இறுதி நெருப்பு - சிறுகதை
இறுதி நெருப்பு"தொடையிலிருந்து கையை எடு இழிமகனே, இல்லையென்றால் வோட்கா போத்தல் உன் கேவலமான தலையில் சிதறடிக்கப்படும்" என்று தியா கத்தினாள். மாறன் "கூல், மிஸ்.தியா டிஸோஸா, உனக்கு பழக்கமானது என நினைத்தேன்" என்று விலகி எதிரே அமர்ந்தான்.கண்டோலிம் கடற்கரை கடலிலிருந்து பார்க்க ஆங்காங்கே ஒளிரும் மின் விளக்குகளால் மின்மினிப்பூச்சிகள் கூட்டமாக ஒளிரும் புதரெனக் காட்சியளித்தது. அரேபியக் கடலின் அலைகள் காதலியின் கழுத்தை வருடுவதைப் போல கரையை மென்னலைகளாக வருடிச்சென்றன. கடலின் பாசி வாசனையும் குளிர்காற்றும் இரவின் வாசனையாக உருமாறிச் சுழன்றடித்தன.
பதினைந்தடி நடந்து சென்று அலையில் கால்நனைக்கும் தூரத்தில் தியாவும் மாறனும் பிங் வோட்கா போத்தல், நறுக்கிய அன்னாசித் துண்டுகள், ஆப்பிள் சாலத், ரவா மீன் கறி சகிதம் அமர்ந்திருந்தனர். மாறன் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முதுகலை மானுடவியல் படித்துவிட்டு போட்டோகிராஃபி என்று சுற்றித்திரியும் உயர்நடுத்தர வர்க்க இளைஞன். தியா டிஸோஸா கார்மெல் பெண்கள் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு வளரும் கொங்கணி எழுத்தாளராக கதைகள் எழுதிவருகிறாள். அதுபோக கண்டோலிமில் நடுத்தரவர்க்க சுற்றுலா பயணிகளுக்காக மதுவிடுதி நடத்துகிறாள்.
மூன்று நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து கேமராவுடன் கோவாவிற்கு கிளம்பிய மாறன் தியாவின் மதுவிடுதியில் மது அருந்திவிட்டு வலிய நட்புபாரட்டத் துவங்கியிருந்தான். பாரிலேயே அவளுக்கு உதவிகள் செய்துகொண்டு கடற்கரையில் அவளை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அணுக்கமாக அணுக அத்தனை முயற்சிகளையும் எடுத்தான். அவளும் அவன் செய்யும் வேடிக்கைகளை ஓரளவிற்கு அனுமதித்தாள். இன்று மூன்றாம்நாள், அவளது குடும்பம் போன்ற தனிப்பட்ட உரையாடல்களை வலிய தவிர்த்துவந்தாள். மாறனுக்கு தியா பார் வைத்திருக்கும் இளம் கொங்கணி எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஒன்றும் தெரியாது. ஆனால் மாறன் தன் வீட்டு டாய்லட்டில் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸின் நிறம் வரை அவளிடம் ஒப்பித்துவிட்டான்.
விலகி அமர்ந்த மாறனிடம் சிறிது நேரம் கழித்து ஒரு மிடறு வோட்கா அருந்திவிட்டு தியா கேட்டாள், "ஏன் கொங்கணி பெண்கள் அனைவரும் வேசிகள் என்று நினைக்கிறீர்கள்?" மாறன், "தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய், அவ்வாறில்லை" என்று தலைகுனிந்தான். "பிறகேன் தொடையில் கைவைத்தாய் மூடா? இதைப்போல உன் ஊர்ப்பெண்ணிடம் நடந்துகொள்வாயா?" என்றாள். முனகலாக "அவர்கள் உன்னைப்போல உடையணிந்துகொண்டு பார் நடத்தவில்லை" என்று முகத்தைத் திருப்பினான். தியா சற்று அழுத்தமான குரலில் "ஆமாம், வாயில் துணியைத் திணித்துக்கொண்டு இருட்டுக்குள் கால் விரிப்பவள்கள்" என்றாள். மாறன் எழுந்து மணலை உதறி "நீ கேவலமாகப் பேசுகிறாய்" என்றான். தியா அன்னாசித் துண்டை எடுத்து வாயில்போட்டுக்கொண்டு நிமிர்ந்து "உன் எண்ணங்களை விட கேவலமானதில்லை" என்றாள்.
மாறன் தரைவிரிப்பில் மணல் சிதற நடந்தான். அமர்ந்திருந்த தியா கத்தினாள், "தெருவோரப் பிச்சைக்காரியை புணரத் தேடிச் செல்லும் கேவலமான புகைப்படக்கலைஞன், உன் கேமரா நாயைக் கூட விட்டுவைக்காது". போனவேகத்தில் கோபத்தில் திரும்பி வந்து அடிக்கப்பாய்ந்தான். ஆங்காங்கே அமர்ந்திருந்த ஜோடிகள் இக்காட்சியைப் பார்த்தனர். சிரித்தபடி சியர்ஸ் சொல்லி அதிர்வின்றி வோட்காவை விழுங்கினாள். அவளின் பயமின்மை அவனுக்கு இன்னும் அவமானமாக இருந்தது. முழந்தாளிட்டு விரிப்பில் கண்ணீருடன் அமர்ந்தான். "நீர் குடித்து நிதானமாகு" என தண்ணீர்போத்தலை அவனிடம் நீட்டினாள். மடமடவென சட்டை நனைய விழுங்கிவிட்டு அமர்ந்தான். கடலலைகளின் இரைச்சல் அவர்களின் அமைதியை சமன் செய்தது.
