முதல் கனி

 2018 டிசம்பர் 5. நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பான சக்யை நூலை தொகுத்து முடித்தநாள். சக்யை வெறும் புத்தகம் மட்டுமல்ல. நான் கொண்ட விடாத பிடிப்பின் முதல் கனி . இந்த புத்தகத்தில் சில பல போதாமைகள் இருக்கலாம்.  நுண்ணுணர்வு நிரம்பிய சிறுகதைகளை கொண்ட தொகுப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை. அதற்கான வாசகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது வரை உண்டு.

நேற்று காலை வானத்தை பார்க்கும் போது போதவிழ் வான் பூ என்ற சங்கப்பாடல் வரி மனதில் ஓடியது. எப்பொழுதோ எழுதப்பட்ட ஒரு வரி.  குறிப்பிட்ட செய்யுளில் அதற்குள்ள உறவு வேறு. தனி வரியாக நம் மனதிற்குள் பதிவது வேறு.

சிலநாட்களாக தொடர்ந்த மழையால் அவ்வளவாக சூரியஉதிப்பு கண்களுக்கு புலப்படவில்லை. தினமும் காலைமழையால் வெளிச்சமாக மட்டுமே சூரியனின் இருப்பை உணர முடிந்தது. மந்தமான இருள் கலந்த வெளிச்சம்.

நேற்று வானம் தெளிந்து சூரியன் உதிப்பதற்கு முன்பான வெளிச்சத்திலிருந்து, சூரியன் உதிக்கும் வரை இந்த வரியே மனதில் இருந்தது.

 வானம் இதழ் விரிக்கிறது.

காலைவானம் ஒரு அமைதியான மொட்டு விரிவதைப்போல ஔிவிரித்து ஔி  எழுந்தது. மேற்கே உள்ள கொல்லிமலை மரகத பச்சைக்கு மாறத்தொடங்கியது. அங்கங்கே மேகம் சிதறிக்கிடந்தது. இதை சங்கத்தலைவி வில்லால் அடித்த பஞ்சு சிதறியதைப்போல [கழார்கீரன் எயிற்றியார்] என்கிறாள்.

மலை அங்கங்கே இருட்டாகவும், அங்கங்கே ஔி கொண்ட மரகத பச்சையாகவும் ஒரு பிரமாண்டமான அசையும் திரைசீலை போல இருந்தது. 

அலைபேசியில் எப்படி எங்கு நின்று எடுத்தாலும் முழுமலையையும் எடுக்கமுடியாது. மடிக்கு அடங்காத பிள்ளை மாதிரி. நான் ஒரு கதையில் கர்ணனை அப்படி எழுதியிருந்தேன். கர்ணனை முதன்முதலாக மடியில் வைத்ததும் ராதையின் மனம் பொங்கி வழிந்து மலைக்கும் உணர்வு, குழந்தை கர்ணனின் உடலாக கதையில் மாறியிருக்கும். 

போதவிழ் வான் பூ

போதவிழ் வான் பூ

என்று மந்திரம் போல. சிலநாட்களுக்கு முன்பு 'ஏழுர் வினைக்கு ஓரூர் யாத்த' உலைவாங்கு மிதி தோல் [கச்சிப்பேட்டு நன்நாகையார்] என்ற வரி.

ஏழுர் வினைக்கு ஓரூர் யாத்த

ஏழூர் வினைக்கு ஓரூர் யாத்த

அதற்கு சில நாள் முன்பு 'நகுமே தோழி நறுந்தண் காரே'

அதற்கு முன்பு  'துளிபடு மொக்குள்' [ஒக்கூர் மாசாத்தியார்]

துறுகல் அயல தூ மணல் [காமக்கணிப் பசலையார்]. இதி்ல் துறுகல் என்ற சொல் மட்டும் மனதில் ஓடியது.

துட்கென்றது என் தூய நெஞ்சம்,வேங்கை பெருமலை நாடன், பொழுதிடை தெரியின் பொய்யே காமம் என்று இன்னும் பல வரிகள் வாசிக்கும் நாள் முழுதும் மனதில் சுழன்று கொண்டிருந்தது. 

செய்யுளிற்கு உண்டான சிறப்பு இது. மொழிவிளையாட்டாக இல்லாமல் உணர்வு பொதிந்த வார்த்தைகளால்,இயற்கை அழகை தன்னுள் பொதித்த சொற்களால் செய்யுள் இயற்றப்படும் போது மனதிற்குள் ஒரு மதுரம் போல நிறைகிறது. அந்த மதுரத்தில் கிறங்கும் மனம் அதையே சுற்றிக்கொண்டிருக்கும். 'நான் மதுவில் கிடக்கும் ஈ 'என்று ஒரு வரி உண்டு. பொதுவாக நல்ல கவிதை வரிகள் மனதை கிறுக்காக்கும் போது நான் என்னை இப்படி நினைப்பதுண்டு.

