பீத்தோவனின் சிம்ஃபொனி [சிறுகதை]
புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன்.
அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்!
புதிதாய்ப் பிரசவித்த பெண்களிடம் வேர்வையின் வீச்சமும் பாலின் மணமும் கலந்து வீசும் வாசனை அவர்களிடம் இருந்தது. பெண்களாக இருக்குமோ என எண்ணம் வந்து மார்புகளைக் கவனித்து ஏமாந்தேன். ஒரு ரோமமும் விளைந்திடாத வழுக்கைத் தேகம்.
நடுவில் நின்றவள் என் நெற்றி மத்தியில் தனது இடது கை ஒற்றை விரலால் தொட்டாள். அதிலிருந்து ஒரு நீல ஒளி கிளம்பி என் மண்டைக்குள் புகுவதைப் பாராமலேயே உணர முடிந்தது. தமிழின் முக்கிய இளம் எழுத்தாளனான நான் எதிர்காலத்தில் இந்தச் சம்பவம் பற்றி எழுதுகையில் மடிவாளா மசிதேவா என்ற பன்னிரண்டாம் நூற்றாண்டின் சிறந்த கன்னட வீரரைப் பற்றியும் சேர்க்க வேண்டுமா என யோசித்துக் கொண்டிருந்த போதே மயக்கமுற்றேன். மூவரும் என்னைத் தூக்கினார்கள். காற்றில் மிதப்பது போலிருந்தது.

*
நான் மறுபடியும் கண் விழித்த போது அங்கே இருந்த அந்நியள் கவனித்து அவசரமாக என்னை அணுகித் தன் இடக்கையின் விரலால் என் நெற்றியில் தொட்டாள்; மறுபடியும் மயங்கினேன். மறுபடி கண் விழித்த போது... மறுபடி மயங்கினேன்… மறுபடி… மறுபடி…
அது மயக்கமா உறக்கமா என யோசிக்கிறேன். அந்த நிலையில் எனக்குத் தொடர்ந்து கனவுகள் வந்து கொண்டே இருந்தன. அவை கனவுகளா அல்லது நினைவுகள்தானா என்றும் குழப்பமாக இருந்தது. எதுவெனினும் என் ப்ரக்ஞை விழித்துக் கொண்டுதான் இருந்தது. அதாவது ஸ்தூல உடலிலிருந்து சிந்தையை மட்டும் தனியே கழற்றி எடுத்து சூட்சம வடிவில் அந்தரத்தில் உலவ விட்ட நிலை. அது ஒரு போதையாகச் சுகம் தந்தது.
உடல் இல்லாத மனம் என்பதுதான் எத்தனை எடையற்றது! எத்தனை சுமையற்றது!
ஏலியன் எனப்படும் வேற்று கிரகவாசிகள் யாரோ என்னைக் கடத்தி இருக்கின்றனர். அது வரை புரிகிறது. ஆனால் எதற்குத் தூக்கினார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?
அதை அறிய உடல் வேண்டும். ஆனால் மயக்கம் தெளியத் தெளிய, மீண்டும் மீண்டும் என்னை அதற்குள் பிடித்துத் தள்ளுகிறார்கள். எத்தனை காலமாக இப்படி இருக்கிறேன்?
எத்தனை மணி, எத்தனை நாள், எத்தனை வாரம், எத்தனை மாதம் அல்லது வருடங்களா!
*
சரி, எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. உடல் மீளும் வரை என்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதில் அலுப்பே இல்லை. இந்த நார்சிஸ்டிக் உளக்கூறுதானே என்னை ஒரு கலைஞனாக வைத்திருக்கிறது! அதாவது ஒரு படைப்பாளியாகக் கடவுளுக்கு நிகரான சிருஷ்டிகர்த்தாவாக நான் நின்று கொண்டிருக்க என் சுயம்தான் காரணம். ஆசானை சுயமோகம் என்று சிலர் வன்மக்கேலி செய்கிறார்களே! அதுதான் ஐயா, அவர் ஆற்றலின் மூலம்! தன்னை விரும்பாதவனும் தன்னை மதிக்காதவனும் எழுத்தாளனாக முடியாது.
தலைக்கனமே கலை. அது தலையினுள்ளே இருக்கும் சரக்கும்தான்; மிகுகர்வமும்தான்.
அதென்னவோ Writer’s Block என்று பலரும் சொல்கிறார்கள். எனக்கு பதின்மத்தில் எழுதத் தொடங்கிய நாளில் இருந்து அப்படி ஒன்று வந்த நினைவே இல்லை. பிரசுரமாகிறதோ இல்லையோ தினம் ஏதாவது எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறேன். எழுத்தானது சொப்பன ஸ்கலிதம் போல் அநிச்சைச் செயலாகவே இருந்து வந்திருக்கிறது. யாரேனும் என் கையைப் பிடித்துக் கொண்டால் ஒழிய எழுதுவது நிற்காது என்றே தோன்றுகிறது. அப்போதும் கூட மனதில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருப்பேனோ என்னவோ!
இதை எல்லாம் கேட்டதும் நான் ஒரு தொழில் முறை எழுத்தாளன் என்றும் முழு நேரமாக எழுதுபவன் என்றும் உங்களுக்குத் தோன்றலாம். அப்படி இல்லை. எங்கள் மொழியான தமிழில் அது சாத்தியம் இல்லை. இந்த மொழி பேசும் மக்கள் புத்தகம் வாங்குவதில்லை. வாங்கினாலும் வாசிப்பதில்லை. வாசித்தாலும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. வாசிப்பு என்பதே இங்கே பரம ரகசியமான நடவடிக்கைதான். எனவே இங்கே எழுத்தாளர்களைப் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியாது. எனவே புகழ் பற்றிப் பேச்சே கிடையாது.
