மேடை நடுவே
நின்றுவிட்ட ஒரு நொடி போன்ற
வியப்புடன் நின்றபடி
பாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.
பாடல் தன் பணியூடே
எங்கிருந்து எங்கிருந்து எனத்
தேடி அலைகிறது
தன்னிடம் தோன்றிய காதலினதும்
அதன் தெய்வீகத் தேன் சுவையினதும்
பிறப்பிடத்தைக் காணமுடியாது!
காண வேண்டியதைக் கண்டு
தன்னிரு கைகளாலும் அதனைப்
பத்திரமாய்ப் பற்றிக்கொண்டவர் போன்று
அவர் அந்த ஒலி பெருக்கியுடன்
மூடிய விழிகளுக்குள்
வெகு ஆழம் சென்றுகொண்டேயிருக்கிறார்
சென்று திரும்பியவர்
தனது பேச்சையும் பாடலையும்
கேட்கத் தகுதி பெற்ற ஒருவனை
ஒலிபெருக்கியுடன்
விடாது பற்றிக்கொண்டிருப்பவர்போலும்
திகழ்கிறார்
அந்த யாரோ ஒருவனுடன்தானோ
அவர் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததுதானோ
இந்தப் பாடல் என அது முடிந்தபோது
வந்து அசையாது நின்றிருந்தது
ஒரு மோனப் பெருவெளி
சிறிய
கைத்தட்டற் சிறகொலிகளால்
கலைந்துவிடாத
பேரமைதி
பெற்றுக்கொண்ட ஒவ்வொரு உயிரின்
இதயத்திற்குள்ளும் போய் அமர்ந்துவிட்டதோர்
வேதனை அம்ருதம்!
Published on December 31, 2024 11:30