மெல்லிய முறுவலுடன் "நீ என்னை முயற்சி செய்கிறாய் என்று முதல்நாளே தெரியும், எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஆனால் உன்னுடைய இந்த மலின எண்ணங்களைக் கிடையாது. நேற்று அந்த பிரெஞ்ச் கிழவன் வாயில் நீர் சொட்ட என்னை கவனிக்கிறான் என்றதும் நீ என்னை கேபினில் அமரச்சொல்லிவிட்டு மதுவும் உணவும் அவனுக்குப் பரிமாறினாயே, அப்போது பிடித்தது. சிறிது நேரமும் முன்பு நீயும் அந்தக் கிழவனாக மாறிவிட்டாய், அவ்வளவுதான்" என்றாள். அவன் "ஆனாலும் இந்த சப்பை மூக்கிற்கு இவ்வளவு கோபம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை." என்று சிரித்தான். "ஆனால் எங்கள் பெண்கள் வரை வசைபாடிவிட்டாய்", "அது உலக வழக்கம்தான்" என்று அவன் தோளைத் தட்டினாள். ராவா மீன் துண்டை கடித்துவிட்டு " போத்தலால் அடிக்கமாட்டாய் என்றால் ஒன்று சொல்கிறேன், இந்தத் துண்டு உன் உதட்டைச் சுவைப்பது போல இருக்கிறது" என்றான். தியா "என் உதட்டை எப்போது சுவைத்தாய்?" என இதழ் சுழித்தாள். "கற்பனையில், உதட்டை மட்டுமல்ல" என்று கண்ணடித்தான்.
"இதுவரை எத்தனை இளம்பெண்களை வீழ்த்தியிருப்பாய்?"
"அதென்ன இளம்பெண்கள்? ஏன் என்னால் பெண்மணிகளை வீழ்த்தமுடியாதா?"
"இல்லை முடியாது. பெண்மணிகளுக்கு உன் இனிய சொற்கள் தேவையில்லை. அவர்களுக்கு உன் ஜாக்கிக்குள் இருக்கும் பொருள் சரியாக வேலை செய்தால் போதும். என்னிடம் பேசுவதைப் போல் அவர்களிடம் வளவளவென பேசினால் உன் வாயை அடைக்க தமது பிரம்மாண்ட முலைகளைத் திணித்துவிடுவார்கள்"
"ச்சீ, நீ மிக மோசமாகப் பேசுகிறாய். மோசமான ஆணை விடவும்"
"உன்னிடம் மிகுந்த அளவாகப் பேசுகிறேன்" என்று கண் சிமிட்டினாள். மஞ்சள் ஒளியில் அவள் பெரிய கண்களின் நீண்ட இமைப்பீலிகள் பறக்க எழும் குருவியின் சிறகைப் போல விரிந்து விரிந்து உயர்த்தின. இத்தனை அழகான விழிகள் தன்னுடன் படித்த உமாவுக்குக் கிடையாது. தன் அம்மாவின் கண்களை அழகென நினைத்திருந்தான். அடர்புருவங்களுடன் அழகான பெரியகண்கள் அவனுக்குக் குழந்தையிலிருந்து பழக்கப்பட்ட பார்வை. ஆனால் தியாவின் விழிகள் இன்னும் அகன்றவை, ஆனால் அழகை மீறிய ஈர்ப்பு இருந்தது. அவள் குனிந்து வோட்கா ஊற்றும்போதுதான் கவனித்தான். அவளுக்குப் புருவமே இல்லை.புருவமற்ற விழிகள் தூய அழகு; கண்களுக்கு புருவமென்பது எல்லைக்கோடு. இவள் விழிகளின் அழகு எல்லைகளற்றது. நிமிர்ந்து அவனுக்கு கோப்பையை அளித்து சியர்ஸ் சொன்னாள்.
"இதே மனநிலையில் இருந்தால் அரேபிய கடல் சலித்து உள்வாங்கிக்கொள்ளும். எழுத்தாளராக ஏதாவது கதை சொல், அன்பே". "நான் எழுதிய கதை போதுமானதா மிஸ்டர் மாறன்?". "தாராளம்". விரிப்பில் இருந்த பொருட்களை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். வானத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்களுடன் முகத்தைத் திரையிட்டப் பெண்போல மேகப்படலத்தின் பின் நிலா தெரிந்தது.
"என்ன படுத்துவிட்டாய் தியா? கதை எங்கே?" "சொல்கிறேன், நீ கோவா இன்குஸிஷன் ட்ரிப்யூனல் பற்றி படித்திருப்பாய் அல்லவா? அதைப்பற்றிய கதைதான் இது, கேள்". மாறனும் அருகே கால்நீட்டிப் படுத்தான். ஈரப்பதமான குளிர்காற்று வோட்கா போதைக்கு இதமாக இருந்தது. தூரத்தில் கணவன் மனைவி சண்டை குறித்த கொங்கணி நாட்டுபுறப் பாடலை ஒரு கிழவி பாடிக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி உடலெங்கும் டாட்டூக்களும் ஜடைகளும் கொண்ட வண்ண வண்ண பூக்கள் கொண்ட உடைகளில் ஹிப்பிகள் அமர்ந்திருந்தனர். அவளது குரல் உலோகப்பானையில் கரண்டியை விட்டு ஒரே வாக்கில் சுரண்டுவதைப் போன்று ஏற்ற இறக்கங்கள் இன்றி சீராக இருந்தது. தியா கதை சொல்லத் துவங்கினாள்.