விற்கும் சொற்ப நூல்களுக்கும் பதிப்பகங்கள் ராயல்டி தர மாட்டார்கள். எனவே எழுதிச் சம்பாதிக்கவோ அதன் மூலம் வாழ்க்கை மேற்கொள்வதோ எம் மண்ணில் சாத்தியமே இல்லை. சிலர் தொலைக்காட்சி நெடுந்தொடர், திரைப்படம் எழுதியோ, ஊடகங்களில் பணிபுரிந்தோ பணம் ஈட்டுகிறார்கள். ஆனால் அவை மற்ற எந்த வேலையையும் போல் அடுத்தவருக்குச் செய்யும் அழுத்தம் மிக்க அடிமை ஊழியமே. எனவே அதை எழுதிச் சம்பாதிப்பதாகக் கணக்கில் கொள்ள முடியாது. அதனால் என் மொழியின் மற்ற எந்த எழுத்தாளரையும் போல் நானும் பணி ஓய்வுக்குக் காத்திருக்கும் பகுதி நேர எழுத்தாளன்!
பகுதி நேரமென்றால் அதிகபட்சம் தினம் ஓரிரு மணி நேரம். அப்புறம் வார இறுதிகள்.
நான் பெங்களூரு மாநகரின் புகழ்மிக்க ஒரு குடிக்கூடகத்தில் மதுப்படைப்பானாகப் பணியாற்றுகிறேன். அதாவது பப்பில் பார்டென்டர். மதுப்படைப்பான் என்பது நானே உருவாக்கிய சொல்தான். பார்டென்டரின் வேலை விதவிதமான காக்டெய்ல்களைத் துல்லியமான அளவில் கலந்து உருவாக்குவது, அதன் மூலம் மூன்று விஷயங்களைத் தீர்மானிப்பது: காக்டெய்ல் நாவில் பட்டதும் தெரியும் ருசி, அது பரவித் தொண்டையில் இறங்கும் போது உண்டாகும் உடனடி அனுபவம், அது குருதியில் கலந்து மண்டைக்கு ஏறியதும் கிளறும் போதை. அந்த மந்திரக் கலவையை உருவாக்கும் படைப்பாளி. அது போக, அதைக் கூடத்துக்கு வரும் நுகர்வோருக்குப் பரிமாறுவது. அதாவது படைப்பது. ஆக, இருவகையிலும் படைப்பான் பொருத்தம். காக்டெயிலைக் கலக்கும் போதும் சரி, அப்பணிக்குப் பெயரிடும் போதும் சரி, எனக்குள் இருக்கும் எழுத்தாளன் விழித்தேதான் இருக்கிறான், பாருங்கள். ஆனால் ஒரு விஷயம். நான் இது வரையில் குடித்ததே இல்லை.
குடிக்க மாட்டேன் என அம்மாவிற்குப் பதின்மப் பிராயத்தில் செய்து தந்த சத்தியத்தை மீற விரும்பவில்லை. மீறிக் கொள்கிறேன் என அனுமதி வாங்க அம்மாவும் இன்றில்லை.
என் வயது? சென்ற ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெறும் காலம் கடந்தது. கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை. மனைவி மதுமிதா; மகள் சந்தியா. காதல் திருமணம். கல்லூரியில் மதுமிதா என்னைக் காதலித்த காலத்திலேயே நான் சில அசட்டுக் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அவளுக்கு அதில் ஆர்வம் இல்லை. புகாரும் ஏதுமில்லை என்பதால் அவ்வப்போது திரையரங்க ஓரங்களின் இருளில் வைத்து முத்தமிட அனுமதித்தாள்.
பிஎஸ்சி ஃபிசிக்ஸுக்கு கல்லூரி முடித்து பெரிதாக வேலை கிடைக்கவில்லை. மேலே படிக்கச் சொன்ன அப்பாவை நிராகரித்தேன். போட்டித் தேர்வுகள், அரசுப் பணிகளில் ஆசையில்லை. நண்பனின் தொடர்பில் முதலில் ஓர் உணவகத்தில் பரிமாறுபவனாகச் சேர்ந்தேன். சம்பளம் குறைவு என்றாலும் கணிசமாக டிப்ஸ் கிடைத்தது. அங்கே இருந்து ஒரு மதுக்கூடம். குடித்த பின் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதால் டிப்ஸ் அதிகம் கிடைத்தது. பிறகு அதை விடப் பெரிய நட்சத்திர மதுக்கூடத்தில் சேர்ந்தேன்.
அங்கே ஒரு நாள் பார்டென்டர் வராமல் போக, இடம் நிரப்ப என்னை அந்த வேலையைச் செய்யப் பணித்தார்கள். ப்ளடி மேரி, பைனா கொலாடா ஆகிய எளிய காக்டெய்ல்கள் மட்டும் செய்தால் போதும். மற்றவை இல்லை என்று சொல்லி விடலாம் எனத் திட்டம்.
