பாதி கட்டுரை #இன்ஸ்டா_கவிதைகள்
Rram Santhosh Vadarkkadu #றாம் #Drவிமல்
சங்க காலம் தொடங்கி இன்றைய இன்ஸ்டா காலம் வரை கவிஞர்கள் பலர் பஞ்சத்திற்குப் பெயர் போனவர்கள் என்றாலும், அவர்களுடைய பிறப்பு விகிதத்தில் ஏதும் பஞ்சமேற்பட்டதாக இதுநாள் வரை ஒரு செய்தியுமில்லை. ஆச்சரியமூட்டும் வகையில், வாசிப்பு, தரமான இலக்கியப் போக்கு என யாவும் ஓர் அருகிய நிலைமையை எய்தி வரினும், கவிஞர்கள் தொடர்ந்து அவதரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழிவில்லை போலும்; ஆனால், கவிதைக்கு? அது பல காலம் தொட்டே நைந்தும், நல்லதுமாக கலந்தே இருந்துவருகிறது. சங்க இலக்கியம் முழுமையும் நல்லக் கவிதைகளின் கதம்பமே என்றாலும், அவை தொகை நூல்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் போது, கழிக்கப்பட்டவை கணக்கற்றவை என்பது வெள்ளிடைமலை அல்லவா?
அதுபோலத்தான் இன்றும், கவிதை அல்லது மரபுக் கவிதை ஓசை நயத்தை விட்டொழித்து, புதுக்கவிதையாகப் பரிணமித்த போதிருந்து, அதன் உரைநடைத்தன்மை பலரும் எழுத பாதை செய்தது. இஃதொரு ஜனநாயகத்தை உண்டுபண்ணியது வாஸ்தவமே என்றபோதும், அதன் உபவிளைவாகப் பெருகிய கவிதைத் தொகையைக் கட்டுப்படுத்தவென்று எந்த அரசும் திட்டம் வகுக்காதது இன்று கேட்டில் முடிந்திருப்பதாகவே எண்ணுகிறேன். வெகுசன இலக்கியத்தை வாசித்து அது சலித்துப், பின் தீவிர இலக்கியத்தில் கால் கொண்டு, கைமண்ணளவேனும் கற்கும் வழமை இணையம் வந்த பிறகு சற்றேறக்குறைய முழுவதும் அற்றுப்போய்விட்டது. அல்லது இவ்வகையான வாசகர்களை, எழுத்தாளர்களை, குறிப்பாக கவிஞர்களைப் புதுரகமாக வகைப்படுத்தலாம்.
முந்தைய படைப்புகளை வாசிக்காமல் அல்லது அவற்றைப் புரியாதவை என்று ஒதுக்கிவிட்டு, தங்களுக்கு இணைய வழிப் பரிட்சயப்பட்ட ரீல்ஸ்களில் வழி உருவான மேலோட்ட மொழியின் வசீகரம் தன் மனதில் படியவும், அதுபோலவே செய்து பார்க்கும் எத்தனமாக, விளையாட்டாக, அடையாள ஈர்ப்பாக எழுதப்படும் ஒரு போக்கு இன்றைய கவிதை வரலாற்றில் ஒரு புதிய பாதையைக் கிளைப்பரப்பி இருக்கிறது; இதை நான் தவறென்றே சொல்ல மாட்டேன். இலக்கிய வரலாற்றில் எதுவும் ஒதுக்கத்தக்கது அல்ல என்பதை ஒரு கவிஞனாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிடினும், ஓர் ஆய்வாளனாக இதை ஒரு மெய்மையென்று கூவத்தான் வேண்டியுள்ளது.
அந்தவகையில், இன்று பாழான கவிதை வகைமையான தமிழ் ஹைக்கூ போலவே ஒடித்து ஒடித்து எழுதப்படும் சிறு வடிவ கவிதைகள் – இன்ஸ்டாவில் பெரிதும் வளம் வருகின்றன. அவ்வாறு பிரபலம் அடையும் கவிதைகளின் திரட்டுகள் காணாத அதிசயமாய் பல ஆயிரம் படிகள் விற்பதாய் வெளிவந்த தகவல் ஒரு நிமிடம் என்னைத் தற்கொலைச் செய்துகொள்ளவுந் தூண்டியது; கவிதைத் தொகுப்புகள் ஆயிரம் படிகள் விற்பதென்ன பாவம்; அஃதொரு இலக்கிய கெடு நிமித்தம் அல்லவா? அஃதொரு ஊறு அன்றோ? வாழும் காலத்தில் பாரதியையும், ஆத்மாநாமையும் கண்டுகொள்ளாத தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட வழமையற்ற சரித்திர மாற்றமல்லவா??? ஆனால், அவை இன்ஸ்டா கவிஞர்கள் எழுதுபவை; தபூ சங்கரின் வகையறாக்கள்; தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் போலி வார்ப்புகள்; இன்ஸ்டா இதயக்குறி அறுவடைப்பான்கள்.
**
இன்ஸ்டா கவிதைகள் என்றால் என்ன? மரபறியா, நவீன தொனி அறியா, சொல்லடுக்கு வெளிப்பாட்டில் ஒரு பன்ச் வைத்து, ஆட்டோவில் எழுதத்தக்கத் தோரணையில், பலரையும் படியெடுத்தால் அவற்றை இன்ஸ்டா கவிதைகள் என்று எளிதில் வகைப்படுத்திவிடலாம். இவை பெரும்பாலும் காதல் கவிதைகளாக, அவளைப் பற்றிய கவிதைகளாக உள்ளன. அவள் யார்? ’சுட்டி ஒருவர் கொளப்பெறா’ மரபின், மரபறியா கவிஞர்களின் காதலிகளாக இருக்க வாய்ப்புண்டு; கற்பனைப் பெண்டாகவும் இருக்கலாம். அது இங்குத் தேவையில்லை; ஆனால், அவை புரிந்துகொள்ள ஏதுவான, பகிர்ந்து கொள்ளத் தோதான வஸ்துகள். உணர்வுச் சுரண்டல்கள் என்பதை அவற்றின் சாமுத்திரிகா லட்சணமாகக் கொள்ளலாம்.
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

