”பே…” எனும் பேரன்புப் பிரவாகம்



 “Great thingsare done
when
men and mountains meet”

 

என்ற ப்ளேக்கின் வரிகளோடு கவிக்கோவின் 

“உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்” என்ற நூலிற்கான தன்னுடைய முன்னுரையைத் தொடங்குவார் சிற்பி

அதையே அச்சுப் பிசகாமல் தோழர் தேனி சுந்தர் அவர்களுடைய இந்தநூலுக்கு செய்துவிட ஆசைப்படுகிறேன்




அதுதான் பொருத்தமும்கூட

மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மகத்துவங்கள் நிகழ்கின்றன

மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மட்டுமே மகத்துவங்கள் நிகழும்

இன்னும் தெளிவுபட சொல்ல வேண்டும் எனில்,

மனிதனும் மலைகளும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கான பயணப்பட்டு இருவரும் சந்திக்கும் அந்தப் புள்ளியில்தான் மகத்து வம்நிகழும்

இங்கு ஒவ்வொரு முறையும் அதுதான் நிகழ்கிறது

பிள்ளைகளிடம் சுந்தர் வருகிறாரா என்றால்

ஆமாம்,

வருகிறார்தான்

அப்படி மட்டும்தான் எனில் கற்றல் கற்பித்தல் மட்டுமே நிகழ்ந்திருக்கும்

ஆனால்,

இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையும் மகத்துவத்தின் ஆவணத் தழும்புகளாக உள்ளன.  

இதுஎப்படிசாத்தியம்?

சுந்தரும் பிள்ளைகளை நோக்கிப் போகிறார். 

குழந்தைகளும் சுந்தரை நோக்கி வருகிறார்கள். 

இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சந்திப்பிடம் மாண்பால் நிறைகிறது.

பிள்ளைகளும் பயணப்படுகிறார்கள் என்கிறாய், 

சுந்தரும் பயணப்படுகிறார் என்கிறாய். 

சந்திப்பு மட்டும் சரியாய் வகுப்பறையில் நிகழ்கிறதே. அதுஎப்படி?

குழந்தைகள் கிளம்ப எத்தனிக்கும் நேரத்தில் சுந்தர் வந்தடைந்து விடுகிறார்.  

அவரது வேகமும் குழந்தைகளைக் காண அவருக்கிருக்கும் தாகமும் அப்படி

மனிதன் யார்?, 

மலைகள்யார்?

மலைகள் குழந்தைகள்

அவர்களின் மறுபுறத்தைக் காணவேண்டும் எனில்,

உச்சி ஏறி அந்தப் புறம் இறங்க வேண்டும். அற்புதங்கள் நிறைந்தது மலை, 

ஆனால் ஏறுவது சிரமம்.

அதிகாரியின் வருகை குறித்த கட்டுரை,

“சார் ,காலைல வந்தார்ல, 

அவர்லாம் நம்ம ஸ்கூலுக்கு ஹெச்.எம்மா வர்றதா இருந்தா முன்னமே சொல்லிருங்கசார். நாங்கல்லாம் வேற ஸ்கூலுக்கு போய்க்கிறோம்”

இதுதான் குழந்தை. 

அதுமாதிரி ஒரு முசுடு வந்தால் சுந்தரே இருந்தாலும் குழந்தைகள் இடை நிற்பார்கள்

”பே…” என இவரை குழந்தைகள் பயமுறுத்தும் கட்டுரை இருக்கிறதே. வாசித்துப்பாருங்கள். அப்படி ஒரு அழகான கவிதை

காமராஜ் தாத்தா தனது வீட்டிற்கு வந்து வகைவகையாய் சாப்பிட்டதாக சொல்லும் அம்முவிற்கு என் முத்தம்

பிரியாணி வரைக்கும் போகிறது

நானும் பிள்ளைகளால் வருபட்டவன் என்கிற முறையில் இந்த நூல் அப்படி சுவைக்கிறது எனக்கு

குழந்தைகள் அளவிற்கு குனியத் தெரிகிறது தோழர் சுந்தருக்கு

இது ஒரு தேவையான ஆசிரியக் குணம்

அருகி வருகிற அதிசயமாகி வருகிறது

இந்தநூலை ஆசிரியர்களிடம், 

குறிப்பாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் கொண்டு சேர்ப்போம்

சுந்தர்கள் கிடைப்பார்கள்

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2024 01:10
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.