கடவுளைக் காதலிப்பது
(கோவையில் 'ஆன்மீக கவிதைகள்' பற்றி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். நேற்று ஜெ தளத்தில் வெளியான கட்டுரையை அவருக்கு அனுப்பிய பின்னரும் இக்கட்டுரை வளர்ந்தபடியே இருந்தது. இன்னும் வாசிக்க வேண்டிய பல கவிகள் உள்ளனர். இதை ஒரு தொடராக விரித்தெழுத வேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு, புனித ஜான், செங்கோட்டை ஆவுடையக்கா, துளசிதாசர், ஹபீஸ் என பலரை தொட்டு எழுத வேண்டும். பாரதியில் சென்று முடியவேண்டும். நன்றி - https://www.jeyamohan.in/159263/. சாரு தனது தளத்தில் கட்டுரைக்கான சுட்டியை அளித்திருக்கிறார். நன்றி சாரு http://charuonline.com/blog/?p=10998.
1
கவிஞர் என்பவர் உலகின் முதல் மனிதர் என்றும், நாவலாசிரியர் என்பவர் உலகின் கடைசி மனிதர் என்றும் எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் தலைகீழாகவும் பொருளற்றும் திரிந்தும் போவதை கண்ணுறுபவர். நாவலாசிரியருக்கு அல்லது பொதுவாகவே புனைவெழுத்தாளருக்கு கவிதையின் மீதிருக்கும் மையல் இங்கிருந்தே தொடங்குகிறது. தூயதும், அரியதுமான வெகுளித்தனத்தின் மீதான, மூர்க்கமான பிரேமையின் மீதான ஈடுபாடு. ஏக்கம். தொலைந்த பால்யத்தை போல மீள முடியாத ஆனால் பரவசமளிக்கும் வெளியை கவிதையே அவருக்கு அளிக்கிறது. இன்றைய என் வாசிப்பில் கவிதையை தன்னகத்தே கொண்ட சிறுகதையோ நாவலோ ஒருபோதும் சோடைபோவதில்லை என்பதை காண்கிறேன்.
'ஆன்மீக கவிதைகள்' என்பது மிகவும் பரந்த தலைப்பு. திருக்குறளும் தேவாரமும் பிரபந்தமும் செழித்த மொழி தமிழ். இந்த கட்டுரைக்கு நான் கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்துக்கொண்ட முதன்மையான அளவுகோள் ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாடு என்பதே. அதிலும் கூட, சமய எல்லைகளுக்கு அப்பால் மத்தியகாலத்து மறைஞானிகளின் கவிதைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளேன். பிற கவிதை வகைகளை அவ்வப்போது தொட்டுக்காட்டியுள்ளேன். கவிஞர்களின் ஆன்மீக வெளிப்பாடு என வரயறையை சற்று மாற்றியமைத்தால் பாரதி தொடங்கி தேவதேவன் வரை பலருடைய கவிதைகளை பேச இயலும். ஆனால் அவை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அவை எப்படி இக்கவிதைகளுடன் நீட்சிகொள்கின்றன என்பதை கவனிக்க இயலும்.
கவிதையை மொழியின் முதலும் உச்சமுமான வெளிப்பாடு என கொள்ளலாம். இதன் காரணமாகவே மிக எளிதாக நகலெடுக்கப்படத்தக்கதாகவும் உள்ளது. கவிதைகள் எழுதப்படும் அளவிற்கு வாசிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு சுவாரசியமான முரண். காலங்காலமாக கவிதையே ஆன்மீக வெளிப்பாட்டுக்கான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. ஜெயதேவரை பற்றிய ஒரு தொன்மக்கதை ஒன்றுண்டு. ராதை கண்ணனின் சென்னி மீது கால் வைப்பதாக ஒரு பகுதியை எழுத உந்துதல் பிறக்கிறது. ஆனால் எழுத தயங்குகிறார். யோசனையுடன் குளிக்க சென்றவருக்கு அவ்வரி எழுதப்பட்டிருந்ததை காண வியப்பாக இருக்கிறது. அது கண்ணனே எழுதியது. சாட்சியாக பத்மாவதி இருந்தார். ஒரு வகையில் கவியின் கற்பனைக்கு தடை ஏதுமில்லை, அது கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது. அதனளவில் அது புனிதமானது என்பதை இக்கதை உணர்த்துவதாக வாசிக்க இடமுண்டு. கீத கோவிந்தம் மொழியாக்கத்துக்கு சுதீப்தா கவிராஜா எழுதிய முன்னுரையில் சாமான்ய புழங்கு மொழியால் வெளிப்படுத்த இயலாத உணர்வு நிலையை பக்தர் அடையுமாபோது, அந்த உணர்வை வெளிப்படுத்த கவிதையே உகந்ததாக ஆகிறது என சுட்டுகிறார். உயர் கவித்துவமே கடவுளுக்கு அருகே அழைத்துச்செல்லும் ஊடகம். பண்டைய கவிதைகள் சந்தத்தில் இயங்குபவை. பாடல்களாக இசைக்கப்படுகின்றன. கீத கோவிந்தம் நிகழ்த்து கலையாக இசையுடன் நாட்டியமும் சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது.
