உலகின் ஏதோ மூலையிலிருந்து நாரை போல் சன்னமாக ஒலிக்கும் குரல் – நந்தினி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே

 

நேற்றுக் காலையில் கோவிலுக்கு அடுத்த தெருவில் போய்ப் பார்த்த புராதன வீட்டிலும் அர்ஜுன நிருத்த ஆபீஸ் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அப்படித்தான் சொன்னார் குறூப். பம்பாயிலிருந்து வந்த அமைச்சரின் மனைவியாம் அங்கே நிர்வாகம் செய்து வரும் மதராஸ் பெண்மணி.

 

எம்பிராந்திரியின் வீட்டுக்காரியான முதுபெண் சோழி உருட்டிப் பார்த்துச் சொல்லித் தான் அந்த வீட்டைப் பார்க்கப் போயிருந்தான் வைத்தாஸ். அந்தப் புராதன வீட்டை வாங்கச் சொல்லி ஆலோசனை கொடுத்த எம்ப்ராந்திரி மனைவி இன்னும் மூணு பேருக்கும் அதே ஆலோசனையைச் சொல்ல வேண்டி போனதாக அவள் சொன்னாள்.

 

என் மகன் பத்ம சங்கர எம்ப்ராந்திரி லண்டனில் இருந்து கொண்டு கடிதம் எழுதியிருக்கிறான். சோழியும் பிரசன்னமும் உன் வயதுக்கும் ஆக்ருதிக்கும் கூடி வரவில்லை. அதுவும் நாலும் ஒரே போல என்றால் பிரச்னம் இல்லை அது. பிரச்சனை. இதெல்லாம் ஓரம் கட்டிவிடு என்கிறான். பத்மன் தெரியும் தானே?

 

முதுபெண் வசீகரமாகச் சிரித்தது மனதில் பூவாகச் சிதறியது. அர்ஜுன நிருத்தம் போல் அழகான சிரிப்பு அது.

 

பத்மன் எம்ப்ராந்தரியைத் தான் லண்டனில் சந்திக்க முடியாமல் போனதை அவளிடம் சொல்லலாம் என்று வைத்தாஸுக்குத் தோன்றியது அப்போது.

 

கிடக்கட்டும், இந்த மாநாடு முடிந்து நாடு திரும்ப வழியைப் பார்க்க வேண்டும். நந்தினி இன்னும் எத்தனை நாள் தனியாகக் கஷ்டப்படுவாள்?

 

அறையில் இருந்த கருத்த டெலிபோன் மணி அடித்தது. கீழ்த் தளத்தில் இருந்து ரிசப்சனிஷ்ட் பெண் பேசினாள். கவனித்துக் கேட்டாலே அர்த்தமாகும் மலையாள இங்கிலீஷ்.

 

நீங்கள் கேட்ட வெளிநாட்டு தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கிறது. பேசுகிறீர்களா?

 

வைத்தாஸ் பரபரப்போடு ஹலோ சொன்னான். அந்தப் பக்கம் ஏழு கடலும் ஏழு மலையும் தாண்டிப் பறக்கும் சிறிய நாரையின் குரலாக ஹலோ.

 

நந்தினி.

 

அடுத்த வாரம் நான் அங்கே..

 

சொல்லும்போதே அவனுக்குக் குரல் நடுங்கியது. அழ ஆரம்பித்தான்.

 

வேணாம். நானே வந்து.

 

நந்தினி சொல்லிக் கொண்டே இருக்க டெலிபோன் தொடர்பு அறுந்து போனது. அப்புறம் அரை மணி நேரம் காத்திருந்தும் நந்தினி கிடைக்கவில்லை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2024 22:22
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.