முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – குறுநாவல் பகுதி

 

பின்னால் பலமாகக் கொட்டு சத்தம். டீச்சர் திரும்பிப் பார்த்தாள். சினிமா வண்டி நடுத் தெருவில் அடைத்தது போல் நின்றது. இனிமேல் முன்னால் வந்தால் மெழுகுவர்த்தி கம்பெனி சுவரில் தான் முட்ட வேண்டும்.

 

வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சின்னப் பையன் கையில் கலர் கலராக நோட்டீசுகளைப் பிடித்துக் கொண்டு முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கையசைத்தான்.

 

‘என்ன எளவெடுத்த படமோ.. போய்த்தான் ஒரு நோட்டீசு வாங்கிட்டு வாயேன்..’

 

பாக்கியலட்சுமி மறுபடி சத்தம் போட்டது.

 

முத்தம்மா டீச்சர் மாட்டின் கயிற்றைப் பிடித்து இழுக்க, அது சிலுப்பிக் கொண்டது.

 

‘போடி கெளவி… போய்க் காம்போசிசன் நோட்டு திருத்து..’

 

ராத்திரி உடுத்தியிருந்த சாயம் போன, கிழிந்த புடவையோடு அயலார் வீட்டு வாசலில் போய் நிற்க முத்தம்மா டீச்சருக்குக் கூச்சமாக இருந்தது

 

போகாமல் முடியாது.

 

மூன்றாம் வீட்டு வாசல். நாற்பது வருடமாக இப்படித்தான் பச்சை வர்ணம் அடித்த இரும்புக் கதவு.

 

கதவில் சாய்ந்து கொண்டுதான் ராசாத்தி வீட்டுக்காரர் ஆலங்குச்சியால் பல் விளக்குவார்.

 

நாற்பது வருஷம் முன்னால் ராசாத்தி கல்யாணம் ஆன புதிதில் அப்படி..

 

‘பரலோக சாம்ராஜ்ஜியம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.. கடைத்தேற இதுவே கடைசி தருணம்..’

 

தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் சுவிசேஷ பிரசங்கம் ஆரம்பமாகி இருக்கிறது. தெரசாள் புருஷன் மரியஜெகத்தின் குரல் ஒலிக்கிறது.

 

ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளைராஜு என்ற மாப்பிள்ளை குரலும் இதேபோல் தான் கணீரென்று. பக்கத்தில் வந்து கிசுகிசுக்கும் போது மட்டும் பிசிறடிக்கும்.

 

‘பேரு என்ன?’

 

‘முத்தம்மா.. முத்துன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க..’

 

‘நானும் கூப்பிடட்டா?’

 

‘கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்களாம்?’

 

முத்தம்மா டீச்சர் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடக்க, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள்ளிருந்து ஒரு தாட்டியான ஸ்திரி வெளியே வந்தாள்.

 

‘பாக்யலஷ்மி.. இக்கட ரா..’

 

தெலுங்கு தெரிந்த பாக்கிய லட்சுமி அவள் பக்கமாகத் திரும்பி நடக்கும்போது முத்தம்மா டீச்சரை உரசிக் கொண்டு போனது.

 

சினிமா வண்டிப் பையன் பறக்க விட்ட சினிமா நோட்டீஸ் டீச்சர் காலடியில்.

 

குனிந்து எடுத்தாள்.

 

காதல் சித்திரம்.. காதுக்கு இனிய கானங்கள் .. கேவா கலர்.. புத்தம் புதிய காப்பி…

 

‘பளய படத்துக்கு மடியைப் பிடிச்சு இளுத்து நோட்டீசு வச்சாலும் ஒரு பய வரமாட்டான்.. தெலுங்கு டப்பிங் போடச் சொல்லு.. டிக்கெட் கிளிச்சு மாளாது..’

 

சைக்கிள் ஓட்டியபடியே சொல்லிப் போகிறவன் முத்தம்மா தம்பி ஓடிப் போனபோது இருந்த வயசுக்காரன்.

 

பழைய படம்.. பழைய பாட்டு..

 

பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா ..கேட்டதும் கிடைத்திடுமோ இந்தத் தோட்டத்து ரோஜாப் பூ..

 

பாட்டொன்று …

 

முத்தம்மா டீச்சருக்கு அடி வயிற்றில் இருந்து வலி கிளம்பியது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 18, 2022 19:58
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.