அப்படித்தான் நேற்று 'போதவிழ் வான் பூ' என்ற சொல்லை மனம் சுற்றிக்கொண்டிருந்தது. 

என்ன தான் நான் ஸ்டேண்டர்டு சார்ட்டை போல பேசினாலும் ,இந்த வயதில் வானம் கவிவதும் பின் ஔி எழுவதுமான அன்றாடத்திற்கும் இலக்கியத்திற்குமான  தத்தளிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

 'எத்தனிப்பை' தான் ஔியென்றும், நிறைவென்றும், இனிமையென்றும் இன்னும் சில சொற்களில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வாசிப்பில் நான் ஒரு காட்டுமரம் போல. அல்லது சாலை ஓரத்தில் தானே முளைத்த மரம் போல. எட்டு வயதில் இருந்து கிடைத்ததெல்லாம் வாசித்து பின் தேர்வு செய்து வாசித்த நீண்ட கால வாசிப்பு. என் வயதை நான்காக பிரித்தால் மூன்று பாகத்திற்கு மேலான ஆண்டுகள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒருக்கட்டத்தில் இலக்கியமே நம்மை சரியான இலக்கியத்தின் பாதையில் இட்டு செல்லும் ஆசானாக மாறிவிடும். நமக்கான ஆசிரியர்களை நம் தடத்தில் கண்டுகொள்வோம். நான் என்னை பற்றி நினைத்து கொள்ளும் ஒரே பெருமிதம் இது மட்டும் தான். மற்றதில் எல்லாம் சராசரியை எட்டி எட்டி பிடிக்கும் எளிய கிராமத்துப் பெண். இலக்கியம் தவிர முழுதாக எதுவும் என்னை மகிழ்விக்க முடியாது என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். 

அனுதினமும் கண்முன்னால் இந்த வாழ்க்கை மீதான கண்ணீராக அய்யா அமர்ந்திருக்கிறார். இவருக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தை தள்ளவே முடியாது.

அவருக்கு பேம்பர்ஸ் மாற்றும் போது அவரின் சொற்களை  பிடித்துக்கொள்கிறேன். 'வாழ்க்கையில் கஸ்ட்ட காலம் என்றோ நல்ல காலம் என்றோ எதுவுமில்லை. இது நடக்குது அவ்வளவு தான்..எப்பவும் மனசுக்குள்ள உற்சாகமா மாறமுடிஞ்சா உடனே மாறிடனும்' என்பார். இழப்பிற்கு பிறகும்  மகிழ்ச்சியாக,  உற்சாகமாக இருப்பதற்காக குற்றவுணர்வு கொள்ளக்கூடாது என்பார்.  இப்போது அவருக்கு ஒரு வயதிற்குரிய பிரக்ஞை இருக்கலாம் என்று எனக்குத்தோன்றுகிறது. சுத்தமாக மொழி, பேச்சு மறந்துவிட்டது.  

கற்றலை, நினைவுகளை சொல்வதற்கு தானே மொழி பேச்சு வேண்டும். எல்லாம் மறந்த பின் மொழிக்கான தேவை இல்லை தானே. கற்றலும் ,நினைவுகளும் இல்லாத பிரதேசம் அவருடையது. அங்கு மொழி ரொம்பவும் பிந்தையது. தேவைப்படாதது.

கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக மறதி, நினைவு பற்றிய ஓயாத சிந்தனைகள்,கேள்விகள்,பதட்டங்கள் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. என் மனதின் ஒரு கோணமாக அது இருக்கிறது.

தற்சமயம் என் மீது மேகம் கவிவதற்காக காரணம் மலர் அம்மா. அய்யாவின் பதின் வயது காதலி அல்லது அய்யாவின் முதல் காதல். ஊரறிந்த காதல். பெற்ற பிள்ளைகளுக்கு தெரியாமல் போவதில்லை.

செய்யக்கூடாத பெரிய தப்புகளுள் ஒன்று காதல் என்று வீட்டில் [பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் அப்படிதான்] சிறிய வயதில் இருந்து எப்படியோ மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது பொங்கலுக்கு புத்தகம் அடுக்கும் போது அம்மா, "புத்தம் புது மலர் உங்கய்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் ,"என்று சிரித்தபடி அய்யாவின் ஒரு டைரியை என்னிடம் காட்டினார்.

