வேட்டி தார்பாய்ச்சிக் கட்டிய மல்லர்கள் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்திய போது

உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை.  மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது.

அபீசீனியாவில் இருந்து வந்த ஒரு உடம்பு பிடிக்காரனும் அவனோடு வந்த பொம்பிளையும் அரண்மனைக்கே வந்து இப்படி மணிக் கணக்காக உடம்பு பிடித்து விட்டார்கள். ராணி தாய்வீடு போயிருந்த நேரம் அது. அபீசீனியாக்காரிப் பொம்பளை மட்டும் ராஜாவோடு இருந்து கள்ளுத் தண்ணி போல போதையேற்றிச் சிரிக்க, ராஜா சமர்த்தாக உறங்கிப் போனார் அன்று.

 

இங்கே பெண் வாசனையே கிடையாது. ஆவி பறக்க, மலையாளத்தில் பேசியபடி காய்ச்சிய எண்ணெயை அறை வாசலில் வைத்து விட்டு வேஷ்டி கட்டிய இளம்பெண்கள் நகர, மல்லர்கள் தான் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தியது. ரெண்டு பொற்காசுகளை ராஜா ஆயுர்வேத வைத்தியனுக்கும், பிரித்துக் கொள்ளச் சொல்லி இன்னுமொரு காசை இந்த மல்லர்களுக்கும் தர, அவர்கள் காட்டிய சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.

 

ஒரு பெரிய சீனப் போத்தல் நிறைய இன்னும் ஒரு வருஷம் ராஜா பூசிக் கொள்ள மூலிகை எண்ணெய் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.  நாசித் துவாரத்திலும் ஆசனத் துவாரத்திலும் தினம் ஒரு துளி தொட்டு வைத்தால் ஒரு சுகக்கேடு அண்டாதாம். அரைக்குக் கீழே முன்னாலும் வைத்துக் கொண்டால் சகல சுகமும் சித்திக்குமாம். என்ன, நாள் முழுக்க அங்கே எரிச்சல் கொஞ்சம் போல் இருக்கலாம். அது எதுக்கு இழவு.

 

புஸ்தி மீசைக் கிழவன் வைத்தியசாலையைச் சுற்றிப் பறந்தபடி ராஜா இதை சேடிப்பெண்ணுக்கு  எங்கெல்லாம் தடவலாம் என ஆலோசனை சொன்னான். போடா வக்காளி என்று ராஜா மிதமாக அவனைக் கடிந்து கொள்ள, என் மசுரே போச்சு என்று சிரித்துக் கிழவன் கோலாகலமாக மிதந்தான்.

 

வைத்தியசாலை வாசலில் அரண்மனை ஜோசியர் தரையில் பரத்திய மண்ணில் வேப்ப மரக் குச்சி கொண்டு ஷட்கோண யந்திரம் நிறுத்துவதன் நுட்பங்கள் குறித்துப் பேச சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜோசியர் அறிவுஜீவியாகக் காட்சி அளிப்பது மனதில் பட, ராஜா மனதில் தேவையில்லாத அசூயை எழுந்தது.

 

கேணையன் நாமக்கார அய்யன் சோழியை உருட்டிப் போட்டுக் காசு பார்க்கக் கிளம்பிட்டான். நம்ம மீசையான் வேறே ஒய்யாரமா அங்கே இங்கே சாடறான். இவனுகளோட என்ன எழவுக்குடா நான் கூட வரணும்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2024 21:01
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.