கன்னத்தில் பூத்த ஹைப்ரிட் செவ்வரளி – ஒரு கவிதைத் தொகுதி – சென்னை புத்தகக் காட்சி 2023

நேற்று சென்னை புத்தகக் காட்சி 2023-இல் நண்பர் கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு ‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ வெளியிடப்பட்டது. நூலில் இருந்து ஓர் அருமையான கவிதை –

நள்ளிரவில் ஃப்ரஞ்ச் ஃப்ரை தின்பவள்
————————————————-
கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும்
நள்ளிரவில் பசிக்கலாம்
பெண்களுக்கு
நள்ளிரவில் பசிக்கக் கூடாது
ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது
12.46
மொபில் செயலியில்
ஃப்ரஞ்ச் ஃப்ரை ஆர்டர் செய்கிறாள்
எப்போது வரும்
நேரத்தைப் பார்க்கிறாள்
வரைபடத்தைப் பார்க்கிறாள்
பெயரைப் பார்க்கிறாள்
ஏன் பெண்கள் டெலிவரி வேலைக்கு வருவதில்லை?
ஆனால் சிங்கப்பூரில் பயம் கிடையாது
பைக் கிளம்பி விட்டது
1:01
வாசற்கதவுக்கு நேராக
மேஜையில் இருந்த
ஒயின் பாட்டில்களை
வேகமாக அகற்றுகிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பெல் அடிக்கிறது
1:34
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பாதிக் கதவைத் திறக்கிறாள்
வாங்கிக் கொள்கிறாள்
‘ப்ரோ சாப்பாடு வந்துவிட்டது”
வீட்டுக்குள் வேறொரு திசையைப்
பார்த்துச் சொல்கிறாள்
சில்லறையை
அவசரமாக வாங்கிக் கொள்கிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
கதவை அடைக்கிறாள்
இல்லாத சகோதரனுக்கு
ஸ்தோத்ரம் சொல்லிவிட்டுத்
தின்னும்போது
ஃப்ரஞ்ச் ஃப்ரை
அவள் ஆன்மாவையும்
சேர்த்து ரட்சிக்கிறது.
(பெருந்தேவி)

இது கவிதையாக எழுதப்பட்ட சிறுகதை என்று எனக்குத் தோன்றுகிறது. நள்ளிரவில் பசியோடு உணவு ஆர்டர் செய்யும் பெண்ணின் பதட்டம் மூன்று முறை ‘நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது’ என்று திரும்பத் திரும்ப வருவதில் நுணுக்கமான சித்தரிப்பாகிறது.

தனக்குத்தானே ‘சிங்கப்பூரில் பயம் கிடையாது’ என்று சமாதானம், சிங்கப்பூரில் பெண்கள் டெலிவரிக்கு வருவதில்லை என்று ஆச்சரியம் – இப்படி நினைவோட்டம்

‘ப்ரோ சாப்பாடு வந்துவிட்டது’ என்று உள்ளே போய் வேறு திசையில் பார்த்துச் சொல்கிறாள் அந்தப் பெண் – அங்கே எந்த சகோதரனும் இல்லை என்பதில் கச்சிதமாக இந்தக் கதை – கவிதை முடிகிறது.

சிறு சந்தேகங்கள் –
————————
1) கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம் ஆனால் பெண்களுக்குப் பசிக்கக் கூடாது – பெண் கவிஞர்கள், பசித்த மானுடர் category-யில் வரமாட்டார்களா?

2)ஃப்ரஞ்ச் ஃப்ரை உப உணவு ஆச்சே. பிட்ஸா, பர்கர் அதோடு கூட கிடையாதா?

3)தனியாக நள்ளிரவில் ஒயின் தான் குடிக்க வேணுமா? அது பகல் உணவோடு அருந்தும் திரவமாச்சே?
கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு
‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’

Zero Degree Publishing ZDP
Chennai Book Fair 2023a
Stall F19

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 02:14
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.