கொங்கண நிலத்தின் செழுமையில் பங்குகொள்பவள் அக்னாஷினி எனும் ஸுவாரி நதி; மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி தான் கால் பதிக்கும் இடங்களெல்லாம் பசுமையை விதைத்து அரபிக்கடலில் புதிதாய் கூடும் காதலியைப் போல ஒவ்வொரு நொடியும் முத்தமிட்டுக் கலக்கிறாள். தூயவளுக்குக் கூட உப்புமுத்தமே விருப்பமுடையதாய் உள்ளது. நீலவானத்திற்குத் தன்னைச் சூழ்ந்த பசுமையை ஆடியென எழச்செய்து பெருமிதம் கொண்டு ஓடுவாள். வானம் அவளின் பைந்நீர்மை கண்டு நாணி மேகங்களைக் கொண்டு தன்னை மறைத்துக்கொள்ளும். ஸுவாரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்த அழகிய கிராமம் இன்றைய கோட்டாலிம். பூர்வீகத்தில் இதன் பெயர் குஷஸ்தலெ; இதுவே துவாரகை என பார்வை மழுங்கிய கிழவிகள் அகன்ற அலையோடும் முகத்துவாரத்தை நோக்கி கதைகள் சொல்வதுண்டு.
1500களில் வெறும் வணிகர்களாக வந்து ஆட்சியில் அமர்ந்த பறங்கியருக்கு கொங்கண நிலத்தின் அழகு பெரும் வேட்கையை அளித்தது. ஆனால் தாங்கள் வணங்கும் சிலுவையை அறியாத நெற்றியில் திலகமிட்ட சந்தனம் தோய்த்த கொங்கண மக்கள் அழகான யுவதியின் நிர்வாண உடலை ரசிக்கும்போது விழியில் விழுந்து உறுத்தும் தூசியைப் போல எரிச்சலை உருவாக்கினர். கோவில்கள் அனைத்தும் களையப்பட்டு குலத்தின் இறைவன்களைப் புதைத்துக் கல்லறைச் சிலுவைகளென தேவாலயங்கள் எழுந்தன. அக்காலத்தில் மங்களூருக்கும் பம்பாயிக்கும் கொங்கணர்கள் தப்பியோடினர்.
கார்ட்டாலிம் மங்கேஷ் கோவில் பண்டிதரின் மகள் தேவி; பதினாறு அகவையினள். பக்கத்து ஜில்லாக்களில் அவளது பந்துமித்திரர்கள் தங்கள் வீட்டில் பூஜிக்கப்பட்ட தேவியரையும் இறைவர்களையும் வீதிகளில் போட்டு கொளுத்திவிட்டு போர்ச்சு திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றனர். உச்சரிப்பில் பிடிபடாத புதியபெயர்களைத் தரித்துக்கொண்டனர்.
ஒருநாள் மாலை கார்ட்டாலிம் வீதிகளில் குதிரையில் வந்த பறங்கியன் ஒருவன் போர்ச்சு மொழியில் உரக்க அறிவிப்புகளைக் கூறிச் சுற்றிச் சென்றான். கொங்கண தேசத்தில் கொங்கணியும் மராத்தியும் பேசக்கூடாதென்றும் அனைவரும் போர்ச்சுகீசிய மொழிகற்று பேசவேண்டுமென போர்ச்சுகீசிய அரசால் ஆணையிடப்பட்டது. அதனால் கொங்கணிகள் பேசிய போர்ச்சு ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு கொங்கணியும் உண்மையில் தனித்தனியாகத் தனக்கு வந்த போர்ச்சு சொற்களைக் காற்றிடம் பேசிக்கொண்டிருந்தான். கார்டாலிம்மில் அவ்வீரன் பேசியதை ஓரளவு போர்ச்சு தெரிந்த இளைஞர்கள் ஊராரைக் கூட்டிச் சொன்னார்கள். அவ்விளைஞர்களில் ஒருவன் பம்பாய் சென்று நூல்கற்றுத் தேர்ந்து மராத்தி, சமஸ்க்ருதம், போர்ச்சு முதலியவற்றில் பத்திகளையும் கவிவரிகளையும் எழுதுபவன் ரவி ராய்கர்.
அரசமரத்தின் அடியில் அனைவரையும் அழைத்து ரவி சொன்னான், " கிராமத்தவர்கள் அனைவரும் மேன்மை பொருந்திய கேப்டன் ரோட்ரிகஸை உடனே சென்று சந்திக்க வேண்டும், இல்லையேல் கிராமத்தார் விரும்பாத விளைவுகளைச் சந்திக்க நேரும்". மக்கள் சிரித்தார்கள்; மங்கேஷ் கோயில் பண்டிதர், "பன்றிக்கறி தின்பவனை போய் பார்ப்பதா?" என்றார். கூட்டத்தில் ஹோ எனக் கத்தினர். தோஃபிக் நரைத்த தாடியை தடவிய படி "எங்களில் ஹாரம்" என்றார். ரவி "நம் அனைவருக்கும் பறங்கியரே ஹாரம்தான்" என்று சிரித்தான். நகைப்பொலி எழ அனைவரும் நகர்ந்தனர். அப்போதுதான் கூட்டத்தில் தேவியின் பார்வையை உணர்ந்தான் ரவி.
மறுநாள் விடியலில் அக்னாஷினி கரையில் நீரெடுத்துக் கொண்டு தேவி வரும்போது எதிரே ரவியைக் கண்டாள். "ஏய், நீ பண்டிதரின் மகள்தானே" என்றான். தேவி "ஆம்" என தலையசைத்துவிட்டு விறுவிறுவென நடந்தாள். ரவி அவளை நோக்கி "உன் தந்தை என்னை நல்ல யுவன் என்று பாராட்டுவார், அழகியபெண்ணே, என்னுடைய நற்குணத்திற்குப் பரிசாக உன்னையளித்தால் போதும், பேறுபெற்றேன் என்று ஸுவாரியில் குதித்து மோட்சம் பெறுவேன்" என உரக்கக் கத்தினான். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே மனைக்கு வந்தாள். மங்கேஷ் ஆலயத்திற்கான பூக்கூடை அறையிலேயே இருந்தது.
