எம் எஃப் உசைன், பெந்த்ரெ, அர்ப்பணா கவுர், கீவ் படேல் .. ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே

ராத்திரி வண்டி   குறுநாவல்  பகுதி  2 இ

 

ராசுப்பய ஓடினதுக்கு அப்புறம் கோயில் சுவர்லே எவனோ வடைன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தான். பக்கத்திலே பொம்பளை படம். டிராயிங் மாஸ்டர் கிட்டே படிச்ச பயதான்… பொம்பளைக்கு எப்படி புறா சாயல் வரும்?

 

இந்தா வரையறானே இந்தப் பொம்பளைக்கு … பொம்பளையா, மோகினியா… இடுப்பிலே ஏதாவது முண்டு மாதிரி சுத்தியிருந்தா நல்லா இருக்கும்… மறைச்சாத் தானே பார்க்கத் தோணும்..அது என்ன.. கதையிலே வருமே.. இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது… யட்சிக்கு ரவிக்கை போட்டா? சிவகாசி காலண்டர்லே எட்டுக்கையோட வர்ற உருவம் கூட ரவிக்கை போட்டு, மாரு எடுப்பா இருக்கும்… தையக்காரன் எப்படி தைப்பான்? எப்படிப் போட்டுக்கறது?

 

சித்திரக்காரன் படத்தைச் சுருட்டி வைத்தான். சோம்பல் முறித்தான்.

 

‘நீங்க ஊர் மாறி இறங்கிட்டீங்கன்னு நெனைக்கறேன். இங்கே பக்கத்துலே பார்க்க வேண்டிய இடம்னு ஒண்ணும் கிடையாது.’

 

‘ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் வாங்கியிருக்கேன்’

 

‘ராமேஸ்வரம் வண்டி இனிமே நாளைக்குக் காலையிலேதான் வரும்’.

 

‘அப்படியா?’

 

‘ஆமா, அதுக்கு வேறெ டிக்கட் வாங்கணும்’

 

‘சரி’

 

‘இங்கே சாயந்திரம் வரைக்கும் ஒரு வண்டி கூட வராது. சாயந்திரம் ஆறரைக்கு ராமேஸ்வரத்திலேருந்து திரும்பற வண்டி வரும். அவ்வளவு தான். இங்கே தங்கக்கூட ஓட்டல் அது இதுன்னு எதுவும் கிடையாது.’

 

‘நீங்க தண்ணி கொடுக்க மாட்டீங்களா? வாரணாசியிலே ஒரு சாமியார் தண்ணியக் குடிச்சு மூணு மாசம் விரதம் இருந்தாராம்.. எனக்கு காப்பி போதும்.. என் மூஞ்சி பிடிக்காம வாசல்லே நிக்க வச்சுப் பேசினாலும், திண்ணையிலே இருக்கச் சொல்லி காப்பி கொடுப்பாங்க..’

 

என்ன மனுசன் இவன்? கிறுக்கனா? சாமியாரா? சாமியார் ஏன் துணி இல்லாத படம் போடறான்?

 

இது ரயில்வே சொத்து. அத்துமீறி உள்ளே வந்து தங்கறது தப்புன்னு கறாராச் சொல்லிடலாமா? பாரு, பய திரும்பவும் நாக்கைத் துருத்திக்கிட்டு பரிதாபமா நிக்கறான்.. ராசு.. உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் அவ வந்தாளாடா? பின்னே அவன்? அந்த டீக்கடைக்காரன்? சாரமில்லேன்னு புதுசா பாய்லர் வாங்கி வேறே எங்கேயாவது கடை போட்டிருப்பான்…

 

பெஞ்சிலிருந்து ஒரு பெரிய ஹோல்டால் மாதிரி ஏதோ சரிந்து விழ உள்ளே நிறையப் படங்கள்.. ஒரு புத்தகம்..

 

சீவகன் புத்தகத்தைக் குனிந்து எடுத்தான்.

 

’என் சரித்திரம்’

 

சித்திரக்காரன் சந்தோஷமாகச் சொன்னான்.

 

’என்னுதுன்னா.. என்னோடது இல்ல… உ.வே.சாமிநாத அய்யரோடது..’

 

சீவகன் புத்தகத்தைப் புரட்ட, உத்தமதானபுரம், பண்டார சந்நிதிகள், ஆறுமுகத்தா பிள்ளை வரவு, இந்திர இழவூர் எடுத்த காதை என்று துண்டு துணுக்காகப் பார்வையில் தெரிந்து மறைந்தன.

 

‘இதெல்லாம் நல்ல விலைக்குப் போகுமா?’

 

சீவகன் படத்தைக் காட்டிக் கேட்டான்.

 

‘உசைன்… பெந்த்ரே.. விவியன் சுந்தரம்.. பூபேன் கக்கர்.. கீவ் பட்டேல்.. அர்ப்பணா கவுர்.. ‘

 

ஒரு எழவும் புரியலேடா.

 

‘ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே’

 

‘அது யாரு?’

 

’நான் தான்.. எனக்கு குளிக்க மட்டும் ஏதாவது இடம் கிடைக்குமா? குளிச்சுட்டுக் கிளம்பிடறேன்..’

 

‘வாங்க போகலாம்..கணபதி, புக்கிங் கிளார்க்கை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லு.. வீடு வரைக்கும் போய்ட்டு இதோ வந்துடறேன்..’

 

சீவகன் நடக்க ஆரம்பித்தான். பின்னாலேயே சித்திரக்காரனும்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 19:08
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.