கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள் : மா.செல்வகுமார்




கும்பகோணம்-சுவாமிமலை மற்றும் அருகேயுள்ள கோயில்கள்
கும்பகோணத்தில் பெரும்பாலான தெருக்கள் கோயிலை மையமாகக் கொண்டு உள்ளதால், அங்குள்ளோர் முகவரியைக் கூறும்போதே மொட்டை கோபுரம் அருகில், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, கும்பேஸ்வரர் மேல வீதி என்ற வகையில் அந்தந்த கோயிலின் பெயரோடு திருமஞ்சனவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழ வீதி என்ற பின்னொட்டோடு கூறுவது வழக்கம்.
அந்த அளவிற்குக் கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன. எந்தத் திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயிலின் கோபுரத்தினைக் காணமுடியும். தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தத்திலும் குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூரிலும், அருகிலுள்ள ஊர்களிலும் பாடல் பெற்ற கோயில்கள், மங்களாசாசனம் பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்பெறுகின்ற மகாமகம் புகழ்பெற்றதாகும். இங்கு வசிப்போர் அவ்விழாவினைத் தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகக் கருதுவர். வாழ்வின் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி, முந்தைய மகாமகத்தில் வீடு கட்டினோம், கடந்த மகாமகத்தில் திருமணம் நடைபெற்றது, இந்த மகாமகத்தின்போது மூத்த மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான், மகளுக்குக் குழந்தை பிறந்தது என்றெல்லாம் பெருமையோடு கூறிக்கொள்வர்.
இத்தகு சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம், மகாமகம், அருகிலுள்ள கோயில்கள் ஆகியவற்றைப் பற்றி பல நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. அவ்வகையில், மா. செல்வகுமார் எழுதியுள்ள கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள் என்னும் நூல் பொதுமக்களுக்கும், ஊரைச் சுற்றிப் பார்க்க வருகின்ற பக்தர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ள நூலாகும்.
இந்நூல் கும்பகோணம்-அமைவிடம், கும்பகோணமும் மகாமகப் புராண வரலாறும், மகாமகம்-நீராடலும் பயன்களும், மகாமகக் குளக்கரைக் கோயில்கள், அமிர்தம் பரவிய தலங்கள், கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்கள் ஆகிய தலைப்புகளில் தொடங்கி, சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமஸ்வாமி கோயில்கள், இப்பகுதியில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சில கோயில்கள் உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டுள்ளது. பின்னிணைப்புகளாக சைவ, வைணவ நவக்கிரகத்தலங்கள், பிற முக்கியத் தலங்கள், கும்பகோணம் சுவாமிமலையின் சிறப்புகள் ஆகியவை அமைந்துள்ளன.
அமிர்தம் பரவிய தலங்கள் என்ற தலைப்பில் பஞ்சகுரோசத்தலம் எனப்படுகின்ற திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டுக்கருப்பூர் ஆகிய கோயில்களின் அமைவிடமும், சிறப்பும் விவாதிக்கப்பட்டுள்ளன. கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்களான ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலநாதர் ஆகிய கோயில்களின் தல வரலாறு, இறைவன், இறைவி, திருவிழாக்கள் போன்ற பல கூறுகள் ஆராயப்பெறுகின்றன.
தொடர்ந்து அருகில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடி, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், இன்னம்பூர், ஏரகரம், திருப்புள்ளபூதங்குடி, திருஆதனூர், திருக்கருகாவூர், திருப்புறம்பியம், திருவைகாவூர் ஆகிய தலங்களின் சிறப்புகள் பல கோணங்களில் காணப்படுகின்றன.
ஒவ்வொரு தலைப்புகளிலும் விவாதிக்கப்படுகின்ற செய்திகளும், நிகழ்வுகளும் அந்தந்தத் தலத்திற்கு வாசகர்களை அழைத்துச்செல்வதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளவற்றில் சிலவற்றைக் காண்போம்.
கும்பகோணம் வந்து வழிபட்டவர்க்கும், வர முடியாத நிலையில் நினைத்தவர்க்கும், ஒரு முறை கும்பகோணம் என்று வாயால் சொன்னவர்க்கும் பாவங்கள் நீங்கி வீட்டுலகம் வாய்க்கும். (பக்கம் 7)
உமையம்மையார் சிவபெருமானிடம் உலக உயிர்கள் வினையிலிருந்து நீங்கி மோட்ச உலகம் சேர்வதற்குரிய தலம் எது என்று கேட்டபோது, சிவபெருமான், இத்தலத்தின் பெருமையை எவராலும் உள்ளது உள்ளபடி உரைத்தல் என்பது இயலாது...உன் மனத்துள்ளும் அடியவர் உள்ளத்துள்ளும் வேத இசையிலும் நாம் விளங்குவது போல இக்குடந்தை நகரில் வீற்றிருக்கிறோம் என்கிறார். (ப.9)
ஒரே நீர்த்துறையில் பல ஆலயங்களைச் சேர்ந்த மூர்த்திகள் ஒரு பொழுதில் வந்து தரிசனம் கொடுத்தல் மிக அரிய நிகழ்வாகும். பல புண்ணிய நதிகளில் நீராடிய பயன்களை மகாமக நீராடல் நமக்குக் கிடைக்கச் செய்கிறது. (ப.18)
ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும்..காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தமான மகாமகக்குளத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும்...(ப.24)
கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மிகச்சிறந்த கையேடாக அமைந்துள்ள இந்த நூல் தலத்தின் பெருமைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இவ்வாறான நூலைப் படைத்த நூலாசிரியர் இன்னும் தொடர்ந்து அருகிலுள்ள பிற தலங்களைப் பற்றி எழுதி இறைவன் அருள் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தலைப்பு: கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள் ஆசிரியர்: மா.செல்வகுமார் (அலைபேசி +91 99448 86468)பதிப்பகம்: மௌவல் பதிப்பகம், மடவிளாகம் தெரு, வலங்கைமான் 612 804,திருவாரூர் மாவட்டம், அலைபேசி +91 97877 09687, +91 94888 40898பதிப்பாண்டு: அக்டோபர் 2025விலை: ரூ.130



-------------------------------------------------------------------------------------------நூலில் வெளியான என்னுடைய அணிந்துரை-------------------------------------------------------------------------------------------
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2026 00:54
No comments have been added yet.