"பாயி வந்து எடுத்துக்கொண்டு போகவில்லையா?" என்று மாமியிடம் கேட்டாள் தேவி. மாமி "தெரியவில்லை, உஷத்கால பூஜைக்குச் சென்றவன் இன்னும் வரவில்லை" என்றாள். சிறிதுநேரத்தில் தோஃபிக்கும் சாரங்கும் உடலில் கரிபடர ஓடிவந்து கூச்சலிட்டனர். "மங்கேஷ் கோவிலைத் தீவைத்து கொளுத்திவிட்டார்கள் பறங்கியர், அந்த ரோட்ரிகஸ் வேசிமகன் கோவிலையும் உள்ளிருந்த பண்டிதரையும் தன் ஆட்களை வைத்துக் கொளுத்திவிட்டான்" எனக் கத்தினர். தேவி சத்தத்தைக் கேட்டு பூக்கூடையில் தட்டிவிழுந்து ஓடிவந்தாள். "அனைவரும் இங்கிருந்து ஓடுங்கள், ரோட்ரிகஸ் படையுடன் இங்குதான் குதிரைகளில் வந்துகொண்டிருக்கிறான்" என்று கத்தினார் தோஃபிக். தேவி சோர்ந்து திண்ணையில் அமர்ந்தாள். தோஃபிக் தேவியிடம் "நீ அழுவதற்குக் கூட நேரமில்லை மகளே, மாமியை என்னோடு அனுப்பு, என் அம்மி, மனைவி உள்ளிட்டோருடன் அவர்கள் இணைந்துகொள்ளட்டும். நீ ரவியிடம் சென்று சொல்லி அவனை அழைத்துவா, பறங்கி மிருகங்களின் கண்களுக்கு நீ ஒருபோதும் இரையாகி விடக்கூடாது மகளே, ரவியை நீ முழுதாக நம்பலாம்" என்று அழுதார். மாமியின் துணிகளை பொட்டலம் கட்டி தோஃபிக், சாரங்க் குழுவிடம் மாமியை அனுப்பிவைத்தாள். ஏன் அத்தனை அவசரமென மாமியின் பார்வை மங்கிய விழிகளுக்குப் புரியவில்லை. ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த ரவியை நோக்கி ஓடிவந்தாள் தேவி.
ரவியிடம் தேவி "பாயியை, எரித்து, எரித்து, கோவில்" என்று ஓரிரு வார்த்தைகளைச் சொல்லி மயங்கிவிழுந்தாள். ஆற்றுநீரை எடுத்துவந்து அவள்மீது தெளித்து எழுப்பினான். அப்போது புகைநெடி பரவியது. தூரத்தில் வீடுகளனைத்தும் எரிந்துகொண்டிருந்தன. விழித்தவள் இமைகொட்டாமல் அக்காட்சியைக் கண்டாள். கருஞ்சுருள்களாக புகையும் ஓலங்களும் இறுதி மன்றாடல்களும் கேட்டன. பேரலையின் ஓசையென அழுகைக்குரல்கள் விண்ணை எட்டின. எழுந்த ரவியைப் பிடித்து அழுத்தினாள். "உன்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றாள். அவன் தேவியின் தெளிவைக் கண்டு பயந்தான். "மொத்த ஊரும் எரிந்துகொண்டிருக்கிறது, சுட்ட பன்றியிறைச்சியை விட மானுட இறைச்சியின் சுவையை அறியக் கிளம்பிவிட்டார்கள். அவர்களின் தெய்வம் அத்தனை கொடூரமானதா ரவி?" என்றாள். ரவி "அவர்கள் தெய்வத்தையே நிர்வாணப்படுத்திக் கல்லால் அடித்து சிலுவையில் அறைந்துதான் தெய்வமாக்கினார்கள்" என்றான். தேவி "விந்தைதான்" என்றாள்.
இருவரும் சிறிதுநேரம் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர். அமைதியாக நீரலைகளின் ஓசை மட்டும் நிறைந்திருந்தது. தேவி அமைதியாகக் கூறினாள், "சிலநாழிகைகளுக்கு முன் தலையைத் தொட்டு வாழ்த்தியவர் இந்த நொடி இல்லை, ஆமாம், அவரே உனக்கு என்னைப் பரிசளித்துள்ளார். அதற்காக ஆற்றில் விழுந்துவிடாதே, என்னை பத்திரமாகப் பார்த்துக்கொள்". அவள் கைகளைப் பிடித்து கதறியழுதான். "பண்டிதர் பிடித்துத் தரவேண்டிய கைகள் இவை, என் மாயி இறப்பிற்குப் பின் மங்கேஷ்வரனின் பிரசாதமென போஜனம் அளித்தீர்களே, திரும்பி வாருங்கள், தேவி அழுகிறாள் பண்டிதரே".
