மருந்தோடு வந்த யவனனும் தெருவெங்கும் திரிதரு மாந்தரும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் யவனன் வரும் பதினைந்தாம் அத்தியாயத்தில் இருந்து
மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ.

எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப் போய் நின்று வேடிக்கை விநோதம் என்னவென்று நோக்க வேலையற்ற ஒரு கூட்டம் முதற்சங்க காலத்துக்குப் பல காலம் முன்பிருந்தே மாநகர் அல்லங்காடியிலும் நாளங்காடியிலும் திரிந்து கொண்டிருக்குமே, திரிதரு மாக்கள், அவர்களை எதிர்பார்த்துத்தான் அவன் அகவியது.

பத்து பேர் அப்படி இப்படி ஒரு நிமிடத்தில் அங்கே வந்து கூட்டமாக நிற்க, யவனன் கூவினான் – மருத்துவர் இங்கே எந்தத் திசையில் இல்லம் ஏற்படுத்தி வசிக்கிறார்?

அங்கே விநோதம் வேடிக்கை பார்க்க வந்து நின்ற அத்தனை பேருக்கும் மருத்துவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்கு அரசனில் தொடங்கி மருத்துவர், படைத் தலைவர், கோமாளி வரை வார்த்தையால் சீண்டி வேடிக்கை பார்க்கக் கூடத் தெரியும். பொழுது போகாவிட்டால் ராஜநர்த்தகி மாருக்கும் பெருச்சாளிக்கும் சிலேடையாக நேரிசை வெண்பா பாடச்சொல்லிக் கேட்க உடன் எழுதுமளவு கவிதையும் தெரியும். அவர்களின் சில பாட்டுகள் கவிமருந்து உட்பட அரசவைக் கவிஞர்கள் மண்டையைக் குடைந்து கொண்டு யாத்தளிக்கும் சராசரிப் பாக்களை விடச் சுவையானது என அரசனே சொல்வதாகக் கேள்வி. யார் எழுதியுமென், சிருங்காரத்தில் பூத்த செய்யுள் எக்காலமும் சோடை போகாது.

என்றாலும் அவர்கள் தேவையில்லாத இடத்தில் எல்லாம் புகுந்து புறப்படுகிறவர்கள். இங்கே வந்திருப்பவன் யார் என்ன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் அவர்தம் சிரம் வெடித்து விழுந்துவிடுமன்றோ.

நான் ரோமாபுரியிலிருந்து வருகிறேன் என்று அவன் தொண்டையைக் கரகரப்பு நீக்கிச் செறுமிக்கொண்டு தொடங்க, நாங்களும் ரோமாபுரியிலிருந்துதான் வந்தோம் என்று ஒரு கழுவேறி சிரிக்காமல் மறுமொழி செப்பினான். அங்கே அடுத்து ஒரே சிரிப்பு.
பகடிக்குப் பத்து வழி. அதுவும் தொழிலியற்றா மாக்கள் இலக்கின்றித் திரிதரும்போது.
மருத்துவரைச் சந்திக்க வந்தேன் என்றான் வந்தவன்.

அவர் யவனர்களோடு பேச மாட்டார்.

வாசிக்க நாவல் வாங்கக் கோருகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2023 20:01
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.