'அடுத்தவங்க டைரியப் பாக்கறது நான்சென்ஸ்ஸான விஷயம்' என்று தள்ளி விட்டேன். 

[இப்போது அய்யாவின் அனைத்து டைரிகளும் கடிதங்களும் என்னிடம் உள்ளன. இன்னும் பிரித்துப்படிக்கவில்லை. வாசிக்க வேண்டிய பட்டியலில் அவையும் உள்ளன. சுமார் நாற்பது டைரிகள் இருக்கும். அல்சைமரின் அறிகுறிகளும் அதன் தன்மையுயையும் டைரியில் இருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். பேச்சு நிற்கும் வரை தினமும் டைரியும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போதைக்கு எனக்கு வாசிக்கும் மனதைரியம் இல்லை. அவை எளிய அன்றாடம் மட்டும் கொண்ட எளிய வாழ்க்கை குறிப்புகள் இல்லை என்று உறுதியாகத்தெரியும். எங்கள் ஊரின் மிகச்சிறந்த மூளை ஒன்று எழுதிய குறிப்புகள் அவை]

ஆனால் எனக்கு 'புத்தம்புது மலர்' என்ற வார்த்தை பிடித்திருந்தது. நான் புன்னகைப்பதை பார்த்த அம்மா அய்யாவின் 'கதையை' சொன்னார்.

பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் சின்னய்யா 'அய்யா சின்ன வயசில பண்ணின அட்டுழியமெல்லாம் உங்களுக்கு தெரியாது' என்று சிரித்தார். 'காதல் ஒன்னும் அட்டூழியமில்லை ங்ய்யா' என்று அவரிடம் சொல்ல நினைத்ததை சொல்லவில்லை. 

அய்யா அடிக்கடி என்னிடம் சொல்வது..

'நீ தினமும் புத்தகம் படிக்கற..நாவல் படிக்கிற. அதனால உன்னோட யோசனை  வேற. அதையெல்லாம் வீட்லயோ, வெளியிலயோ பேசற வயசு இது இல்லை. நீ சாதாரண கிராமத்து பிள்ளை. அப்படியே இருந்து உன்னை வளர்த்துக்கனும். பேசற இடத்தில் மட்டும் பேசனும். எங்கிட்ட தனியா பேசலாம்' என்று தோளில் தட்டுவார்.

உண்மை தான். இல்லாவிட்டால் எங்காவது திருமணம் என்ற பெயரில்  மாட்டிக்கொண்டு, மத்திய தர வாழ்விற்கான சூழலை விட்டு வர முடியாமல் புலம்பியே சாக வேண்டியிருந்திருக்கும்.

மலர் அம்மாவின் கணவர் பத்து நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அவர் வீடு மூன்று மைல் தொலைவில் உள்ள பச்சைபெருமாள்பட்டி என்ற ஊரில் உள்ளது.  அம்மா இறப்பு வீட்டிற்கு சென்று வந்து 'நல்லா இருந்தா எத்தனை பேருக்கு ஆதரவு. இன்னைக்கு ஒரு வார்த்தை பிடிச்ச மனுஷருக்கிட்டருந்து வந்திருந்தா அவுங்களுக்கு எத்தன ஆதரவு..எல்லாத்தையும் மறந்துட்டாரே..' என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

அய்யாவுடன் பேசுபவர்கள் ஒரு pleasure ஐ உணர்வார்கள். அதிலும் மலரம்மாவுடன் பேசும் அய்யாவின் சித்திரம் அழகானது. திட்டமிட்டோ, எதார்த்தமாகவோ நடந்திருக்கலாம். வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி மலரம்மாவின் பிறந்த வீடு. எங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீடு அவரின் அத்தை வீடு. 

அய்யா பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஆற்றுக்கோ ,கிணற்றுக்கோ சென்று குளித்துவிட்டு ட்யூசன் செல்வார். மலரம்மா பிறந்த வீட்டிற்கு வந்தால் அய்யா அப்படி குளிக்க செல்லும் போதோ, திரும்பி வரும் போதோ தெருவில் நின்று சிலநிமிடங்கள் பேசிக்கொள்வார்கள். அழகு தான் என்று நினைப்பேன். 

இருவருமே உருவத்தில் நல்ல அழகு. மலரம்மாவுக்கு அழகுடன் நல்ல கம்பீரம் உண்டு. வைரமூக்குத்தியின் ஔி கொண்ட அந்த முகத்தில் கர்வமான அந்த அழகான புன்னகை!