ஜெயதேவரின் அஷ்டபதியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் உகந்த உணர்வு நிலைக்கு ஏற்ப ராகங்கள் வகுக்கப்படுகின்றன. மொழியால் கடத்த முடியாததை இசை கொண்டு நிரப்ப முயல்கிறது. கவிதை கீதமாவதன் வழியாக சொல்லின்மையை எட்ட முயல்கிறது.
சங்கரரின் சவுந்தர்ய லகரியைப் பற்றி நடராஜ குரு குறிப்பிடும்போது அது எப்படி படிமம் மற்றும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வு வழியாக தொடர்புறுத்தும் ஆதி மொழியை (proto language) கையாள்கிறது என விளக்குகிறார். ஆதி மொழி தான் இப்போது வரை நீடிக்கும் ஆகப்பழமையான மொழி அமைப்பு, மீமொழி (meta language) அறிவார்ந்த உரையாடலுக்கு உரியது. ஆதிமொழி வடிவவியல் பிரக்ஞை (geometric orientation) கொண்டது. கவிதை, இசை மற்றும் குறியீடுகளை பயன்படுத்தும் கலை வடிவங்களுக்கான தொல்கால விதைநிலம் அதுதான். ஆதி மொழி எழுதப்பட்டதிலிருந்து எழுதப்பட முடியாததற்கு நம்மை இட்டுச்செல்லும் வாகனம் என சொல்லலாம். சவுந்தர்ய லகரிக்கு பொருந்துவது பொதுவாக ஆன்மீக கவிதைகளுக்கும், ஒரு எல்லையில் மொத்த கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கவிதை, மொழியில் உள்ள சொல்லுக்கும் பொருளுக்கான பிணைப்பை தளர்த்தி பொருள்கோடல் சாத்தியங்களை பெருக்குகிறது. கவிதைகளில் வரும் மலையும் நிலவும் கடலும் வெறும் மலையும் நிலவும் கடலும் அல்ல. கவிதையின் கள்ளமின்மை அல்லது குழந்தைமை என நாம் சுட்டுவது இந்த ஆதி மொழியைத்தான். கவிதை சுடு சரமென நம்மை கிழித்து உட்புகுவதற்கு என தனிப்பாதையை தேர்ந்துகொள்ளும். நவீன கவிகளில் கூட பெரும்பாலான கவிகள் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகத்தை தொட்டு மீள்கிறார்கள். ஞானிகள் படிபடியாக ஏறிச்சென்று காண்பதை கவிகள் ஒரு கணத்தில் எல்லைகளை கடந்து காணும் பேறு பெற்றவர்கள். பண்டைய காலத்தில் ஊழ்கத்தில் அமர்ந்து ஞானத்தில் திளைத்த ரிஷிகளையும் கவி என்றழைத்தார்கள். ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதத்தை கவிதையாகவே வாசிக்க முடியும்.
சிருஷ்டி கீதம்
அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை
ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை
இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது
அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!
ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன
ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?
அதன் மூலக்காரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?
அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!
'முதல் மனிதனின்' அறிதலின் வெகுளித்தனமும் வியப்புமே கவிதையாக வெளிப்படுகிறது. கபீரின் இவ்வரிகள் சிருஷ்டி கீதத்தின் அதே உணர்வின் நீட்சி என சொல்லலாம். 'சகோதரனே சொல்/ ஆகாயத்தை விரிகுடையெனச்/ செங்குத்தாக நிறுத்தி வைத்தது யார்? நீலப்பெருந்திரையில் / விண்மீன்களை மினுங்கவைத்தவர் யார்? அதைத் தீட்டிய/ அபாரமான தூரிகையாளன் எவன்?' இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகை முதன்முறையாக புலன் விழித்து நோக்கும்போது ஏற்படும் வியப்பும் திடுக்கிடலுமே கவிதையை பிறப்பிக்கிறது. அவன் காணும் ஒவ்வொன்றும் அவனுக்கு வியப்பை அளிக்கிறது.
புலர் பொழுது உலக இயக்கத்தை தொடங்கி வைக்கும் பெருவியப்பு உஷை சூக்தமாகிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் அயராமல் வந்து கொண்டிருக்கிறார்கள். சோர்ந்து அமரவோ சோம்பல் கொள்ளவோ ஏதுமில்லை. இரவையும் பகலையும் பற்றிய கவிதை மரணத்தை பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும், காலாதீதத்தை பற்றியும் பேசும் புள்ளியில் சட்டென வேறொரு தளத்திற்குச் செல்கிறது. பகலும் இரவையும் போல் பிறப்பும் மரணமும் இயல்பாகிறது. மரணத்தின் துக்கமும் அச்சமும் விலகுகிறது.
உஷை
(ரிக் வேதம் முதல் மண்டலம், 113வது சூக்தம்)
வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி
பிறந்தது எங்கும் பரவும் பிரகாசம்
செங்கதிர்த் தேவன் எழ
வெளிச்சென்ற ராத்ரி
உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.
தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்
கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்
ஒன்றான இவ்வுறவுகள்
நிறம் மாறி
ஒருவரையொருவர் தொடர்கின்றனர்
அழிவற்று.
முடிவற்றது
ஒன்றேயானது
சகோதரிகளின் பாதை
மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்
இந்த தேவியர்
இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட
பகலும் இரவும்
முறைதவறுவதில்லை
மோதிக் கொள்வதுமில்லை.
இன்னொளிசேர் சோதித் தலைவியைக்
காண்கின்றன எம் கண்கள்
கதவுகளைத் திறந்தாள்
பொலிவுடன்
உலகை சிலிர்க்கச் செய்து
செல்வங்களைக் காட்டினாள்
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை
சுகவாழ்விற்கென
வேள்விக்கென
பொருள் தேடலுக்கென
எழுந்தோடச் செய்தாள்
சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
யுவதி வெண்துகிலினள் வான்மகள்
மண்மீது காணும் செல்வங்களின் தலைவி
இதோ வருகிறாள் உஷை
மங்கல நல்லொளியினளே
இந்தக் காலையில்
எமக்காகத் துலங்குக.
கடந்து சென்ற காலைகளின் வழிச்செல்பவள்
இனிவரும் முடிவற்ற காலைகளின் முதல்வி
உஷை
உயிருள்ளவை அனைத்தையும்
உந்திச் செலுத்துகிறாள்
மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.
உஷையே
நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்
கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்
வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்
தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.
எத்தனை காலமாக
எழுகிறார்கள் உஷைகள்?
நமக்கு இன்னொளி தர
இன்னும் எத்தனை காலம்
எழுவார்கள்?
கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி
வரப்போகும் வைகறைகளுடன்
மகிழ்ச்சியாகச் செல்கிறாள்
உஷை.
போய்விட்டனர்
முன்னாட்களில்
உஷையின் உதயம் கண்ட மானிடர்
நாம்
இன்று வாழும் நாம்
அவளது நல்லொளி காண்கிறோம்
வரும் நாட்களில் அவளைக் காண
நமது பின்னோர் வருகிறார்கள்.
எதிர்ப்போரைத் துரத்துபவள்
பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்
பிரபஞ்சலயத்தைக் காப்பவள்
உவகையூட்டுபவள்
இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்
சுமங்கலி
தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்
பெரும்புகழ் கொண்ட உஷை
இன்று எமக்காக உதித்திடுக.
உஷை
முற்காலங்களில்
இடையறாது உதித்தாள்
செல்வம்சேர் தேவி
இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்
வரும் நாட்களிலும் உதிப்பாள்
தன்னாற்றலால் இயங்குகிறாள்
அந்த அமுதப் பெண்
அழிவற்று.
வான் விளிம்புகளைத் தன்னொளியால்
சுடர்வித்தாள்
தேவி தன் கருந்திரையை
வீசிஎறிந்து விட்டாள்
உஷையின்
செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு
உலகம் விழித்தெழுகிறது.
உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி
உணர்வளித்து
அற்புத எழிலொளி பரப்பி
கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக
வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக
இன்று உஷை எழுந்தாள்.
எழுவீர்
வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்
சென்றது இருள்
தோன்றுகிறது ஒளி
கதிரவனுக்காக
வழிதிறந்தாள் உஷை
நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.
(தமிழாக்கம்- ஜடாயு)
2
கவிதை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது எனும் கேள்விக்கு எனக்கு அரவிந்தரின் கோட்பாடு நெருக்கமாக உள்ளது. குறிப்பாக ஆன்மீக கவிதைகளுக்கு பொருத்திக்கொள்ள முடிகிறது. கவிதையைப் பற்றிய அறுதியான கோட்பாடாக இதை காண வேண்டியதில்லை. ஆன்மீக ரீதியில் கவிதையை புரிந்துகொள்ள ஒரு வழிமுறை எனும் எல்லையுடன் இந்த புள்ளிகளை அணுக வேண்டும். மனித ஆன்மா பிரபஞ்ச பேரிருப்புடன் கொள்ளும் தொடர்பின் அடையாளமாக கவிதையை காண்கிறார் அரவிந்தர். சாமானிய மனம் (ordinary mind), உயர் மனம் (higher mind), ஒளிர் மனம் (illumined mind), உள்ளுணர்வு மனம் (intuitive mind) மற்றும் மேலான மனம் (over mind) என ஐந்து பரிணாம படிநிலைகளை குறிப்பிடுகிறார். இதை தவிர்த்து பிரபஞ்ச மனம் (universal mind), அதி பிரக்ஞை இருப்பும் (super conscient being) உள்ளது. ஒவ்வொரு அடுக்கிற்கும் அதற்குகந்த படைப்பூக்கம் சொல்லப்படுகிறது. சாமானிய மனதில் படைப்பூக்கத்திற்கு பெரிதாக வேலையில்லை. ஒளி ஊடுருவ இயலாத அளவிற்கு இறுக்கமும் கணதியும் கொண்டது. உயர் மனம் சற்றே தெளிந்தது. தத்துவவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த நிலையிலிருந்து செயல்படுவார்கள். மீ மொழியின் தளம் என சொல்லலாம். ஒளி சில புள்ளிகளில் இருந்து ஊடுருவும். அசல் சிந்தனைகள் தோன்றும். எனினும் தர்க்க சட்டகத்தை கடக்க இயலாது. இந்த நிலையிலிருந்து அமைதி கைகூடி வரும்போது இயல்பாக ஒளிர் மன அடுக்கை சென்றடையும். பெரும் முயற்சிகள் ஏதுமின்றியே சத்தியத்தையும் ஆனந்தத்தையும் உணர இயலும். சிறு புள்ளிகளில் ஊடுருவிய ஒளி இப்போது வெள்ளமாக பொழியும். கவிதைகளுக்கான வெளி இதுவே. மனம் இந்நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்று கவிதை சட்டென ஊறி பிறப்பெடுப்பது என்கிறார் அரவிந்தர். கவிதையே மனதின் உயர் அடுக்குகளை பற்றி சொல்வதற்கு உகந்த ஊடகம் எனவும் அவர் சொல்கிறார். சொற்களின் பொருளை கடந்து அதன் ஒலிக்குறிப்பு மற்றும் ஒலிச் சேர்க்கையே அதன் அதிர்வுகளை கடத்த வல்லது. சொற்கள் அதிர்வுகள் உடுத்தும் ஆடைகள் மட்டுமே என்பது அவர் கருத்து. ஆதிமொழியின் வல்லமை ஒலி அதிர்வுகளின் ஊடாக தொடர்புறுத்தும் எனும் நடராஜ குருவின் கருத்தையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த தளத்தில் படைப்பூக்கத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஒரே ஆக்கத்தில் சில வரிகளில் தாக்கம் தென்பட்டு பிற இடங்களில் சாதாரணமாக கடந்து செல்லும். இந்நிலையில் தொடர்பற்ற சீரற்ற படிமங்களையும் அறிதல்களையும் காண முடியும். இதற்கடுத்த நிலையில் எல்லாம் தெளிவடைகிறது. சொற்கள் தனது அலங்காரங்களை துறக்கிறது. உள்ளுனர்வு மனம் எனும் தளம் சத்தியத்தைப்பற்றிய நினைவு களன் என்கிறார். ஒளி வெளியிலிருந்து வருவதில்லை. இயல்பாக எப்போதும் யாவற்றையும் ஒளி சூழ்ந்திருக்கிறது. தர்க்கத்தின் பிடியிலிருந்த தன்னை முழுமையாக விடுவித்து கொண்டது. மேலான மனம் மனித பிரக்ஞையின் உச்சம். அது பிரபஞ்சமளாவிய பிரக்ஞை ஆனால் தனியிருப்பும் தொடர்கிறது. இதுவே கடவுளர்களின் வெளி. உலகின் மதங்கள் அனைத்தும் இங்கே உதித்தவை. கால வெளி எல்லைகளை கடந்த நிலை. கவிதை மந்திரமாவது இத்தளத்தில்தான். துண்டுபடாத தொடர் ஒளி சூழ்ந்து இருக்கும்.
அமைதியும் நிலைபேறும் கொண்ட மனதில் காற்றில்லா வானத்தை பறந்து கடக்கும் பறவைகளை போல எண்ணங்கள் சுவடின்றி கடந்து மறையும். அத்தகைய மனதில் பிரபஞ்ச மனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். புனித நூல்களில் காலம் கடந்து நிற்பவை ஆகச்சிறந்த கவிதை வரிகள். அவை மந்திரத்தன்மையை எழுப்புபவை. உதாரணமாக 'வானத்து பறவைகளை பாருங்கள், அவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை' எனும் விவிலிய வசனம் ஒரு கவித்துவ வாக்கு (poetic utterance). ஹெரால்ட் ப்ளூம் விவிலியத்தை புனைவு நூலாக வாசிக்க இயலும் என சொஆகல்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாட்டை. ஜெ எனும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடும் எனும் ஊகமும் அவருக்கு உண்டு. இந்த வரிசையில் மத நூல்களையும் புனித நூல்களையும் கவிதைகளாகவும் வாசிக்க இடமுண்டு என்பதாலேயே இந்த கட்டுரையை ரிக்வேத பாடலோடு தொடங்கினேன்.
முண்டக உபநிஷத்தின் தொடக்கத்தில் வரும்
'இரு பறவைகள்
இணைபிரியாத் தோழர்கள்
ஒரே மரத்தில்.
ஒன்று கனிகளை உண்கிறது
மற்றொன்றோ
உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.'
இதுவும் ஒரு கவித்துவ வாக்குதான். கவி ஊடகம் கவிதை அவன் வழியாக வெளிப்படுகிறது என்பது ஒரு பார்வை. ஆனால் இதன் அடுத்த கட்டமாக கவிதையையும் கூட ஒரு ஊடகமாக காண முடியும். காலாதீத சத்தியம் சொற்களாக திரண்டு கவிஞன் வழியாக கவிதையாக கனிந்து வெளிப்படுகிறது என்றும் கொள்ளலாம்.
இந்திய மரபில் தியான சுலோகங்கள் என ஒவ்வொரு இறைவனுக்கும் அவரை விவரிக்கும் துதிகள் உண்டு. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'க்ஷிரோ தன்வத்..' என தொடங்கும் துதி உண்மையில் திருமால் பாற்கடலில் அணிகளுடன் படுத்திருக்கும் காட்சியை விவரிப்பது. அவருடைய முகம், அகம், அமர்ந்திருக்கும் முறை, அணிந்திருக்கும் ஆடை அணிகள் என துல்லியமான விவரனைகள். இவை புலன் நிகர் அனுபவத்தை அளிப்பவை. தியானத்திற்குரியவை. வேதாந்தம் நிதித்யாசன மந்திரங்கள் என சிலவற்றை வரையறை செய்கிறது. சங்கரரின் நிர்வாண ஷடகம் இத்தகையது. அடிப்படையில் தியான சுலோகங்களும் நிதித்யாசன மந்திரங்களும் கவிதைகளே. நிதித்யாசனத்திற்கு உரியவை கருத்தை அடிப்படையாக கொண்டவை எனும் போது படிமத்தை அல்லது காட்சி அனுபவத்தை அடிப்படையாக கொண்ட தியான சுலோகங்கள் நவீன கவிதைக்கு சற்று கூடுதல் நெருக்கமானவை என சொல்லலாம்.
ஆழியின் துளி
துளிகள் கலந்து ஆழி ஆவதை
அறிவர் எல்லாரும்
ஆழி உலர்ந்து
ஒரு துளியாவதை அறிபவனோ
ஆயிரத்தில் ஒருவன்.
கபீரின் இவ்வரிகள் தியான சுலோகமாக கருதத்தக்கது. தேவதேவன், தேவதச்சன் ஆகியோரின் பல கவிதைகளை தியானத்திற்குரியதாக கருத இயலும். கபீரின் 'பிரசவம்' எனும் கவிதையை நவீன கவிதை என்றே சொல்லிவிட முடியும். புறத்தை அவதானித்து அகவயப்படுத்திக்கொள்கிறது.
வானம்பார்த்து மல்லாந்து
அலையில் மிதக்கும் சிப்பி
தவிப்புடன் காத்திருக்கிறது
சுவாதி மழைத்துளிக்காக
வெறும் வயிற்றில் துளிநீர் விழுந்ததுமே
உடல் புரண்டு முத்தை சூல் கொள்ளப் பயணிக்கிறது
கடல் ஆழத்தை நோக்கி
ரூமியின் ஒரு கவிதையில் உள்ள வரிகள் தேவதச்சனின் ஓரு கவிதையில் ஷூ லேஸ் கட்டும் குண்டு பெண்மணியை நினைவுப்படுத்தியது. 'அவ்வுலகும்/ இவ்வுலகும்/ தொட்டு உறவாடும்/ வாயிலின் வழியாக/ மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்./ வட்டவடிவான அவ்வாயிலோ/ திறந்து கிடக்கிறது இப்போது/ துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.'
உறக்கச்சடவு என்பது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையில் நொறுங்கிக்கொண்டிருக்கும் சிறிய மேடை. இணை பிரபஞ்சங்களுக்கு இடையிலான வாயில் உறைவதற்கு முன்னாலான நீர்மை நிலை.
கவிதையைப் பற்றி சொல்வதற்கு கருத்துக்களை சார்ந்திருப்பதை விட கவிதைகளே உகந்தது. ஒரு கவிதையே மற்றொரு கவிதைக்கான திசை சுட்டி. ஆகவே கவிதை குறித்தான கட்டுரையில் அதிக கவிதைகளை மேற்கோள்காட்டுவது இயல்பானது.ன்
3
கவிதையின் பேசுபொருள் மற்றும் தன்மை சார்ந்து தோராயமாக ஆன்மீக கவிதைகளை மறைஞான கவிதை, மெய்யியல் கவிதை, விழிப்புணர்வு நிலை கவிதை (mindfulness) ஐக்கிய வேட்கை கவிதை மற்றும் கண்டன கவிதை என ஐந்தாக வகுக்கலாம். மெய்யியல் கவிதைக்கு சிறந்த உதாரணம் 'இது' எனும் தாவோ கவிதை. கிட்டத்தட்ட தத்துவ கோட்பாடு இங்கு கவிதையாக உருகொள்கிறது. சாமான்ய மொழியில் செல்லும் போது 'இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை
இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை'
எனும் பயன்பாடு வழியாக கவித்துவமான ஆதிமொழிக்குள் வழுக்கி செல்கிறது. இதுவே இதை கவிதையாக்குகிறது.
இது
பார்த்தாலும் இதைப் பார்க்க முடியாது
இது உருவத்திற்கும் சிறியது:
கவனித்தாலும் இதைக் கேட்க முடியாது;
இது ஒலியிலும் மெல்லியது;
ஊகிக்கலாம் ஆனால் தொட்டுவிட முடியாது;
இது, உணர்வுகளுக்கு அடியில் உள்ளது;
மேலான பொருட்கள்
இவைகள்தான் என்று வரையறை
செய்வதற்குள் தப்பிவிடுகின்றன.
மேலும் இவை கலந்து ஒற்றைப்புதிராய் உள்ளது
இது எழும்போது அங்கே ஒளியில்லை
இது விழும்போது அங்கே இருளில்லை
இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட
ஒரு தொடர்ச்சியான மெல்லிழை
வெளிப்பட முடியாத உள்வலை
வடிவமில்லாதது இதன் வடிவம்
ஒன்றுமில்லாதது இதன் உருவம்
மௌனம் இதன் பெயர்;
இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை
இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை
இதற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை
போனதைப் புரிந்துகொள்ள இருப்பதைக் கவனியுங்கள்
ஆக உங்களுக்கு இயற்கை வழியின்
தொடரைப் பிடிக்க முடியும்
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்
என்று சற்று உணர்ந்து பாருங்கள்
இதுவே இதன் ஞானரசம்
விழிப்புணர்வு நிலை கவிதைக்கு சிறந்த உதாரணம் ஜென் மற்றும் வேதாந்த கவிதைகள். போகன் மொழியாக்கம் செய்துள்ள சீன கவிதைகள் நல்ல உதாரணம்.
லஸ்டர் கணவாயில் இரவு மழை..
பள்ளத்தாக்கு நதியின்வெற்றிடத் தெளிவைத் தகர்த்துக்கொண்டுமழை உள்ளே வருகிறது.கூதல் காற்று கிசுகிசுப்புகள் இரவின் பின்பகுதியில் தொடக்கம்..பத்தாயிரம் முத்துகள் ஒரே தட்டில் விழுந்து ஒலி எழுப்புகின்றனஒவ்வொன்றின் ஒலியும் என் எலும்புகளைத் துளைக்கும் துல்லியம். நான் கனவில் என் தலையைச் சொரிகிறேன்எழுந்து விடியும்வரை கூர்ந்து கேட்கிறேன்.ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை,மறைவதை..
என் வாழ்க்கை முழுவதும் நான் மழையைக் கேட்டிருக்கிறேன்என் முடி இப்போது வெளுத்திருக்கிறது.இருந்தாலும் வசந்த கால நதி மீது பெய்யும்இரவு மழையை நான் அறிந்திருக்கவில்லை.
இக்கவிதையில் எப்போதும் இருப்பவற்றை விழிப்படைந்த மனம் நோக்கும்போது ஏற்படும் திடுக்கிடலை பதிவு செய்கிறது. ஒருவகையில் கவிதை கதை இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவை கூட இத்தகைய அகம் விழிக்கும் தருணங்களால் ஆனதே. ஆர்கிமெடீஸ் தத்துவம், கனவில் தோன்றிய பென்சீன் வடிவம், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் பழம் என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சட்டென வேறொரு நிதர்சனத்தில் விழித்தெழுவது. பொருள்முதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் புறவயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தருணங்களாக காண்பதற்கு மாற்றாக கருத்துமுதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் இத்தகைய விழிப்புணர்வின் தருணங்களாக மட்டும் காண முடியும். ஆதி மொழி என்பதே பிரபஞ்சம் தங்களுக்குள்ளாக உரையாடிக்கொண்டிருக்கும் மொழி. விழித்தெழும் மனம் அந்த மொழியையும் உரையாடலையும் கவனிக்கத்தொடங்குகிறது. உரையாடத் தொடங்குகிறது. தானறிந்த மொழியில் அதை பிரதிசெய்ய மானுட மனம் யத்தனிக்கிறது. கவி காளிதாசனின் நாக்கில் அன்னை எழுதியது முதல் மூங்கையான் கவிஞனானான். அன்னையென்பது சக்தி, பிரகிருதி, கட்டற்ற இயற்கையின் வடிவம். சாமான்ய மொழியில் உழன்றவனை ஆதி மொழி நோக்கி விழிக்க செய்தாள் அவள். சூரிய ஒளியில் ஒளிரும் ஒற்றை புழு நீடுழி வாழ்க எனும் செய்தியை எப்படி ஜெயமோகனுக்கு சொல்லியிருக்க இயலும்? கவி ஆதிமொழி வழியாக சொல்லின்மையின் அனுபவத்தை கடத்த முயல்கிறார்.
