அனோஜனின் பச்சை நரம்பு
எனது டொரினா தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் "தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்" என்று எழுதியிருப்பார். அப்படியான அக்காக்களின் கதைகள் இத்தொகுப்பிலும் இரண்டு உண்டு
:)'இச்சை' கதையும் 'பச்சை நரம்பு'ம் பால்யகால அக்காக்களைப் பற்றிய கதைகளே!'பச்சை நரம்பில்' அவள் செல்லமக்கா. கதையின் முடிவில் அம்மா கழுத்துப் பச்சை நரம்பு அக்காவிடம் தெரியுமிடம் வரை சரி, அது தீபாவிடமும் தெரிவதாக முடித்திருப்பது இக்கைதையை அளவுக்கதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்துவிடுகிறது.இவரின் பெரும்பாலான கதைகள் பால்யத்தின் நினைவுச்சரட்டிலிருந்தே பின்னப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழலில் பாலியல் ரீதியான தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இவரது கதைகளில் திரும்பத் திரும்ப வருகிறார்கள். 'இச்சை' கதையில் அந்த நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கதையின் சாரம் இருக்கிறது. ஆனால் அது கதையில் தீர்க்கமாக வெளிப்படவில்லை. சிறுவயதில் நடத்தப்பட்ட பாலியல் துஷ்பரயேகம் எத்தனை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்? மாறாக இங்கே வெறும் கிளர்ச்சியாக வெளிப்பட்டு ஒதுங்கி நிற்கிறது.மன நிழலும், வலியும் அவர் முன்மொழியும் அரசியலைப் பேசும் கதைகள். இதில் மனநிழல் ஒரு முக்கியமான கதை. குற்ற உணர்ச்சியை மறைத்துத் தவித்துத் தழும்பும் இடங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன."வெளிதல்" - பரத்தையர் உலகம், தமிழில் அதிகம் புனையப்பட்ட கதைக்களம். ஜி.நாகராஜன் இதில் மாஸ்டர். இப்படியான ஒரு களத்தில், புதிதாக ஏதேனும் ஒன்று இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் பதில் ஏமாற்றமே. கதையின் முடிவு புனிதப்படுத்துமிடத்தில் மிகவும் சோகையாகிறது. வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய வெளியை ஆசிரியனே நிரப்பும் தவறு, இளம் எழுத்தாளர்கள் எல்லாருக்கும் பொதுவானது. அனோஜனுக்கும் இதில் விலக்கல்ல."நானூறு ரியால்" - கதை ஒரு குறும்படத்துக்கு இணையான வேகத்துடன் இருக்கிறது. மனிதர்களின் மீதான் நம்பிக்கையின்மையைப் பற்றி பேசுகிறது. இதில் என்னால் சில விசயங்களை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. எப்போதும் வெளி நாடுகளில் இருக்கும் காலங்களில் நம் நாட்டினர் மீது தனிப்பற்று வந்து ஒட்டிக் கொள்ளும். உனக்கு நான், எனக்கு நீ என்பது போன்ற சுயநலம் கலந்த பற்றுதான் என்றாலும். அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். சிட்னியில் இரண்டு வருடங்கள் இருந்தவன் என்ற முறையில் என்னால் இதை உறுதியாகவே சொல்ல முடியும். அப்படியிருக்க, நானூறு ரியால் என்பது வெறும் ஆறாயிரத்துச் சொச்சம் ரூபாய்களே! புனைவில் இத்தனை தர்க்கம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது.அனோஜனின் தனித்துவம் மிளிரும் கதைகளாக 'கிடாய்' கதையையும், 'வாசனை' கதையையும் சொல்வேன். இரண்டுமே அப்பா-மகள் உறவுச் சிக்கல்களை முற்றிலுமாக எதிரெதிர் துருவங்களில் இருந்து பேசும் கதைகள். வாசனை - அப்பாவின் பிம்பத்தையையும் வாசனையையும் வாழ்வில் எதிர்ப்படும் ஆண்களிடத்தே தேடும் பெண்ணொருத்தியைப் பற்றிய நுட்பமான கதை. அடங்காக் காமமும் அதன்பொருட்டு எழும் தன்னிறக்கமும் நிறையப் பெற்ற தகப்பன் ஒருவனின் நிலையை உளவியல் ரீதியாக முன்வைக்கு கதை - கிடாய்.அனோஜனிடம் அட்டகாசமான மொழி இருக்கிறது. சொல்முறையிலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது. அவருக்கான தளத்தை அவர் தேடிக் கண்டடையும் போது தமிழின் தவிர்க்கவியலாத கதை சொல்லியாக நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனோஜனுக்கு வாழ்த்துக்களும் அன்பும்
<3
Published on July 10, 2018 09:00
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 13 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