அவர் எதிர்வீட்டிற்கு வரும் போது எத்தனை ஆட்கள் இருந்தாலும் அய்யாவாக சென்று பேசுவார். அய்யாவிடம் கள்ளமில்லாத காதலின் தைரியம் உண்டு. கிராமிய சூழலில் காதல் புரளியாவதை எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். என் சிறுவயதில், நான் வளர்ந்த சூழலில், காதலை நேர்மறையாக அணுகியவர் அவர் மட்டும் தான். எப்போதும் காதலை புரளியாக்கி இட்டுக்கட்டி பேசுவதை தவிர்ப்பார். பள்ளிக்கூடத்தில் எந்தப்பயலாவது ஹார்ட் வரைந்து, யார் பெயரையாவது எழுதி வைத்திருந்தால் மற்ற ஆசிரியர்கள் கடுப்பாவார்கள். அய்யா சிரித்தபடி எழுதியவனை கண்டுபிடித்து, அவருக்கு அது தெரிந்ததை போல காட்டிக்கொள்ளாமல் அழிக்க வைப்பார். 

மலரம்மாவிற்கு ஐந்து பெண் குழந்தைகள். அவரின் மூன்றாவது பெண் இறந்த போது அய்யா அவர் வீட்டில் ,அவர் கணவர் ,உறவுகள் முன்பே, " பிள்ளைய சரியா பாத்துக்காம என்ன பண்ணின," என்று திட்டிவிட்டு வந்தார். அவருக்கு எப்போதுமே ஆசிரியர் தோரணை உண்டு. எதிர்நிற்பவர் அதை மீறுவது கடினம். ஊருக்கு வரும் போது மலரம்மா  அம்மாவிடம், "என்னைய ஒரு நாளும் மாமன் இம்புட்டு வேகமா பேசினதில்ல," என்று அழுததாக அம்மா சொன்னார். 

அவர்களை பிரித்தது ஜாதி மட்டும் தான். இன்று வரை குடும்பங்களுக்குள்ளான அனைத்து நல்லது கெட்டதுகளுக்கும் அய்யாவும் அம்மாவும் சென்றுவிடுவார்கள். அவர்களும் அப்படித்தான். காதல் பிரிவு என்பது  ஒரு நல்ல புரிதலின் பின், உறவின் நேர்மையின் அடிப்படையில்,  வயது ஏற ஏற ஒரு கரிசனமாக, நட்பாக,சகஜமான சகமனித உறவாக மாறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு என்பதை இளம்வயதில் இவர்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.

இந்த மழைகாலத்தில் மலரம்மாவின் இழப்பு மனதிற்குள் தொந்தரவாக இருந்தது. அய்யாவின் இருந்தும் இல்லாமல் ஆன நிலை குறித்த பதட்டமான சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது. வெளியே ஓயாத மழை. 

நேற்று காலை வானம் மெல்ல இதழ் விரித்த போது புதுவெளிச்சத்தில் ஊரை பார்த்தேன். இரண்டு தளங்கள் கொண்ட மாடிவீடுகள் அங்கங்கே உண்டு. மற்றபடி உயரமான இடம் என்றால் கொல்லிமலை தான்.

 எங்கள் வீட்டிலிருந்து ஒரு வீடு தள்ளி இருக்கும் நட்ராஜ் ஆசாரியார் மண்வெட்டிக்கான பிடி செதுக்கிக்கொண்டிருந்தார். அவருடைய முப்பாட்டனார் காலத்தில் மாரியம்மன்கோவில் தேர் செய்வதற்காக வந்து தங்கிவிட்ட குடும்பங்களுள் ஒன்று அவருடையது. அது இவர் மகனுக்கே தெரியுமோ என்னவோ?

ஊரில் கடைசியாக உருவான தெரு எங்களுடையது. விளைநிலம் மிகுந்த, மக்கள் நெருக்கம் மிக்க ஊர் இது. எந்த  வீட்டிற்கு முன்பும் விசாலமான இடம் பார்க்க முடியாது. வாடகைக்கு விடுமளவிற்கு வீடுகள் இல்லை. ஒரு ஏக்கர் நிலம் சராசரியாக பதினைந்திலிருந்து இருபது லட்சம் இருக்கும். விவசாயம் தீவிரமான தொழிலாக இருக்கும் ஊர்.

பெரு நிலக்கிழார்கள் ஒரு பக்கமும், சிறு குறு நிலவுடைமையாளர்கள் ஒருபக்கமுமாக விவசாயம் முக்கியமான தொழிலாக இருக்கிறது.ஊர்களின் ஒப்பீட்டு அடிப்படையில் எங்கள் ஊர் புதிதாக உருவான ஊர். 

நம்ம ஊருக்கு வயசு...இருநூறு வருஷத்துக்குள்ள தான் இருக்கும் என்று அய்யா கதையை தொடங்குவார். ஊர் தெய்வங்கள், யார் யார் எந்த ஊர்களில் இருந்து இங்கு வந்தார்கள்? ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஏன் நம் தெருவாசிகளுக்கும் வடக்கு தெரு வாசிகளுக்கு பெரிய ஒட்டுதல் இல்லை. ஏன் தெருவின் பாதியில் இருந்து சிலர் வீடுகளுக்கு மட்டும் கிழக்கே தனியாக சுடுகாடு இருக்கிறது..சில கொலைகள் எதற்காக நடந்தன..அடிப்படை என்னவாக இருக்கலாம்? மூன்று ஊரடங்கு எதற்காக? அந்த கால கட்டத்தில் ஊர் எப்படி இருந்தது? ஏன் அப்படியானது? பக்கத்தில் உள்ள அக்கிரஹாரத்தில் முன்பு இருந்த முக்கியமானர்கள் யார் யார்? [கொரானா ஊரடங்கு அல்ல]

விவசாயத்தில் உள்ள அரசியல் மற்றும் அடிப்படைபண்புகள் என்று அவர் நினைத்ததை எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார். என் கண்கள் பேந்த பேந்த என்று முழிக்கும். அவர் தோள்களை தட்டி 'தெரிஞ்சு வச்சுக்கப்பா,' என்பார். ஆனால் தங்கை ,தம்பியிடம் இதையெல்லாம் பேசியதில்லை என்று இப்போது எங்களுக்குள் பேசும் போது தெரிகிறது. தங்கை தம்பியிடம் அவர்களுக்கானதை பேசியிருப்பார். அய்யாவின் பார்வை கர்ணனுக்கானது. மேலிருந்து பார்ப்பது என்று இப்போது உணர்கிறேன்.

இதற்கான மாற்று பார்வை சின்னய்யாவிடம் இருந்து கிடைத்தது. அவரும் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தவர். அவருடைய பார்வை எதார்த்தமானது...லௌகீகமானது.

இருவரும் சேர்த்து மனதில் பதிய வைத்த ஊரின் வரலாறு உள்ளது. நான் பார்த்த, பார்க்கும் ஊரின் சித்திரம் ஒன்று உள்ளது.

அய்யா ஒரு ஆசிரியருக்கான பார்வையும், கூர்மையும், பெருந்தன்மையும் உள்ளவர். சின்னய்யா கறாரான மதிப்பீடு உள்ளவர். நான் வேடிக்கை பார்ப்பவள். மேலும் எங்கள் ஊரின் காந்தியவாதியான பாலுப்பிள்ளை தாத்தாவுடன் இரண்டரை ஆண்டுகள் பழகும் வாய்ப்பு  எனக்கு இளம் வயதில் அமைந்தது. 

அவர் ஊரின் நினைவில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. ஒரு சிலரின்  நினைவில் இருப்பார். அவரின் காரை வீடு மூன்று நான்கு கைகளுக்கு மாறிவிட்டது. ஏன் அய்யாவும் சின்னய்யாவும் அவ்வளவு பேச வேண்டும்? ஏன் அறுபது வயதில் இருவரும் இல்லாமல் ஆக வேண்டும்? [ஒருவர் மறதியால், இன்னொருவர் இறப்பால்]

இலக்கியம் போல வாழ்கைக்கு ருசியான பண்டம் வேறில்லை. அய்யாக்கள் என் நினைவில் இருக்கிறார்கள் என்று நினைத்ததும் கவிந்த இருள் மெல்ல களைந்து பொதியவிழ்ந்தது மனம். அவர்கள் அம்மாவோ, சித்தியோ அறிந்த அய்யாக்கள் இல்லை. நான் மட்டும் அறிந்தவர்கள். நான் அவர்களின் மகள் மட்டுமல்ல நல்ல தோழியும் கூட.

மறதி இயல்பு.  பெருமறதியும் எதார்த்தம். ஆனால் மாற்றாக மறைந்தவை எங்கோ பதியமிடப்பட்டும் இருக்கிறது.

பதியங்கள் புதுமண்ணில் முளைப்பது நியதி.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2023 21:46
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.