பல்துறை வித்தகர் கே.பாக்கியராஜ்
திரைப்பட நடிகர் பாக்கியராஜ் அவர்களின் மறைவு திரையுலகிற்கும், அவர்களுடைய கோடானு கோடி ரசிகர்களுக்கும் பேரிழப்பு. அவருடைய குருவான பாரதிராஜாவைத் தொடர்ந்து அவரும் மிக விரைவில் இயற்கையெய்தியது அவர்மேல் வைத்திருந்த பக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய ஆழமான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முற்றிலும் வித்தியாசமான கதையின் முடிவு என்ற வகையில் அவருடைய தனித்துவத்தைக் காணமுடியும். அண்டை வீட்டுப் பையன் என்று கூறுவார்களே அந்த வகையில் நம்மை மிகவும் அணுக்கமாக தம் கதையோடு அழைத்துச்சென்று, அதில் நம்மை ஈடுபட வைத்து, ஒரு நெருக்கத்தை மிகவும் அனாயாசமாக உண்டாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக நம்மை எந்த அளவிற்குச் சிரிக்க வைக்கின்றாரோ, அதே அளவிற்கு சிந்திக்கவும் வைத்துவிடுவார். நேர்மறை சிந்தனையையும், சாதிக்கவேண்டும் என்ற ஒரு மன உறுதியையும் அவருடைய பல படங்களில் பார்த்து ரசித்து உணர்ந்திருக்கிறேன். அவருடைய சமூகப்பிரக்ஞையை தன் படங்களில் வெளிப்படுத்தியவிதம் போற்றத்தக்கதாகும்.
16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவோடு ஆரம்பித்த அவரது பயணம் சுவர் இல்லாத சித்திரங்கள், கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், ஒரு கை ஓசை, மௌன கீதங்கள் என்று நீண்டு தொடர்ந்தது. அப்பாவித்தனமான முகம், இயல்பான புன்னகை, நிதானமான பேச்சு, அதே சமயத்தில் நறுக்கென்று ஒரு செய்தியை நம்முள் கொண்டுவந்து சேர்க்கின்ற பாங்கு என்ற வகையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். அவருடைய பல வசனங்களை நானும், நண்பர்களும் திருப்பித்திருப்பிப் பேசி ரசித்ததுண்டு.
பாக்யா இதழ் மூலமாகவும் அவருடைய பங்களிப்பானது ஒரு முன்னுதாரணமாக அமைந்ததாகும்.
அவருடைய எண்ணற்ற படங்களும், வசனங்களும் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நிற்கு.ம் என்பதில் ஐயமில்லை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன்.
1996இல் நான் அனுப்பியிருந்த வாழ்த்திற்கு கையொப்பத்துடன் அவர் அனுப்பியிருந்த நன்றிக்கடிதம் இன்றும் என் கோப்புகளில்...