"ரோட்ரிகஸை மங்கேஷ்வரன் ஒன்றும் செய்யவில்லையில்லையா? பிறகேன் இத்தனை காலம் அவனை பூஜித்தோம்? பார் ரவி, அங்கே எரிந்துகொண்டிருப்பவர்கள் மகாபௌர்ணமியும் விருத்தோத்ஸவமும் கொண்டாடி வழிபட்டவர்கள். தனக்கு அவியாகவேண்டுமென தன்னையே எரித்துக்கொண்டானா? பாயி என் மாயியின் மீது கொண்ட பிரியத்தைவிட அதிகமாக மங்கேஷ் மீது கொண்டிருந்தார். அதற்கான அருளா இது?" என்று கதறினாள். சிறிதுநேரம் கரையில் வளர்ந்திருக்கும் புற்களை நோக்கினாள். ரவி முழுவதுமாக உடைந்திருந்தான். திடீரென தேவி எழுந்து "வா ரவி, பறங்கியர் ஊரை எவ்வாறு சீரழித்திருக்கிறார்களென்று பார்ப்போம்" என்றாள். அவளுடைய நிலையைக் கண்டு சித்தமிழந்தாளோ என எண்ணினான். "எழுந்திரு ரவி, நீ கற்றவன், தெய்வங்களின் பெயரால் நடக்கும் அநீதிகளுக்கு நீ நியாயம் கேட்க வேண்டும். இதை பாயிக்காகவோ மங்கேஷ்வரனுக்காகவோ கேட்கவில்லை. இந்நிலத்தின் பிரஜைகளுக்காக கேட்கிறேன்." "உணர்ச்சி வேகத்தில் எதுவும் செய்யமுடியாது தேவி" என்றான். "ஆம், முன்பு ஷாக்கள் வந்தபோதும் நம் மரபினர் இதையேதான் சொல்லியிருப்பார்கள். இன்று ஷா பறங்கியர் இல்லாத பகுதிகளில் ரகசியமாகத் தன்னை மன்னன் என்று சொல்லிக்கொள்கிறார். நாளை பறங்கியருக்கும் இதே நிலை வரும். ஆனால் அப்போதும் நாம்தான் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்போம். நீயும் நானும் உயிரோடு இருப்பதின் பொருள் என்ன? நாமும் அக்கூட்டத்தோடு எரிந்திருந்தால் உணர்ச்சியே எழுந்திருக்காதல்லவா?" "நீ அதிர்ச்சியில் பிதற்றுகிறாய் தேவி" "இல்லை, தெளிந்திருக்கிறேன், நீ கோழை ரவி." தலைகுனிந்தபடி ரவி எழுந்தான்.
இருவரும் எழுந்து ஊரை நோக்கி நடக்கத்தொடங்கினர். சடலங்கள், தானியங்கள், கூரைகள், ஆடைகள் என்று விதவிதமான எரிந்த புகைமணங்கள்; புகைமணத்தில் இத்தனை வேறுபாடு உண்டு என்பதை நாசிகள் உணர்ந்தன. அழுகிய இறைச்சியைச் சுட்டதைப் போல மணம் எழுந்தது; ஓலை எரிந்த மணம்; கருகிய உணவு மணம்; எல்லா மனைகளும் சிதறடிக்கப்பட்டு வானிலிருந்து தீ மழையாகப் பெய்து ஓய்ந்ததைப் போல எரிந்த பொருட்கள் மற்றும் மனிதர்கள் என கலந்து நிறைந்தனர். தேவியின் பாதத்தில் எரிந்த கட்டையொன்று தட்டுப்பட்டு நொறுநொறுவென பொடியானது; உற்றுப்பார்த்தாள்; பாதங்கள் கூச விலகிச் சரியப்போனாள். யாருடைய காலோ அது. ரவிக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தூரத்தில் ஒருவன் உடலெங்கும் கரியோடு குலுங்கி அழுதுகொண்டிருந்தான். தேவியும் ரவியும் அவனிடம் ஓடிச்சென்றனர். "சாரங்க் மாமா" என்று அழைத்தான் ரவி. ஓடிவந்து ரவியைக் கட்டித் தழுவினார். தேவியைப் பார்த்து "நல்லவேளை நீ ரவியை பார்க்கச் சென்றாய். இல்லையெனில் நீயும் இங்கே சாம்பலாகியிருப்பாய் மகளே" என்று அழுதார்.
கேப்டன் ரோட்ரிகஸ் நூறு பேர் கொண்ட குதிரை வீரர்களை அனுப்பி மங்கேஷ் கோவிலைப் பூட்டி கொளுத்திவிட்டு, வெடிப்பொதிகளை வீசித் தகர்த்துவிட்டு ஊரைநோக்கி விரைந்தனர். இங்குள்ள மக்கள் வெளியேறத் தடை போடப்பட்டு குதிரை வீரர்கள் தீப்பந்தங்களை குடியிருப்புகளில் வீசிச் சென்றனர். மேலும் பெண்கள் மீதும் கிளம்பிய மக்கள் மீதும் எண்ணெய் சீசாக்கள் வீசப்பட்டன. உயிரோடு கொளுத்திவிட்டு குதிரைகளில் விரைந்தனர். ஒருவரேனும் இதைச் சொல்ல உயிரோடு இருக்க வேண்டுமென பாதியெரிந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்து பின்கட்டில் பதுங்கினேன். கூச்சல்களும் ஓலங்களும். அவற்றைக் கேட்கும்போது நான் இறந்து போயிருக்கலாமென்று தோன்றியது. பிறகு வந்து பார்த்தேன், எரிந்த உடல்கள்; அனைவரும் எரிந்துவிட்டனர், மங்கேஷ்வரர் உட்பட.
"மாமா, ஆள்பவர்கள் பிரஜைகளைக் காக்க வேண்டும்; அழிக்கக்கூடாது. ரவி போர்ச்சுகீசிய சர்க்காருக்கு எழுதட்டும்" என்றாள் தேவி. ரவி உறைந்து நின்றான். "உன்னால் முடியும்; திருச்சபை விசாரணை நடத்துகிறார்களே நாடுமுழுக்க, செந்தூரத் திலகமிட்டதற்கெல்லாம் தண்டனை தருகிறார்களே மற்ற ஊர்களில், இங்கு தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். சாட்சியை சாரங்க் மாமா சொல்வார்" என்றாள். அவள் அத்தனை புத்திசாலியான பெண் என்பதை அத்தருணத்தில்தான் ரவி உணர்ந்தான்.
மனு மாஜிஸ்ட்ரேட் முன் விசாரிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சாரங்கின் சாட்சியை ஏற்றுக்கொண்டு கேப்டன் ரோட்ரிகஸ் உடனடியாக நகரைப் புனரமைத்துத் தரும்படியும் மாற்று மதத்தவர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளாதிருக்கும்படியும் மீண்டும் மங்கேஷ் ஆலயத்தைக் கட்டித்தர வேண்டும்மென்றும் தீர்ப்பளித்தார்.
சாத்சஷ்டியிலுள்ள மாளிகையில் இறுகிய முகத்துடன் பூட்ஸ்களை உதறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான் ரோட்ரிகஸ். உதவியாளன் "மேன்மை பொருந்திய கேப்டனுக்கு வணக்கம்" என்று மதுக்கோப்பையையும் சுட்ட பன்றி இறைச்சி மற்றும் கன்று இறைச்சியை மேசையில் வைத்து பணிந்து நின்றான். நாற்காலியில் அமர்ந்த ரோட்ரிகஸ் "டியாகோ டி அசிவெதோ ரோட்ரிகஸ் கேப்டன் ரோட்ரிகஸாக உட்கார எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று அந்த கிழட்டு மாஜிஸ்ட்ரேட்டுக்குத் தெரியுமா? அவனை குதிரையில் கட்டி இழுத்துவருவேன். அவன் உடலில் கத்தோலிக்க போர்த்துகீசிய குருதி ஓடுகிறதா? இல்லை அவள் அன்னை இந்த வெந்தய நாற்றம் வீசும் ஹிந்துஸ்தான அடிமைக்குப் பெற்றாளா? இன்குஸிஷனில் அவனை விசாரித்துச் சிலுவையில் தொங்கவிடுவேன். மனு அளித்த ரவியையும் அந்த சாட்சி சொன்ன அடிமையையும் எரிப்பேன்" என்று கத்தினான். மதுவை மிச்சமின்றி ஒரே மிடற்றில் விழுங்கிவிட்டு பொன்னிறமும் இளஞ்சிவப்பு நிறமுமான சுட்ட ரோஜா போலிருக்கும் பன்றி இறைச்சியை மென்றான். அருட்தந்தை அறையின் கதவைத் தட்டினார். ரோட்ரிகஸ் திறந்தான்; இயேசுவின் ஆசிகள் என்று நெற்றியில் சிலுவையிட்டார். "ஆமென்" என்றான். "இந்த சாலஸ்டேவில் அனைத்தும் நான்தான். சாத்தானின் ஊரையும் வழிபாட்டிடத்தையும் அழித்த செயல் இயேசுவுக்கு மிகப் பிரியமானது. நீ திருச்சபைச் சட்டங்களின் படி புனிதன். இயேசுவின் மகிமை உனக்கு எப்போதும் துணை நிற்கும். வைசிராயை சந்தித்தேன். அவர் மேலும் சாத்தான்களின் வழிபாட்டிடங்களை அழிக்க உனக்கு ஆலோசனை அளித்துள்ளார். போர்ச்சுகல் அரசு உன்னுடன் நிற்கும், வீரனே. பரலோக ராஜ்ஜியமும் உனதாகும்" என்றார். ரோட்ரிகஸ் புன்சிரிப்புடன் "உங்கள் ஆசி, இரவுணவில் துணைபுரியலாமே" என்றான். "கோவன் முழுக்க சிலுவைகளைப் பதித்திடு, மகனே! ஒருநாள் விருந்துண்போம்" என்றார்.
"ரோட்ரிகஸ் எப்படியும் நம்மைத் தேட ஆட்களை அனுப்பியிருப்பான், நான் இறந்தோம்" என்றார் சாரங்க். தேவி "நாம் சான்குலே செல்வோம், அங்கே என் மைத்துனி அன்னையுடன் சகுந்தலா இருக்கிறாள். அங்கு சென்று பண்ணை வேலை செய்யலாம்" என்றாள். ரவிக்கும் அது சரியெனத் தோன்றியது. சான்குலேவிற்கு மூவரும் நடந்தே சென்றார்கள். செல்லும் பாதையில் பெரும்பாலும் கேட்டிராத மொழியில் துதிப்பாடல்களையும் அணிகலன்கள் ஏதுமணியாத சிலைகள் முன் மண்டியிட்டு வழிபடுவதையும் பார்த்தார்கள். சான்குலேவில் சகுந்தலா மனை முற்றிலும் மாறியிருந்தது. மாவிலைத் தோரணங்களுக்கு பதிலாக சீமைத் திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. உள்ளே இயேசு ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. சகுந்தலா வித்தியாசமாகத் தயங்கி வரவேற்றாள். நீண்ட கவுன் அணிந்திருந்தாள்; காதில் முத்துகள் தவிர வேறு அணிகலன்கள் ஏதுமில்லை. தலைமுடியை குட்டையாக்கியிருந்தாள். தேவி கேட்கும் முன்பே சகுந்தலா சொல்ல ஆரம்பித்தாள். "நான் ஞானஸ்னானம் பெற்ற மரியா இப்போது. சீமாட்டி ஃபெர்டினன்டா வீட்டில் பணி செய்கிறேன். மாதம் 200 ஸெராஃபின்கள் ஊதியம் தருகிறார்கள். மாயியின் உடல்நிலை சீராகியுள்ளது. போர்ச்சு மொழி நன்றாகப் பேசுவேன். வாழ்க்கை இப்போதுதான் நன்றாகச் செல்கிறது. இயேசுவின் கருணை" என்றாள். ரவியும் சாரங்கும் அதிர்ச்சியுடன் சகுந்தலாவைப் பார்த்தபடி பலகையில் அமர்ந்திருந்தனர். இளநீரில் வெல்லம் சேர்த்த பானத்தை மூவருக்கும் பரிமாறிவிட்டு அமர்ந்தாள்.
"நீ ஒரு பிராமணப் பெண் சகுந்தலா" என்றாள் தேவி.
"அதனால் என்ன?"
"அறிவில்லாமல் பேசாதே, நீ நேரடியாக திருச்சபை சட்டத்தின்படி எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம், திலகமிடுகிறாய் என்றோ சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் சொல்கிறாய் என்றோ கைது செய்யப்படலாம்"
"நான் அவற்றை மறந்து காலமாகிவிட்டது. பார், வீடு ஒரு மேனாட்டுப் பெண்ணின் மனை போலில்லை?" என்று மரியா கேட்டாள்.
அப்போது திரையை விலக்கிவிட்டு பெட்ரோ நுழைந்தான். மூவரையும் கண்டு திகைக்க "நான் மரியாவுடன் பணியாற்றும் பெட்ரோ, மன்னிக்க" என்று போர்ச்சில் சொன்னான். ரவி "பரவாயில்லை, வாருங்கள்" என்றான். மரியா "இவர்கள் என் உறவினர்கள்" என அறிமுகம் செய்தான். "பிறகு வருகிறேன் மரியா" என்று அவசரமாக விடைபெற்றான்.
ரவி சாரங்கிடம் கண்ணைக் காட்டி "நாம் கிளம்பலாமென நினைக்கிறேன் தேவி" என்று எழுந்தான். தேவி "இருவரும் சற்று காத்திருங்கள் மரியாவிடம் பேசிவிட்டு வருகிறேன்" என்றாள்.
"சகுந்தலா, நீ உண்மையில் பைத்தியமா? பறங்கியனுடன் சிநேகிக்கிறாய்?"
"நீ அனாதையை சினேகிப்பதை விடவா? பம்பாய் சென்று படித்து வந்தவன் என்பதால்தானே ரவியுடன் இருக்கிறாய்?"
"நான் உன்னுடன் சண்டையிட வரவில்லை சகுந்தலா. அனாதையால் எனக்கு ஆபத்தில்லை. ஆனால் பறங்கியனால் பெரும் ஆபத்தை நீ சந்திக்கக் கூடும்"
"அவன் என்னை திருச்சபையில் சொல்லி விரைவில் விவாஹம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறான்"
"அவனுடைய சப்பாத்துகளை துடைக்க வேண்டுமானால் அழைத்துச் செல்வான். நம் மொழியில் சொல்லவேண்டுமென்றால் அவனைப் பொறுத்தவரை நீ சூத்திரப்பெண், ஒருபோதும் அவன் மனையாட்டி ஆகிவிடமுடியாது."
"நீ இவ்வளவு பொறாமை கொண்ட பெண் என இப்போதுதான் தெரிகிறது தேவி, வெளியே போ"
"போவதற்கு முன் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் சகுந்தலா, ஓநாய்களால் ஆடுகளை ஒருபோதும் சிநேகிக்க முடியாது. ஒருவேளை சிநேகிக்கிறதென்றால் இரைக்காக மட்டுமே இருக்க முடியும். இப்போதும் நீ என் மைத்துனிதான், பறங்கியருக்கு இரையாகிவிடாதே"
"உனக்கும்தான் இது, ரவி உன்னை பம்பாயில் வேசியாக்கி விற்கப்போகிறான், கிளம்படி"
தேவி புன்முறுவலுடன் "பறங்கியரை சிநேகித்த ஸ்திரீகள்தான் அவ்வாறு நம் கடற்கரைத் தெருக்களில் அலைகிறார்கள். நலமுடன் இரு" என்று சொல்லி உட்கட்டில் படுத்திருக்கும் சகுந்தலாவின் மாயியிடம் பாதம் தொட்டு வணங்கிக் கிளம்பினாள்.
பம்பாய் சென்றாலும் இதே பறங்கியர் கூட்டம்தான் ஆளுமென வடமராட்டியமான காந்தேஷத்தை நோக்கி தேவி, ரவி, சாரங்க் மூவரும் பயணம் மேற்கொண்டனர். காந்தேஷம் தபதி ஆறு ஓடும் வளமான வண்டல் சமவெளிகளைக் கொண்டது. ஃபாரூக்கி சுல்தான்களின் கீழ் ஆளப்படும் பிரதேசம்; தற்போது இரண்டாம் மீரான் முகமது ஷா ஆட்சி செய்கிறார். அங்கு பிழைத்து வாழ்வதற்கு அதிகபட்ச சாத்தியம் இருக்கிறது. தேவியும் ரவியும் விவாஹம் செய்துகொண்டனர். ரவி ஒரு தானிய வணிகரிடம் உதவியாளராகச் சேர்ந்தான். சாரங்க் அருகிலிருக்கு நிலத்தில் வேளாண் வேலைகள் செய்துவந்தார்.
ஒரு கேளிக்கை அரங்கில் பெட்ரோ ஒரு பறங்கிப் பெண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்ததை வெளியிலிருந்து மரியா பார்த்துவிட்டாள். உள்ளே நுழைந்து "ச்சீ, துரோகி, உன் குலப்புத்தியை காட்டி விட்டாயே, ஒழுங்காக என்னை விவாஹம் செய்து கொள்" என்று கூச்சலிட்டாள். சுற்றிலும் நின்ற போர்ச்சுகீசியர் வேடிக்கை பார்த்தனர். பெட்ரோ மரியாவின் கன்னத்தில் அறைந்து "அடிமை வேசியே, உன்னை இங்கு நுழைய யார் அனுமதி தந்தது?" என்று தலைமுடியைப் பற்றியிழுத்து வெளியேற்றினான்.
வீட்டிற்கு வந்து இயேசுவின் படத்தின் முன் கதறியழுதாள் மரியா, "உன்னை நம்பினேன் கடவுளே, கைவிட்டுவிட்டாயே".
