ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது பெருநூல் வாழ்ந்து போதீரே. அதிலிருந்து – அத்தியாயம் ஐந்தில் ஒரு காட்சி

தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன்.

அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ.

நாற்பத்தேழாம் வருடம், முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த எண்பது வயது தலைவர் வாக்கிங் ஸ்டிக்கை மண்ணில் ஊன்றி, சங்கரன் முதுகில் வலது கையால் தட்டி வாழ்த்த அவனுக்கு வானத்தில் பறக்கிற சந்தோஷம். எவ்வளவு பெரிய மனுஷன் கையால் ஒரு சுபதினத்தில் முதல் வாழ்த்து கிடைத்திருக்கிறது. வசந்தியிடம் சொன்னால் இதன் மகத்துவம் புரியாது. சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவின் முதல் சர்க்கார், அமைச்சரவை என்று கொஞ்சம் முன்னால் போய் லோதி தோட்டத்தில் ஓடுகிற பெரியவருக்கு வர வேண்டும். தகவலில் பாதி சங்கரனுக்கே மறந்து போக ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் ஷம்போ.

குரலைக் கேட்க மனம் இன்னும் அதிகம் உற்சாகத்தில் துள்ளியது. ஜோதிர்மய் மித்ரா மோஷாய் மெம்பர் ஆப் பார்லிமெண்ட். முதல் லோக்சபாவில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர். சுருட்டு குடிக்காத நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக தொகுதிக்காக சண்டை வலிக்கும் இடதுசாரி மனுஷர்.

இனிப்பும் மீனும் இல்லாமல் சந்தோஷ சமாசாரம் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சொல்லியபடியே சங்கரனை அணைத்துக் கொண்டார் மோஷாய்.

ஓடி முடித்துப் போகும்பொழுது பக்கத்து வங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இங்கே இருக்கும் பெரியவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ரஸகுல்லா வாங்கித் தருவதாக உடனே வாக்குத் தத்தம் கொடுத்தான் சங்கரன் சந்தோஷமாக.

இங்கே ஓடற முக்கால் வாசிப் பேருக்கு, என்னையும் சேர்த்து ஷுகர் கம்ப்ளெயிண்ட்னு தெரிஞ்சு தானே சொல்றே?

வங்காளிகளின் புத்திசாலித் தனத்துக்கு என்றென்றும் தலை வணங்குவதாகச் சிரம் குவித்து அவரிடம் சின்னச் சங்கரன் சொல்ல, நீ மதறாஸிக் களவாணி என்று உன்னதமான பாராட்டு வழங்கினார் மோஷாய்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2024 19:29
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.