இரா.முருகன் புரவி இலக்கிய இதழ் நேர்காணல் ஏப்ரல் – மே 2022 இல் இருந்து

நேர்கண்டவர் எழுத்தாளர் காளிப்ரசாத்

புரவி

மிளகு நாவலின் அடிப்படை பற்றி…

இரா.முருகன்

54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா என்ற துறைமுக நகரமே செழித்து வளர்ச்சி அடைந்தது சென்னபைரதேவி காலத்தில். ஆனால் அது விரைவில், மக்கள் வெளியேறியதால் பாழடைந்து போனது ஆச்சரியமான விஷயம். அடுத்திருந்த கெலதி பிரதேச அரசாங்கப் படைகள் கெருஸொப்பாவை அழிக்க முகாந்தரம் இல்லை. வரலாற்றுத் தரவுகள் இல்லாமல் இருந்தாலும் சென்னபைரதேவி காலத்தில் ஐரோப்பிய யாத்திரீகர்கள் கெருஸொப்பா வந்து தங்கி இருந்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். முக்கியமான தரவுகளில் அவையும் பிரதானமாக உண்டு.

புரவி

மீண்டும் ஒரு பழைய கேள்விதான்..மிளகுராணி கதை மற்றும் கதாபாத்திரங்களோடு அரசூர் வம்சத்தினரின் இளம் தலைமுறைகளை கொண்டு வந்து இணைத்தது சுவாரசியம்தான். ஆனால் குறிப்பாக  எவ்விதத்தில் அது நாவலுக்கு உதவுகிறது அல்லது  தான் உருவாக்கிய பாத்திரங்கள் மீதான பற்று ஆசிரியருக்குத் தொற்றிக் கொண்டுவிட்டதா?

இரா.முருகன்

நாவலாசிரியருக்குத் தான் உருவாக்கிய பாத்திரங்கள் மேல் எப்போதுதான் பற்று இல்லை!  மார்க்வெஸின் நூறாண்டு தனிமை நாவலில் ஒரு காட்சியில் வந்து போகிற கர்னல் ஒருவர்  மார்க்வெஸ் அடுத்து எழுதிய ’கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’ நாவலில் முக்கியப் பாத்திரமாவார். பெற்றோர்  பேச்சைக் கேட்காமல் திருவிழாவுக்குப் போன ஒரு பெண் சபிக்கப்பட்டு பாதி உடல் பாம்பாகி மார்க்வெஸின் நாவல்கள் பலவற்றிலும் வந்து  போவாள். பழகியவர்களைக் கூடுதல் வாத்சல்யத்தோடு எதிர்கொள்கிறோமே அதுபோல் அரசூர் வம்ச பாத்திரங்களில் சில மிளகிலும் வந்து போகும். ராமோஜியத்தில் தி.ஜாவின் மோகமுள் கதாபாத்திரங்கள் வந்து போவது போல் இதெல்லாம் ஒரு ரசானுபவம் தரத்தான். எழுதும் போது இயல்பாக கதை கடந்து வந்து போகிற பாத்திரங்கள் அவையெல்லாம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2022 19:35
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.