால் காட்ட முடியாது. அதேபோலத்தான், உன்னிடம் ஒரு தனிநபர் காட்டும் அன்பைப் போல், ஒரு கூட்டத்தால் உன்னோடு அன்பு பாராட்ட முடியாது. இரண்டும் முரண்கள் கொண்ட முனைகள்.
உன் உறவுகளின் வலுவும் உன் உரையின் தெளிவும் ஒருநபருக்கு ஒரு நபராய் மட்டும் சுவாசம் கொள்கிறது. கூட்டமாய் இருந்தாலும் நீ சொல்ல வரும் விடயம் ஒரு மனத்தை மட்டுந்தான் அடைய வேண்டும்.
ஆயிரம் மனங்கள் இருக்கட்டுமே, உன் உரை ஒவ்வொரு மனத்தையும் அன்போடு அரவணைக்க வேண்டிய கலையைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தக் கலை விசித்திரமான கலையன்று. மனதோடு பேசுகின்ற கலை, ஒரு விஞ்ஞானமாயிருந்தாலும் — அதுவொரு மிக எளிய விஞ்ஞானம்.
இன்னொரு மனதோடு பேச, நீ செய்ய வேண்டியதெல்லாம், உன் மனதாலே பேச வேண்டும். உன் மனதாலே எழுத வேண்டும்.
மனதாலே பேசுகின்ற கலை வாய்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கோபாலிடம் கேட்டேன். ஒரு பட்டியல் சொன்னான். உபயோகம் கருதி தருகிறேன்.
அதிகமாக நீ ஓட வேண்டும். சாப்பாட்டை அதிகமானோருக்கும் சேர்த்து சமைத்தருள வேண்டும். அதிகமான சூரிய உதயங்களை நீ காண வேண்டும். அதிகமாய் நீ வாசிக்க வேண்டும். அதிகமாய் நீ படைக்க வேண்டும். நீ மன்னிக்க வேண்டும். எது அவசியமோ அதில் உன்னை திளைத்திருக்கச் செய்ய வேண்டும். இத்தனையும் உன் வழக்கமாக ஆகிவிடுகின்ற நிலையில், உன் மனமே பேசத் தொடங்கும். அந்தப் பேச்சில் கர்வம் இருக்காது, கவர்ச்சி இருக்கும். அதில் ஈர்ப்பு அற்புதமாய் ஒட்டிக்கொண்டிருக்கும்.
மனதோடு பேசுவோம் வா!
- உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
Filed under: அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை


