பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


மிகவும் நிதானமான பேச்சு, நல்ல நிர்வாகம், ஆற்றொழுக்கான உரையாற்றல், பணியாளர்களுடன் கரிசனமாகப் பழகும் மாண்பு என்ற பல நிலைகளிலும் அவருடைய குணங்கள் போற்றத்தக்கதாகும்.

என்னுடைய "படியாக்கம்" (தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, 2004) நூலுக்கு அணிந்துரை கேட்பதற்காகச் சென்றபோது என் எழுத்துப்பணியை வியந்து பாராட்டி ஊக்கம் தந்தவர். அவர் தந்த வாழ்த்துரை என் எழுத்துப்பணிக்குத் தூண்டுகோலாக அமைந்தது.
அவருடைய மேடைப்பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டதுண்டு. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை எந்தப் பொருண்மையானாலும் செறிவாக, அனாயசமாக, தொய்வின்றி உரையாற்றுவார். தலைப்பையொட்டியே அவர் பேசும் விதம் சிறப்பாக இருக்கும். அவர் பேசும்போது நிகழ்விடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுவார். அந்த அளவிற்கு இயற்கையாக அந்த உரை இருக்கும்.
விக்கிப்பீடியாவில் பதிவதற்காக அவரைப் புகைப்படம் எடுப்பதற்காகப் பெருங்குடி இல்லத்திற்கு 13.3.2022 அன்று சென்றபோது என்னுடைய தொடர் ஆய்வினையும் எழுத்துகளையும் பாராட்டினார். என் ஆய்வினைப் பற்றி விசாரித்தபோது "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற என்னுடைய நூலின் அச்சுப்பணி நடைபெற்றுவருவதைக் கூறினேன். அப்போது அவர் அதனை விரைந்து நிறைவேற்றும்படியும் அறிவுரை கூறினார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(பதிவிலுள்ள புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டதாகும். )
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2026 20:53
No comments have been added yet.