பெரு நாவல் ‘மிளகு’ – Chenna faces a barrage of questions from the citizens of her kingdom

An excerpt from my forthcoming novel ‘MILAGU’

இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலிறுப்பேன் என்று அடுத்து சொன்னாள் மகாராணி. எதுக்கு அவர்கள் ஏதும் பேச மேடை தரணும் என்கிற மாதிரி நஞ்சுண்டய்யாவும் சந்திரபிரபு பிரதானியும் சென்னாவைப் பார்த்தார்கள்.

நல்லா நடக்கும், கவலைப்படாதீங்க என்று கண் இமை தாழ்த்தி சமிக்ஞை கொடுத்தாள் மிளகு ராணி. ஒருவர், இருவராகக் கூட்டம் சேர்ந்தது.

மனம் திறந்து பேசலாம். யாரையும் கேள்வி கேட்டதற்காகத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ போவதில்லை. விமர்சனத்தை ஐம்பத்தைந்து வருடமாக வரவேற்று மாற்றுக் கருத்துகளை மதித்துவாங்கிப் பரிசீலித்து நாடு நிர்வகிப்பவள் நான். இப்போதும் எதிர்பார்க்கிறேன்.

கேள்விகள் கேள்விகள் ஒரு பெரிய ஜனக்கூட்டம் அரசியிடம் தொடர்ந்து வினாத்தொடுத்தது. விடை கொண்டது. பேச்சைக் கேட்க இருந்தவர்களை விட கோவில் முழுக்க அடைத்துக்கொண்டு வெளியேயும் நின்றபடி கிட்டத்தட்ட எண்ணூறு பேர் சென்னபைரதேவியிடம் கேள்வி கேட்டவை இதுவரை கேட்கப்பட்டவை தான் – பதில் தேவைப்படாத, புகார் செய்யும் தொனியில் வந்தவை பெரும்பாலும்.

போர் வருதென்றால் நீங்கள் இத்தனை நாள் அது வராமல் தடுக்க என்ன செய்தீங்க? இப்போது எப்படி வந்தது?

ஏன் அரசுத் துறையில் மிளகு விற்ற வருமானத்தையும், தனியார் வர்த்தகர்கள் மிளகு விற்றதுக்குக் கணிசமான வரி கட்டி வந்த வருமானத்தையும் தொடர்ந்து கட்டடம் கட்ட பயன்படுத்தணும்?

ஐம்பத்தைந்து வருடம் ஆண்டாச்சுன்னு நீங்க பெருமையா சொல்றீங்க. எங்களுக்கும் பெருமைதான். போதுமே. நீங்க பதவி துறந்து அடுத்த தலைமுறை ஆட்சிக்கு வர வழி பண்ணலாமே?

வீட்டுக்கு ஒருத்தர் வந்தால் எங்கே பயன்படுத்துவீங்க அவங்களை?

ரெண்டாம் நிலை போர் ஆதரவுப் படை என்கிறது உண்மையா? முதல் நிலைப் படையே நம்மிடம் கிடையாதே. இவங்க எப்படி அடுத்த நிலையிலே வருவாங்க?

வீட்டுக்கு ஒருத்தரை கூப்பிட்டு ஒரு பயிற்சியும் இல்லாமல் கையிலே துப்பாக்கியைத் தூக்கிக் கொடுத்து மிர்ஜான் கோட்டையைப் பாதுகாக்க நிறுத்தி அவங்களை இறப்புக் கோட்டுக்கு அருகே கொண்டு போய் விடுவீங்க அப்படித்தானே?

நாங்கள் வராமலே ரெண்டாயிரம் பேருக்கு மேலே ரெண்டாம் நிலைப்படைக்கு தயார்ப் பணம் மாதாமாதம் வழங்கி நிறுத்தி வச்சிருக்கீங்க. அவர்களை முதல்லே கூப்பிட்டு விட்டு யுத்தத்துக்கு அனுப்புங்க. அப்புறம் வேணும் என்றால் நாங்கள் வீட்டுக்கு ஒருவரை அனுப்ப முடியுமான்னு பார்க்கறோம்.

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வந்தா கதவை அடைச்சு வச்சுட்டு வீட்டுக்குள்ளே அடிச்சுக்குங்க, தீர்த்துக்குங்க.  . எங்களை எதுக்கு யுத்தத்திலே இழுத்து விடறீங்க?

சென்னா சட்டென்று எழுந்தாள். முகம் இறுகி இருந்தது. நடக்க ஆரம்பித்தாள்.

தேசபக்தியும் அரசுமேலே நம்பிக்கையும் மதிப்பும் இல்லாத நகரம் ஜெருஸொப்பா. இது இனியும் இருக்க வேணாம்னுதான் நீங்களே இடிக்க ஏற்பாடு செய்யறீங்க. இடியுங்க.  நல்லா இருங்க. ரொம்ப நல்லா இருங்க. உங்களை தெய்வம் காப்பாற்றட்டும்.

அவள் வாயிலிருந்து இப்படி ஆயாசமும் அங்கலாய்ப்புமான வார்த்தைகள், இதுவரை வந்ததே இல்லை. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் கூட்டம் சென்னபைரதேவியை எதிர்த்துக் கோஷம் போட்டபடி கலைந்து போனது.

கோவில் மணி முழங்கியது. ராத்திரி ஆராதனை. சென்னா கண்ணீர் கன்னங்களில் பெருகி வடிய கண்மூடி கைகூப்பி சந்நிதியை நோக்கி நின்று வேண்டினாள் – எல்லோருக்கும் நல்ல புத்தி கொடுப்பா. எல்லாரும் கோபத்திலே பேசியதை மன்னிச்சுடு. எல்லோரும் நம்மவர்கள். எல்லோரும் என்னவர்கள். எல்லோரும் சந்தோஷமாக நல்வாழ்வு வாழட்டும்.

 

pic Medieval Emperor

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2021 06:23
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.