ஆனால் என் படைப்பு மனம் சும்மா இருக்கிறதா! வர்ஜின் மேரிக்கும் ப்ளடி மேரிக்கும் இடையே மேட்டிங் மேரி என ஒன்று தோன்றியது. பக்கார்டி ப்ரீஸரில் செய்து பார்த்தேன்.
அது அன்று வந்த பெண்கள் கும்பலுக்குப் பிடித்தது. எல்லோரும் மூன்று முறை ரிபீட் கேட்டார்கள். அன்று ஆர்வமாக கூகுள் செய்தும் கற்பனையிலும் சில காக்டெய்ல்கள் உருவாக்கித் தர அன்று வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனை நடந்தது. நாளின் முடிவில் கணக்குப் பார்த்த கல்லாவில் இருந்தவர், கவனித்துத் தட்டிக் கொடுத்தார்.
விஷயம் முதலாளி காதுக்கும் போனது. ஆனால் மாற்றமானது உடனே வரவில்லை. அது அதிர்ஷ்டமாகவோ ஒரு நாள் அதிசயமாகவோ இருக்கலாம் என அவர் யோசித்திருக்க வேண்டும். பின் வந்த நாட்களில் பாதி நேரம் என்னை பார்டென்டராகப் பணியாற்றச் சொன்னார். அது என் பிரத்யேகம் எனச் சீக்கிரத்திலேயே புரிந்து விட ஒரே மாதத்தில் என்னை முழு நேர பார்டென்டராக ஆக்கினார். சம்பளமும் கணிசமாக அதிகரித்தது.
மற்றவர்களைப் போல் இல்லாமல் மதுமிதாவின் பெற்றோர் சாதி வித்தியாசத்தையும், மதுக்கூட வேலையையும் பெரிதுபடுத்தாமல் எங்கள் திருமணத்துக்குச் சம்மதித்தனர்.
“பின்னாடி நான் மறைச்சதா இருக்கக்கூடாது, மாமா. நாங்க … ஆளுக. குலத் தொழிலு …”
“பொறப்புல என்ன இருக்கு, மாப்ள! நல்லபடியா புள்ளைய வெச்சுப் பொழச்சாச் சரி.“
“அப்புறம் வேலை எனக்கு பார்லதான். இப்பத்திக்கி அதை விடறதா எண்ணமே இல்ல.”
“ஆனா நீங்க குடிக்கறதில்லையே! தவிர, அதும் ஒரு வேலைதானே! அதனால் தப்பில்ல.”
“நான் எழுதறவன், மாமா.”
“அது பரவால்ல, மாப்ள. எல்லோருக்கும் இப்படி ஏதாவது ஒரு குறை இருக்கறதுதான்.”
நான் ஏதும் சொல்லவில்லை. மதுமிதா வீட்டில் அப்படி எல்லாவற்றுக்கும் இறங்கி வந்து சம்மதித்ததற்குக் காரணம் அவளது தோஷ ஜாதகம் என்பதைப் பிற்பாடு அறிந்தேன்.
அவளை மணம் செய்து கொள்பவனுக்கு அற்பாயுள் என்றும் கணித்து இருந்தார்கள்.
செத்தால் என்ன! “எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்” என எண்ணிக் கொண்டேன்.
திருமணத்தின் போது என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பி இருந்தது. சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டு பதிப்பித்த என் பதிப்பாளரும், முன்னுரை தந்த மூத்த எழுத்தாளரும் திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார்கள்.
முதலிரவில் மதுமிதா மீது ஆவேசமாகப் பரவி, ஒவ்வொன்றாகக் கலைத்துப் போட்டு, விதவிதமாகக் கலந்து களைத்து மல்லாந்து விட்டம் பார்த்திருந்த போது சொன்னேன்:
“திரவ மதுவைக் கலக்கிப் புரிந்து கொண்டிருந்த வித்தையை இன்று திட மதுவிடம் செய்து பார்த்தேன். இது வேறு ருசி, வேறு அனுபவம், வேறு போதை. புசிப்பவனுக்கு மட்டுமின்றி படைப்பானுக்கே சகல புலன் வழியும் மூளைக்குப் பாயும் மது நீயடி!”
மதுமிதா ஒன்றும் பேசவில்லை. திரும்பிப் பார்த்தேன். கண் மூடி உறங்கியிருந்தாள். கடுப்பாகி மறுபடி கோப்பையில் மது ஊற்றி, அளவு பார்த்துக் கலக்க ஆரம்பித்தேன்.
*
இந்த முறை விழித்த போதுதான் கவனித்தேன். எப்போதும் என்னை நுதல் தொட்டுத் தாலாட்டி உறங்க வைப்பவள் ஒரே பெண்மணிதான். அதிசயமாக இன்று அவள் அதைச் செய்யவில்லை. என்னைப் பார்த்து புன்னகை மாதிரி ஏதோ செய்தாள். அது அவளை மேலும் அகோரமாகக் காட்டியது. அவளுக்கிருந்த மூன்று சொப்பு வாய்களில் நடுவில் இருந்த ஒன்றில் மட்டுமே சிரிப்பு போன்ற நெளிவு நிகழ்வு நடந்தேறுகிறது என்பதைக் கவனித்தேன். இருபுறமும் இருந்த மற்ற வாய்கள் அசைவு இல்லாமல் சும்மா இருந்தன.
“நீங்கள் யார்? இது என்ன இடம்? எதற்காக நான் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறேன்?”
“அவசரப்படாதே! எல்லாவற்றுக்கும் இன்னும் சற்று நேரத்தில் விடை தெரியும், நண்பா.”
எவ்வித இலக்கண உச்சரிப்புப் பிழைகளும் இல்லாத மிக மிகத் தூய, துல்லிய தமிழ்!
“இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். நீ இங்கு பாதுகாப்பாக இருக்கிறாய்.”
“கடத்தி விட்டு பாதுகாப்பு என்கிறீர்கள். நான் இங்கே வந்து எத்தனை நாளாகிறது?”
“அதிகமில்லை. உங்கள் பூமிக் கணக்குப்படி பதினான்கு நாட்கள். இன்று அங்கே போகி!”
எனில் வாரிசும் துணிவும் வெளியாகி மூன்று நாளாகி விட்டதா! எது முதல் நாள் வசூலில் வென்றது எனத் தெரியவில்லையே! என் ஆயிரம் பக்க நாவல் இந்த சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகி இருக்கும். வரவேற்பு எப்படி இருக்கிறது எனப் புரியவில்லையே! ஜெயமோகன் படித்தாரா, திட்டினாரா என்று மனம் குறுகுறுத்தது. அப்போதுதான் அது உறைத்தது. இவள் என்ன சொன்னாள்? இன்று அங்கே போகி. எனில் இது என்ன இடம்?
“உன் குழப்பம் புரிகிறது. நீ இப்போது பூமியில் இல்லை. சூரியக் குடும்பம் கூட அல்ல. நீ எங்கள் கிரகத்தில் எமது விருந்தாளியாக இருக்கிறாய். உங்கள் ஆட்கள் இதற்கு வைத்த பெயர் ப்ராக்ஸிமா செஞ்சௌரி பி. பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டு தூரத்தில் உள்ளோம்.”
“வாட்!”
“நான் உன்னைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டுள்ள உதவியாளினி. என் பெயர்…”
அவள் சொன்னது ஓர் எண். நெடிய 32 இலக்க எண். அவள் சொல்லி முடித்த போது எனக்கு முதல் எண் நினைவில்லை. அவளை எண்ணிட்டா அழைப்பது! குழப்பமாகப்பார்த்தேன்.
“உங்கள் ஊரின் யுனிவர்சலி யுனிக் ஐடென்டிஃபையர் மாதிரி. இங்கே மக்கட்தொகை மிகப் பெருகி விட்டதால் பெயர்கள் அப்படித்தான். இல்லையென்றால் குழப்பமாகும்.”
“எம் ஊரின் பள்ளிகளில் வகுப்புக்கு மூன்று சரவணன், இரண்டு ப்ரியா இருப்பார்கள்.”
அவள் மறுபடி புன்னகை மாதிரி தன் முகத்தில் ஏதோ விகாரச் சேஷ்டை செய்தாள்.
“உன் பெயரை நினைவில் இருத்திச் சொல்வது கஷ்டம். இவ்வளவு சிரமமான பெயரை ரஷ்யாவில் கூட வைப்பதில்லை. எனது அடுத்த நாவலின் நாயகிக்கு அத்யந்தா என்கிற பெயர் யோசித்திருந்தேன். அதையே உன் பெயராக வைத்து அழைத்துக் கொள்ளவா?”
“உன் விருப்பம். எனக்கு ஆட்சேபமில்லை. உனக்கான சேவையே எனக்கிடப்பட்ட பணி.”
“சரி, அத்யந்தா! இப்போது சொல். எதற்காக என்னை இங்கே கடத்தி வந்திருக்கிறீர்கள்?”
அத்யந்தா மறுபடி அந்த வாயால் புன்னகை போல் செய்தாள். சிறிது நேரத்தில் அவள் என் நெற்றியைத் தன் இடக்கை விரலால் ஸ்பரிசிக்காமலே தூக்கம் சொக்கி வந்தது.
*
கவிதைகள் எழுதுவதை அறவே கை விட்டிருந்தேன். சிறுகதைகள் என்னை ஆக்ரமித்துக் கொண்டன. ஆனால் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுத, பார் வேலையைத் தவிர்த்து நிறைய நேரம் செலவிட வேண்டி இருந்தது. வேலையின் மீது மெல்லிய கசப்பு எழுந்தது.
என் மனைவி... என்ன பெயர் அவளுக்கு? அடடா! மறந்து விட்டது. சரி, பெயரில் என்ன இருக்கிறது. அவள் முகம்தான் கண்ணாடி மாதிரி பதிந்திருக்கிறதே. அவளும் நானும் இலக்கியம் ஏதும் கதைக்காமல், மகிழ்ந்து குலாவி இருந்ததில்தான் மகள் பிறந்தாள்.
அவளுக்கு என்ன பெயர் இட்டோம்? அதுவுமா மறந்து விட்டது! சரி. போகட்டும். எனது முதல் சிறுகதைத் தொகுதி அப்போதுதான் வெளியானது. என் பிரபல்யத்தின் வட்டம் அதிகரித்தது. விழாவில் ஒரு மூத்த எழுத்தாளர் மிகுந்த அக்கறையுடன் சொன்னார் -
“நாவல் ஒன்று எழுதுங்கள். இது நாவல்களின் யுகம். அதுவே உங்கள் பெயர் சொல்லும்.”
சிறுகதைகளே என் பலம் என்றும் தனி அடையாளம் என்றும் எண்ணியிருந்த எனக்கு, அதிலிருந்து நாவல் எழுதும் ஆசை மண்டையில் புகுந்தது. ஆனால் சிறுகதைக்கே நேரம் இல்லாத போது நாவல் எழுத எங்கிருந்து சொகுசு வரும்? கவிதை போல் எழுதியவுடன் ஃபேஸ்புக்கில் போட்டு லைக் வாங்கும் வசதி சிறுகதைக்கே கிடையாது. இதில் நாவல் எழுத ஆரம்பித்தால் மாதக்கணக்கில் காணாமல் போய் விடும் கவலை வேறு அரித்தது.
முழு நேர எழுத்தாளனாக ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நப்பாசை எழுந்தது.
அப்போதுதான் அந்தச் சாமியார் எங்கள் பாருக்கு வந்தார். பெங்களூர் புறநகரில் பெரிய ஆசிரமம் கட்டி ஆள்பவர். சிலபல வழக்குகளில் சிக்கி மீண்டு முன்பை விடப் பன்மடங்கு செல்வாக்காக ஆனவர். அதுவும் சர்வதேச அளவிலான பக்தர்கள் அதிகரித்தனர். எனது காக்டெய்ல் சிலவற்றைப் பருகிப் பார்த்து பிடித்துப் போய் சுற்றி வளைக்காது கேட்டார் -
“தம்பி, எனக்கு பினாமி பெயரில் பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு பப் இருக்கு. அங்க பார்டென்டரா சேர்ந்திடறயா? இப்ப நீ வாங்கறதை விட மூணு மடங்கு சம்பளம்.”
அந்தப் பணம் இன்றைய ஆடம்பரத்தை விட மிக விரைவில் வேலையை விட்டு முழு நேர எழுத்தாளனாகிடும் வல்லமையை வழங்கும் என்றுதான் உடனே எனக்குத் தோன்றியது.
ஒரு கணம் கூட யோசிக்காமல் சம்மதம் என்று தலையை ஆட்டினேன். நான் மறுப்பேன் என்று எதிர்பார்த்திருந்த என் பார் முதலாளிக்குக் கனத்த ஏமாற்றம். அவர் சாமியாரைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது. நான் மறுத்திருந்தால் அதைச் சாக்கிட்டு என்னைத் தக்க வைத்திருப்பார். நான் அவரது சொத்து. அதனால் அவர் என்னை இழக்க விரும்ப மாட்டார். பல்லைக் கடித்துக் கொண்டு கணக்குப் பார்த்து என்னை அனுப்பி வைத்தார்.
பெங்களூர் என்றதும் என் மனைவிக்கு ஒரு மாதிரி கிளுகிளுப்பு தொற்றிக் கொண்டது. அதன் குளிர், அதன் பச்சை என ஒரு பிரமிப்பு இருந்தது. சுஜாதா வாழ்ந்த ஊர் என நான் கண் விரியச் சொன்ன போது அவள் நடிகை சுஜாதா என்றே எண்ணியிருக்க வேண்டும். ஆர்வமாகக் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு என்னுடன் ரயில் ஏறி வந்து ஒரே வாரத்தில் இதன் நெரிசலுக்கும் தூசுக்கும் பழகிக் கொண்டாள். அப்படித்தான் தமிழின் சிறந்த இளம் எழுத்தாளன் பத்தாண்டுகள் முன் பெங்களூர் நகருக்குக் குடிபெயர்ந்தேன்.
அப்போதிருந்து இன்று வரை அதே பப்பில்தான் வேலை. ஆனால் சம்பளம் கூடியதோடு பணிச் சுமையும் அதிகரித்தது. அது தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் குடிசைத் தொழில் போல் நடந்து வந்த இடம். ஏராளமான நிறுவனங்களில் இருந்து ஆட்கள் வந்து குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் தடவிக் கொண்டும் இருந்தார்கள். மதியம், மாலை, இரவு என்றில்லாமல் காலை பத்து மணிக்குக் கூட சிலர் குடிக்க வந்தார்கள். விசாரித்த போது அவர்கள் ராத்திரி ஷிஃப்ட்டில் பணி புரிபவர்கள் என்பது தெரிந்தது.
பிறந்த நாள், திறந்த நாள், பணியில் சேர்தல், பணியிலிருந்து விலகல், பணி உயர்வு, ப்ராஜெக்ட் லாஞ்ச் என எதைச் சாக்கிட்டாவது பார்ட்டி பார்ட்டி பார்ட்டி. அது பின்னிரவு வரை நீடிக்கும். அதன் பிறகே நான் வீடு கிளம்ப முடிந்தது. (புத்தாண்டு அன்று அப்படி வீடு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் கடத்தினார்கள்.) வீடு அங்கிருந்து பன்னிரு கிலோமீட்டர்கள் தொலைவில் மடிவாளாவில் இருந்தது. காரணம் கடைகள், சந்தை, பக்கத்து வீட்டுக்கார தமிழர்கள், விளையாட வரும் பிள்ளைகள் என மனைவிக்கும் மகளுக்கும் அந்த இடம் பழகி விட்டது. அதைக் கலைக்க எனக்கு விருப்பமில்லை.
பணியும் பயணமும் சேர்ந்தால் ஒரு நாளில் பதினைந்து மணி நேரம் போனது. (போக, வர எலிவேட்டட் ஹை வே எடுக்க மாட்டேன்; கட்டுபடியாகாது.) உறக்கம், வீட்டு வேலை, குடும்பத்துக்கான நேரம் போக, மிகக் குறைவாகவே எழுத முடிந்தது. நாவல் ஊர்ந்து நகர்ந்தது. ஆனால் பணம் ஓரளவு சேரத் தொடங்கியது. சில சம்பள உயர்வுகள் வந்தன.
ஆரம்பத்தில் மொழிச் சிக்கல் இருந்தது. ஆனால் பேசிப் பேசியே மிகச் சில மாதங்களில் என் உடைந்த ஆங்கிலத்தைச் செப்பனிட்டு விட்டேன். வெள்ளைக்காரர்கள் வந்தால் கூட தயக்கமின்றி உரையாடினேன். சாமியாரே அப்படித்தான் என எண்ணிக் கொண்டேன்.
சற்று புகழடையத் தொடங்கினேன். என் பெயர் சொல்லி வரும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். நான் அதைத் தக்க வைத்துக் கொள்ள மேலும் புதியதாகப் பலவித காக்டெய்ல்களை உருவாக்கிப் பரிசோதனை செய்தேன். பெரும்பான்மை வென்றன.
இளநீரில் வைனும் சில ரகசியச் சேர்மானங்களும் கலந்து செய்வது எனது முத்திரை காக்டெய்ல் ஆனது. அமிசுரா என்று அதற்கு இலக்கியத்தரமாகப் பெயர் சூட்டினேன்.
ஒருமுறை கணக்கில் குளறுபடிகள் இருந்ததால் சாமியார் பப்பைப் மேற்பார்வையிட வந்திருந்தார். அப்போது என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினார். லௌகீகக் கணக்கீட்டில் அவர் உயரத்துக்கு நான் ஒன்றுமே இல்லை. மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
“குடிக்கப் பழகி விட்டாயா?”
“இல்லீங்க.”
“பெங்களூர் வந்துமா? எப்படிக் குளிர் தாங்குகிறாய்?”
“அதற்கு வேறு மார்க்கங்கள் வைத்திருக்கிறேன்.”
இலக்கியப் போதையை, படைப்பில் கிடந்து மனமும் உடலும் எரிவதைச் சொன்னேன். அவருக்கு என்ன புரிந்ததோ கண்ணடித்துத் தோளில் தட்டிக் கொடுத்துச் சொன்னார்:
“நீ பார்டென்டராக இருந்து கொண்டு குடிக்கவில்லை என்பது கூட வியப்பாக இல்லை. ஆனால் ஓர் எழுத்தாளனாக இருந்து கொண்டு குடிக்காமல் இருக்கிறாயே! ஆச்சரியம்.”
“காந்தி தன் போராட்ட வாழ்க்கையினூடே ஐம்பதாயிரம் பக்கங்கள் எழுதியவர். அவரை விடப் பெரிய எழுத்தாளர் உண்டா! அவர் ஆயுள் பூரா மதுவைத் தொடாமல் வாழ்ந்தவர்.”
“என் கருத்துக்களை எழுத்தாக்கம் செய்கிறாயா? பிரபல வார இதழில் தொடராக வரும்.”
“மன்னிக்கனும். உங்கள் வழி என் கொள்கைக்கு எதிரானது. அதனால் ஆர்வமில்லைங்க.”
நான் கையெடுத்துக் கும்பிட்டு அவரிடம் விடை பெற்றேன். கையுயர்த்தி ஆசீர்வதித்தார்.
உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விட்டோமோ எனப் பிற்பாடு யோசித்தேன். ஆனால் அதன் பிறகு அவர் என்னை வற்புறுத்தவில்லை. என் வேலைக்கும் உலை வைக்கவில்லை. அது அவரது குற்றச் செயல்கள் எல்லாம் தாண்டி அவர் மீது ஒரு வித மதிப்பை அளித்தது.
ஈராண்டுகள் கழித்து என் புத்திரி எல்கேஜி போன நாளில் நாவலை எழுதி முடித்தேன்.
*
மறுபடி கண் விழித்த போது அத்யந்தா அதே ஒற்றை வாய் நகையுடன் நின்றிருந்தாள். அப்போது எனக்குத் தீவிரமான உரையாடல் மேற்கொள்ளும் மனநிலை இருக்கவில்லை.
“அத்யந்தா, மூன்று வாயிருக்க நீ ஏன் எப்போதும் ஒரே வாயால் புன்னகை செய்கிறாய்?”
“அன்பரே, ஏனெனில் அது மட்டுமே பேசுவதற்கும், சிரிப்பதற்கும் பயன்படுகிற வாய்.”
“ஓ! எனில், மற்றவை?”
அத்யந்தா தன் வலக்கை ஒற்றை விரலால் இட வாயைச் சுட்டி காட்டிச் சொன்னாள்:
“இது உணவு எடுப்பதற்கான வாய்.”
“எனில், அந்தப் பக்கம் இருப்பது?”
இப்போது அத்யந்தா மறுபடி புன்னகை செய்தாள். அதில் ஒரு வித நாணம் இருந்தது.
“தயங்காமல் சொல், அத்யந்தா”
“நண்பா, அது என் யோனி. கலவிக்கான உறுப்பு. புணர்ச்சி காலத்தில் பயன்படும்.”
“என்ன!”
நான் அதிர்ந்து அவள் சொன்னதை உள்வாங்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த மூன்றாம் வாயை சற்று உற்றுப் பார்த்தேன். அதன் ஈரம் என்னைத் தொந்தரவு செய்தது.
நான் அவளிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பேச்சை மாற்ற விரும்பினேன்.
“நான் பேசும் தமிழ் உனக்கு எப்படிப் புரிகிறது? உனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”
“இல்லை. அது எங்கள் தொழில்நுட்பம்.”
“புரிகிறது. காதில் மொழிபெயர்ப்பான் கருவி. சரியா? எங்கள் ஐநா சபையில் உண்டு.”
“காதில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அது உங்கள் ஆதிகாலத்து விஞ்ஞானம்.”
“பிறகு?”
“இந்த அறையின் காற்றில் கண்ணுக்குத் தெரியாமல் மிதக்கும் நுண் உபகரணங்கள் அதைப் பார்த்துக் கொள்ளும். உன் சொற்களைக் கிரகித்து அது என்ன மொழி என்று உணர்ந்து அதை எங்கள் மொழிக்குப் பெயர்த்து அந்த ஒலியலைகளை மட்டும் எனது செவியை நோக்கி வடிகட்டி அனுப்பும். உனக்கு என் பேச்சு புரிவதும் கூட அப்படித்தான்.”
“வாவ்!”
“விருந்தினரிடம் இப்படிச் சொல்லக்கூடாதுதான். ஆனால் உண்மை அதுவே. நாங்கள் உங்களை விட அறிவில் மிக மிக முன்னேறியவர்கள். எங்கள் விஞ்ஞானம், தத்துவம், கலை, மதம், அறம் போன்றவற்றில் சிலவற்றை நீங்கள் புரிந்து கொள்வதே சிரமம்.”
“அத்யந்தா, நீ மிக அழகாக இருக்கிறாய்!”
அவள் சட்டெனத் தன் இட வாயை வலது உள்ளங்கை கொண்டு மறைத்துக் கொண்டாள்.
“உனது புகழ்ச்சிக்கு நன்றி!”
“புகழ்ச்சி இல்லை. பாராட்டு இல்லை. மிகையும் இல்லை. பரிசுத்தமான உண்மைதான்!”
“ம்ம்ம்.”
“நான் ஏன் இங்கே இருக்கிறேன் என எனக்காகச் சொல்லேன். தலை வலிக்கிறது.”
“அதற்கு எனக்கு அனுமதி இல்லை. விரைவில் அதை உனக்கு அறிவிப்பார்கள்.”
“இதுதான் நீங்கள் விருந்தினரைக் கவனிக்கும் லட்சணமா? இது வதை அல்லவா?”
நான் குரல் உயர்த்தியதும் அவள் ஒற்றைக் கண்ணைச் சுருக்கி என்னைப் பார்த்தாள். பின் எனைச் சமாதானப்படுத்தக் கெஞ்சுவது போன்ற குரலில் சொல்ல ஆரம்பித்தாள்:
“சில காரணங்களால் உங்கள் பூமி விரைவில் அழிவுக்குள்ளாகப் போகிறது. அதனால் தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் இங்கே கொண்டு வந்திருக்கிறோம். அதாவது ஒவ்வொரு துறையிலும் உங்கள் பூமியில் அதிசிறந்த திறமைசாலிகளாக இருப்பவர்களை மட்டும்.”
“ஓ!”
“இனி மேல் நீங்கள் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். உதாரணமாக இசைத் துறை சார்ந்த ஒரு வித்தகர் இங்கே வரவழைக்கப்பட்டிருந்தால் அவர் அதை மட்டுமே தன் வாழ்நாள் எல்லாம் செய்ய வேண்டும். ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்த வேலையும் கவலையும் இருக்கலாகாது. வேளா வேளைக்கு விதவிதமான உணவும் மதுவும் கலவியும் இன்ன பிற பொழுதுபோக்குகளும் கிடைக்கும். உயர் மருத்துவத்தால் உடல் நலம் பேணப்பட்டு குறைந்தது ஆயிரம் ஆண்டு ஆயுள் எல்லோருக்கும் உறுதி செய்யப்படும். முழு நேரமும் இலக்கில் மட்டுமே கவனம்!”
“…”
“அப்படித்தான் நீங்களும் உமது துறையின் விற்பன்னராகத் தேர்வாகி இங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறீர்கள். இதுதான் விஷயம். இனி நீர் வதையின்றி இருக்கலாம் அல்லவா?”
“பிரமாதம். நான் ஆண்டுக்கணக்கில் போராடியது இப்படியா நிறைவேற வேண்டும்! தவிர, எங்கள் பூமியில் கிடைக்காத அங்கீகாரம் எனக்கு இங்கே கிடைத்திருக்கிறது!”
என் சக எழுத்தாளர்களுக்கு இது தெரிந்தால் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என அறிய ஆவல் எழுந்தது. தரமான எழுத்து காலத்தால் அடையாளம் காணப்படும் என நான் அடிக்கடி சொல்லி வந்தது நடந்தேறி இருக்கிறது. அதுவும் அற்ப மானிடர்களால் அல்ல, மிக முன்னேறிய மாற்றுலக உயிரினங்களால். சாஹித்ய அகாதமியாவது ஒன்றாவது! இது நொபேல் பரிசைத் தாண்டிய அங்கீகாரம். என்ன ஒன்று இதெல்லாம் தெரியாமலே சக எழுத்தாளர்கள் பூமி அழிவில் செத்துத் தொலையப் போகிறார்கள்.
எனில் என் மனைவியும், மகளும், தந்தையும்தானே சாவார்கள். அது பற்றி எனக்குத் துயரமே இல்லையா? என்ன மாதிரி விசித்திர மனநிலை! குற்றவுணர்வு எழுந்தது.
அதிலிருந்து தப்பித்துத் தூங்க வேண்டும் போல் இருந்தது. தானாய்த் தூக்கம் வந்தது.
*
பிரபல வார சஞ்சிகை ஒன்றில் எழுத்தாளர்களின் பிரதானத் தொழில் பற்றி ஒரு தொடர் ஆரம்பித்தார்கள். என்னைக் கூப்பிடுவார்கள் எனக் காத்திருந்து பல வாரங்கள் கழித்து அழைத்தார்கள். “I am a bartender by profession and writer by passion” என்று பஞ்ச் டயலாக் அடித்திருந்தேன். பார்டென்டர் வேலை பற்றிப் பேசுகையில் குடிப் பழக்கம் அற்றவன் என்பதை அடிக்கோடிட்டு அதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லி முடித்திருந்தார்கள்.
பல புது வாசகர்களிடம் என்னை அது கொண்டு சேர்த்தது. வெகுஜன இதழின் வீரியம்!
சொந்தத் துயர் சொல்லுப் புலம் இளம் வாசகத் தோழிகள் கூடினார்கள். அதைப் படித்து விட்டு என் முதல் நாவலை சினிமாவாக எடுக்க ஓர் இளம் இயக்குநர் அணுகினார். சில கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் பட்ஜெட் காரணமாக அதைக் கை விடுவது என்றும், அவர் வைத்திருக்கும் ஒரு மசாலா கதைக்கு நான் திரைக்கதை எழுதுவது என்றும், அது வென்றதும் அவரது அடுத்த படமாக நாவலை எடுப்பது என்றும் முடிவானது. தினமும் அதிகாலையில் விழித்து முழுத் திரைக்கதையையும் வசனத்துடன் எழுதி அளித்தேன். தயாரிப்பாளர் கிடைத்ததும் சம்பளம் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன்.
மறுபக்கம் விரைந்து வேலையை விடுமளவு பணம் சேர்க்கும் உந்துதலும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதிகம் செலவுகள் செய்வதில்லை. பெங்களூரில் அப்படி ஒரு கிரஹஸ்தன் வாழ்வது சிரமம் என்றாலும் அப்படித்தான் வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் 2020ம் ஆண்டில் வேலையை விட்டு முழு நேர எழுத்தாளனாகி விடும் முனைப்பில் செயல்பட ஆரம்பித்தேன். வங்கிக் கணக்கில் பணம் மெல்லச் சேரத் தொடங்கியது.
பிரச்சனை செய்வாள் என அனுமானித்து நான் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் மனைவிகளுக்கேயான நுண்ணுணர்வால் கண்டுகொண்ட என் தர்மபத்தினி போர்க் கொடி தூக்க ஆரம்பித்தாள். பெண் குழந்தை வைத்துக் கொண்டு அவளுக்குக் கல்யாணம் செய்யும் முன் வேலையை விடுவது அயோக்கியத்தனமான சுயநலம் என்றாள். வேலையை விட்ட பின் எப்படிப் பொருளாதாரத்தைச் சமாளிப்போம் என்ற என் திட்டங்கள் அவளை ஈர்க்கவில்லை. பதிலாகத் தான் வேலைக்குச் செல்கிறேன் என்றாள். படிப்பை முடித்து இவ்வளவு காலமான பின் யார் வேலை தருவார்கள் எனக் கேட்டதற்கு படுத்தாவது சம்பாதிப்பேன் என்று சொல்லி என்னிடம் அறை வாங்கினாள்.
அதற்குப் பிறகு பாத்திரங்களை டம்மென்று போடுவது, சாம்பாரில் உப்புப் போடாமல் இருப்பது, ரசம் வைக்காமல் இருப்பது, நான் பாருக்கு அணிந்து போகும் சட்டைகளை துவைக்காமல் அல்லது அயர்ன் செய்யாமல் இருப்பது, தள்ளிப் படுப்பது எனத் தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் போராடினாள். நான் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்து மகள் சீக்கிரம் வயதுக்கு வந்து விடுவாள் என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.
2020 என்ற என் கனவு ஆண்டு பிறந்தது. வேலையை விடுவதாக மேலாளரிடம் சொல்லி வைத்திருந்தேன். எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த போது உலகில் கோவிட் வந்தது.
எங்கள் பப் தற்காலிகமாக மூடப்பட்டது. அதாவது ரகசியமாகச் செயல்பட்டு வந்தது.
இளம் இயக்குநரிடம் தொடர்பறுந்தது. ஊரடங்கு காலத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என விட்டு விட்டேன். பின் பிரபல நடிகையைக் கொன்டு நாங்கள் பேசிய படத்தை அவர் செய்வதாக தினத் தந்தியில் விளம்பரம் வந்தது. அதில் என் பெயரில்லை. வாழ்த்துக்கள் சொல்லி அவருக்கு வாட்ஸாப் செய்து அக்குழப்பத்தை விசாரித்தேன். திரைக்கதையை முழுக்க மாற்றி விட்டதாகவும், என் பங்களிப்பு என ஏதும் இல்லை என்றும் சொன்னார்.
என் உழைப்புக்காகச் சொற்பத் தொகை தந
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
