பார்த்துதம் சுவைத்ததும்-6 : அவன் அவள் அது
மனிதப் பண்புகள் நூலில் மணிகோர்ப்பதுபோல சிறுகச்சிறுக அநத நூலின் சம்மதமின்றியே, அதன் உணர்வுக்குக் கொண்டுபோகாமலேயே நடைபெறுகிறது, கோர்க்கும் கைகளில் ஒன்று நாம் சார்ந்த சமூகம், மற்றது நித்தம் நித்தம் குளித்து, பருவகாலத்திற்கேற்ப உடைகள் தரித்து, போதிய அலங்காரத்துடனும், சௌகரியத்துடனும் இயற்கையை மீற முயலும் மானுடத்தின் பொதுப்பண்புக்குரியது. இப்பொதுப்பண்பின் கை கொஞ்சமல்ல கூடுதலாகவே நீளமானது, நீ அப்படியிரு அல்லது இப்படியிருவென கண்காணாத தேசத்திலிருந்தும் கட்டளையிடலாம். இதுதான் நாம் வாழும் காலத்தின் மனித வாழ்க்கை.
தனிமனிதன் யார்? அல்லது ஒரு பெண் என்பவள் யார்? எல்லா உயிர்களையும் போலவே மனித உயிர் படைக்கப்படுகிறது. Mémoire d’Hadrien என்கிற பிரெஞ்சு நூலை மொழிபெயர்க்கத் தொடங்கியதில் பல இலத்தீன் சொற்களின் அறிமுகம் கிடைத்தது அதில் ஒன்று “individus” கிரேக்க மொழியின் “atomon”என்கிறச் சொல்லுக்குப் பங்காளி அதன் பொருள் பொருள் தனித்தது, பிரித்தறிய முடியாதது. பெற்றோர் மரபணுக்களின் கூட்டுத்தொகையில் 1+1=2 என அறியபட்டாலும், இந்த இரண்டு ஒன்றுக்ககளின் (1+1) அல்லாத பண்பு இந்த 2 – இரண்டில் இருக்கிறது, இங்கேதான் அந்த இரண்டாவது கையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மூலக்கதை எழுத்தாளர் வேண்டாம் சிவசங்கரிஎன்றே குறிப்பிட்டுவிடலாம், எழுத்து வாசிப்பு என்றிருப்பவர்களுக்கு எழுத்தாளர் என்கிற பட்டபெயர் தேவையில்லை, தெருவில் போகிறவர்களோடு அறிமுகம் என்கிறபோதுதான் இது தேவையாகிறது. ரிக்ஷா ஓட்டும் நடிகர் திடீரென ஆங்கிலம்பேசி பாமர இரசிகனை மெய்சிலிர்க்கவைக்கும் அறிமுகம் சிவசங்கரிக்கு தேவையல்ல. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கவிஞர் எழுத்தாளர் எனக் கூறி அறிமுகப்படுத்துவதில்லை. சிவசங்கரியின் “ஒரு சிங்கம் முலாகிறது ” என்கிற கதையின் சினிமா வடிவம் “அவன் அவள் அது ” . இயக்கம் முக்தா சீனிவாசன். சராசரி தமிழ்ப்பட வெகுசன இரசனையிலிருந்து விலகி எடுத்திருக்கும் திரைப்படம். சிவக்குமார், இலட்சுமி, ஸ்ரீபிரியா வழ்க்கம்போல , முன்னணி நட்சத்திரங்கள் என்கிற வார்த்தைப் பிரயோகம் தமிழில் இருக்கிறதில்லையா அதைத் தெரிவிப்பதற்காக சில நடிகர்கள். அவர்கள் வந்துபோகிறார்கள், மனோரமா உட்பட. படம் என்னவோ ஸ்ரீப்பிரியா, இலட்சுமி, சிவக்குமார் இவர்களுக்கான படம். திரைப்படத்தில் இவர்கள் பங்களிப்பை இப்படித்தான் வரிசைப் படுத்த வேண்டியுள்ளது. சிவக்குமார் ஒரு கதாநாயகன் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சிவக்குமார் – இலட்சுமி கண்வன் மனைவி, இருவருக்கும் தமிழ்வழக்கில் உச்சுகொட்டி சொல்வதுபோல குழந்தை பாக்கியமில்லை. காளையில்லாமல் பசு கருத்தரிக்கும் அறிவியல் வழிமுறை மனிதர்க்கு ஒத்துவருமோ? லாவன்யா(லட்சுமி) கருப்பையில் கட்டி, விளைவாக அவள் வயிற்றில் குழந்தையுண்டாகச் சாத்தியமில்லை. மாமனாரின் வாரரிசு ஆசையை நிராசையாக மருமகளுக்கு விருப்பமில்லை, “வழி வழியாக காலம் காலமாக நம்பிக்கை என்கிற பெயரில் அரசமரத்தை சுத்திட்டு, அடிவயிற்றைத் தொட்டுப்பார்காமல்” அறிவியல் தீர்வைத் தேடும் இந்த நகரத் தம்பதிகளுக்கு , கதாநாயகனுடைய தந்தையின் ஆரூட நம்பிக்கையை மெய்யாகவேண்டிய கடமை இருக்கிறது. கருப்பை நலிவுற்ற லாவன்யா தனது கணவனின் ஜீவ அணுக்களைக்கொண்டு குழந்தையை பெற்றுத்தரக்கூடிய ஒரு பெண்ணைத் தேடுகிறாள். அப்படிக் கிடைத்தவளே துணை நடிகையான மேனகா. தன்னுடைய காதலையும் அன்பையும் உறுதிசெய்ய ஒரு குழந்தை வேண்டி லாவண்யா தேடும் முயற்சியில் கணவனை பறிக்கொடுத்துவிடுவோமோ என்கிற அச்சம், மனைவிக்கு; கருப்பையை வாடகைக்குவிட்ட மேனகா, அக்கருவிற்கு சொந்தக்காரனிடத்தில் மனதையும் கொடுக்கிறாள். மனம் வாடகைக்கு விடப்பட்டதில்லை, இயற்கையின் ஆற்றலை எதிர்க்க சக்தியற்ற மனித மரம் அவள், வேரோடு சாய்கிறாள். இலட்சுமியும் ஸ்ரீபிரியாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறாகள், என்னுடைய வாக்கு மேனகாவிற்கு. இயல்பாக மனித மனங்களின் குணாதிசயங்களை படம் பிடித்து இருக்கிறார்கள், தமிழ் சினிமாவின் சில பிரத்தியேக அம்சங்களுடன்.
Nagarathinam Krishna's Blog
- Nagarathinam Krishna's profile
- 3 followers

