நீண்ட தாழ்வாரத்தின்
நீண்டோடிய பால்கனிக் கைப்பிடியின்
பளபளப்புக் காப்புக்கென சுற்றியிருந்த
பாலித்தீன் சுருள் அறுந்து நீண்டு
காற்றில் நாட்டியமாடிக் கொண்டிருந்தது
அவனை அழைப்பது போலிமிருந்தது
பெரும் களி நடமும் விளிக்குரலும்
சமயங்களில் தீர்ந்து பொய்யாகி
விடுதலை நோக்கி, அவனை நோக்கி
விடுதலைக்காய் அவனை நோக்கி
துடி துடித்துக் கொண்டிருந்தது போலுமிருந்தது
அவன் நெருங்கிச் சென்று
கிள்ளி அகற்றி விடுத்துக்
காற்றில் விட்டான்
அப்போதும் அது தன் களி நடத்துடன்
சுழன்று கொண்டிருந்தது
வெற்று வெளியில் நீந்தித் திரியும்
பெரு வாழ்வினின்றும் மெல்ல மெல்ல
தான் கீழ் நோக்கிச் செல்லுவதறிந்து
வேண்டாம் வேண்டாம் எனத் துடி துடித்தது
எனினும் மண்ணோடு பிறந்த நீ
மண்ணைத் தொட்டு மண்ணுள்
இறங்குவதே சரி அன்பா என்றது
ஒரு குரல் அப்போது
Published on January 16, 2025 11:30