மறுநாள் திருச்சபையிலிருந்து இருவர் வீட்டுக்கு வந்து மரியாவைக் கைது செய்தார்கள். மரியா சாம்பாயோ மாளிகைக்கு அழைத்துவரப்பட்டாள். நுழைவாயிலைப் பார்த்ததும் மரியா இதுவே தனது இறுதிநாளென அறிந்துகொண்டாள். எதிரே பெட்ரோ நின்றான். தலைமை விசாரணை அதிகாரி விசாரணையைத் துவக்கினார்.
"மரியா என்னும் கோவன் கத்தோலிக்க பெண்ணாகிய நீ மேன்மை பொருந்திய அரசர் போற்றும் இறைவனின் திருச்சட்டத்தின் கீழ் செயல்படுகிற கான்செல்ஹு ஸுப்ரிமோவுக்கு எதிராக நடந்திருக்கிறாய் என்பதை ஒத்துக்கொள்கிறாயா?"
"கனவான் அவர்களே, நான் ஒரு தவறும் செய்யாதவள். இயேசுவின் மீது ஆணை" என்று அழத்துவங்கினாள் மரியா.
"பெண்ணே கவனமாகக் கேள், நீ மரியாதைக்குரிய சீமாட்டி ஃபெர்டினன்டாவிடம் பணிபுரிபவள். ஆனால் அவரின் மாண்புக்குக் களங்கம் விளைவித்திருக்கிறாய். கத்தோலிக்கத்திற்கு எதிராக விபச்சாரம் செய்ய முயன்றிருக்கிறாய். கத்தோலிக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட யுவனான பெட்ரோவை 30 ஸெராஃபின்களுக்கு பாவம் செய்ய அழைத்திருக்கிறாய். மேலும் அவன் வருங்கால மனைவியை கனவான்களுக்கான அரங்கில் அவமானப் படுத்தியிருக்கிறாய். இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட சாட்சியங்களுடன் நீ செய்த குற்றங்களின் பட்டியல். இத்திருச்சபை உனக்கு இப்போதே உரிய தண்டனை அளிக்க உத்தரவிடலாம். எனினும் கத்தோலிக்க இறைமை பாவிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமெனும் கொள்கையை எமக்கு போதித்திருப்பதால் நீ உன் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்பாயெனில் நீ கத்தோலிக்க பெண் என்பதால் உனக்கான தண்டனையில் சில சலுகைகள் அளிக்கப்படும்."
மரியா பேசவே இயலாமல் கதறி அழுதாள், ஒருகட்டத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு "ஆம், நான் செய்த குற்றம் பெட்ரோ என்னை விவாஹம் செய்து கொள்வான் என்று நம்பி சினேகித்ததுதான், அதற்கான தண்டனையை எனக்கு அளியுங்கள் மரியாதைக்குரிய கோமானே" என்றாள்.
"இந்த திருச்சபை விசாரணை மன்றம் இதைப்போன்ற பல திசைதிருப்பும் மொழிகளைக் கேட்டிருக்கிறது. இப்போது நீ கூறிய வாக்கியத்தைத் திரும்பப் பெறாவிட்டால் பொய் சொன்ன குற்றமும் உன் குற்றப்பட்டியலில் சேரும்"
பெட்ரோவின் பச்சை நிற விழிகளைப் பார்த்துக் கொண்டு மரியா "ஆம், அத்தனை குற்றங்களையும் ஏற்கிறேன். ஆனால் மரியாவாக இல்லாமல் சகுந்தலாவாக, என் பழைய வழிபாட்டினை ஏற்றதற்கான குற்றத்தையும் இத்துடன் எழுதி அதிகபட்ச தண்டனையை அளியுங்கள். கத்தோலிக்கப் பெண்ணாக அன்றி பிராமணப் பெண்ணாக இறக்க விரும்புகிறேன்" என்று தான் அணிந்திருந்த மேனாட்டு கவுனை அவளே கழற்றினாள்.
கூடத்தின் வெளியே கட்டைகளில் எண்ணெய் ஊற்றப்பட்டு சகுந்தலாவிற்கான தீ அவளை வரவேற்பது போல நெடுங்கரங்களாகவும் செந்நாக்குகளாகவும் மஞ்சள் நாகங்களாகவும் விரிந்து எரிந்துகொண்டிருந்தது.
தியா "ஏய் மாறா, கதை முடிந்தது, உறங்கிவிட்டாயா?" என்று மாறனை உலுக்கினாள். மாறன் "இந்தக் கதையைக் கேட்டபின் உறக்கம் வருமா என்ன?" என்றான்.
"ஆமாம், உன்னுடைய இந்தக் கதைக்கு கிறிஸ்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?"
"தெரியாது, என்ன செய்வார்களோ?"
"ஏன் அவ்வாறு சொல்கிறாய்?"
"உன்னிடம்தான் முதன்முறையாக இக்கதையைச் சொல்கிறேன், மிஸ்டர். மாறன்"
"உனக்கு பொய் சொல்லவும் தெரிந்திருக்கிறது"
"நிஜமாக"
"கோவாவின் மேல் எவ்வளவு பேருக்கு ஆசை, எத்தனை கொலைகள்?"
"ஆமாம், இந்த மண் என்னைப்போல, கொஞ்சம் அசந்தால் உன்னை போன்ற எவனாவது அதன் தொடையில் கைவைப்பான்"
"தயவுசெய்து மன்னித்து விடு தியா"
"ஒழிந்து போ"
"ஏய், வெளிச்சம் வருகிறது, கடலில் சூரியனைக் காணவில்லை?"
"முட்டாளே, இது மேற்குக்கடல்"
"மீண்டும் மன்னித்துவிடு"
"ஒழுங்காக அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு
Published on May 17, 2020 09:34
No comments have been added yet.
Venba Geethayan's Blog
- Venba Geethayan's profile
- 2 followers
Venba Geethayan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