போகன் மொழியாக்கம் செய்த மற்றோரு கவிதை அன்றாடத்தின் உறைகணம் அளிக்கும் திறப்பைச் சொல்கிறது.
ஏரியைக் கடந்து செல்லுதல்.
ஒரு மீனவன் தனது படகை வெகுதூரம்ஏரியினுள் ஓட்டிச் செல்கிறான்.எனது முதிய கண்கள் அவன் வழியைக் கடைசிவரை பின் தொடர்கின்றன.காட்சிக்குள் துல்லியமாக அவன் வருவதும் போவதுமான நெசவை..
பிறகு இது வினோதமடைகிறதுசட்டென்று அவன் நாணலின் மீது சம நிலையுடன் நிற்கும்ஒரு நீர்ப்பறவை ஆகிவிட்டான்
நித்ய சைதன்ய யதியின் ஒரு கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை
நீ ஒரு மலர்
வண்டெதுவும் முத்தமிடாத மலர்
நீ ஒரு பாடல்
மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்
என் அகத்தை தூய்மையாக்கும்
இறைகூறும் இரகசியம் நீ
பேரின்பப் பரவசம் நல்கும்
இன்னிசைப் பாடல் நீ
நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை
காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை
உன்னை என் கனவுகளில் காண்பதும்
நிலைபேற்றின் இன்னிசையை என
உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய
வேறொன்றையும் நான் விழையவில்லை
கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்
மண்ணில் நடக்கும் ரகசியத்தை
உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான்
இக்கவிதையின் இறுதிவரிகளை
'அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை' (பெயரற்ற யாத்ரீகன், ஜென் கவிதைகள், தமிழில் எம்.யுவன்) எனும் ஜென் கவிதையுடன் சேர்த்து வாசிக்க இயலும்.
மறை ஞான கவிதைகள் பண்பாட்டு கூறுகளில் இருந்து சில குறியீடுகளை பயன்படுத்தி கவிதையை சமைத்துக்கொள்ளும். மீமொழியின் கூற்றுகளை பயன்படுத்திக்கொள்ளும். கபீரின் இந்த கவிதையை உதாரணமாக சொல்லலாம்.
வெண்பட்டாடை
மெல்லிய
மிக மெல்லிய வெண்பட்டாடையை
அவன் நெய்கிறான்
அவனுக்கு வாய்த்த ஊடு இழை எது?
பாவு இழை எது?
ஆடையை நெய்ய
தேர்ந்த நூல் எது?
இங்கலத்தை தறியாக்கி
பிங்கலத்தை கயிறாக்கி
சூக்குமத்தை நூலாக்கி
வெண்பட்டாடையை
அவன் நெய்கிறான்
எண்ணிதழ் தாமரையைத்
தகளியாக்கி
ஐம்பூதங்களையும் முக்குணங்களையும்
நூல்புரியாக்கி
அவன் ஆடை நெய்கிறான்
தறியை அசைத்தசைத்து
ஒவ்வொரு நூலையும் சரிபார்த்து
அன்னையின் கருப்பையில் பத்து மாதங்கள்
நெய்கிறான்
எடுத்தணிந்த தேவரும் முனிவரும்
மனிதரும் அதைக் கறையாக்கி நிற்க
சேவகன் கபீரோ
அழுக்கின்றி
அப்படியே வைத்திருக்கிறான்
அந்த வெண்பட்டாடையை.
இடம், பிங்கலம், சுழுமுனை போன்ற தாந்திரிக குறியீடுகள் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். மற்றொரு கவிதையில் கபீர் பிரபஞ்சமளாவிய சித்திரத்தை அளிக்கிறார். 'நானோ/ எனது தறியின்/
ஊடு இழைக்கான நூல்களைப்/ பிணைத்துக்கொண்டிருந்தேன்/ பூமியையும் / ஆகாயத்தையும் பூட்டி/
அவன் தறியைச் செய்கிறான்/ சூரியனையும் சந்திரனையும்/
சட்டங்களாக்கி/ ஒருசேர/ அசைக்கிறான்.'
திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவை இந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம். அக்கம்மாதேவியும் 'அத்தை மாயை/ மாமன் பிறவி/
மூன்று இளைய மைத்துனர்கள் புலி போன்றவர்கள்/ நான்கு நாத்திகள்/ கேள் தோழி/ ஐந்து மூத்த மைத்துனர்களுக்குத் தெய்வமில்லை/
ஆறு ஓரகத்திகளை மீறமுடியவில்லை/, தாயே/ ஏழு பணிப்பெண்கள் என்னைக் காவல் காக்கிறார்கள்/ கர்ம வினையான என் கணவனின் வாயில் அறைந்து/
சிவனோடு சோரம் போவேன்/ மனமென்ற சுகப் பிரசாதத்தால்/
சிவனோடு கலந்து அனுபாவத்தைக் கற்றேன்/ ஸ்ரீசைல மலையின் உடலழகிய/ சென்னமல்லிகார்ச்சுனனைக்/
கூடுகையில்/
நல்ல கணவனைச் /சேர்ந்திருக்கிறேன்.'
நேரடி பொருளுக்கு அப்பால் பல மறைபொருளை கொண்டவை. அண்மைய காலத்தில் வந்த சிறந்த மற்றும் சிக்கலான மறைஞான கவிதை காவியம் அரவிந்தரின் சாவித்திரி. மறைஞான கவிதைகளின் மிக முக்கியமான இயல்பு அக - புற ஒத்திசைவு. அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளவற்றை இணைவைத்தல். இயற்கைக்கும் மனிதனுக்குமான (அப்படிச்சொல்வதே அபத்தமாக தோன்றும்) நீட்சியை, உறவை, ஒத்திசைவை பேசுபவை. இவை நவீன கவிதைகளிலும் தொடர்வதை கவனிக்க முடியும்.
'ஐக்கிய வேட்கை கவிதை' ஆன்மீக கவிதைகளில் இவையே மிகப்பெரும்பாலானவை. உணர்ச்சிகரமானவை. காதலர்-கணவர், தோழர், அடிமை, தாய் - தந்தையர், பிள்ளை போன்ற பாவங்களை சூடிக்கொள்பவை. நாயக நாயகி பாவம் , தாஸ பாவம் ஆகியவையே பெரும்போக்கானவை. பொதுவாக இக்கவிதைகள் மூன்று உணர்வு நிலைகளில் செயல்படுவதை கவனிக்க முடியும். பெருங்காதலின் காத்திருப்பை தவிப்பை சொல்பவை முதல் நிலை, அடைதலின், இயையதலின் உவகையை சொல்பவை இரண்டாம் நிலை, அடைந்தது கைவிட்டுபோகும் பிரிவாற்றாமை நிலையை அரற்றுவது மூன்றாம் நிலை. காம வேட்கையை உன்னதமாக்கி ஆன்மீக அனுபவத்தை அளிப்பவை. தூய காதல் கவிதைகளாக இவற்றை வாசிக்க இடமுண்டு. தமிழில் ஆண்டாள், மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் தமிழின் முதன்மை கவிகள். சூஃபி கவிகளையும் இவ்வரிசையிலேயே வைக்க முடியும்.
பற்றியெரியும் நகரம்
தீப்பற்றியெரிகிறது!
விறகேதுமின்றி எரியும் அதை
அணைக்கும் சக்தி படைத்த
மனிதன் எவரும் இங்கில்லை
எனக்குத் தெரியும்
அது உன்னிடமிருந்துதான்
பரவியது!
அந்தத் தீ
உலகம் முழுவதையும்
எரிக்கின்றது
அந்தப் பொறி
துவங்கியது
நீரிலிருந்துதான்
எரிய எரிய அது
நீரை அவிக்கின்றது
முடிவின்றி எரியும் அது
கண்ணியர் ஒன்பது பேரையும்
எரிக்கின்றது
அதை அவிக்கும்
நீர் யாருக்கும் அகப்படவில்லை
நகரம் பற்றியெரிகிறது
காவலரோ உறங்குகின்றனர்
அவர்களது கனவில்
அவரவர்களின் வீடுகள்
பத்திரமாய் இருக்கின்றன
ஓ இராமா
உனது நிறங்கள் எரிகின்றன
துடிக்கின்றன.
முடவன்
அறிவை நம்பி இருக்கிறான்
அதை மீறி
அவன் யோசிக்கலாகாது.
அதை எண்ணியே
வாழ்நாள் முழுதும் வீண் போய்விட்டது
உடலோ
தணியாத தாகத்தோடு தவிக்கிறது
பிறர் முன் நடிப்பவனை விடப்
பெரிய முட்டாள்
வேறெவருமில்லை
அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.
கபீர் சொல்கிறேன்
ராமனின் கண்களில்
நாம் அனைவரும் பெண்களே
இது கபீரின் கவிதை. 'ராமனின் கண்களில்
நாம் அனைவரும் பெண்களே'. ஏறத்தாழ இதே வரியை அக்கம்மாதேவி சென்ன மல்லிகார்ச்சுனனுக்கும் மீரா கண்ணனுக்கும் பொருத்திச்சொல்கிறார்கள். மீ
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 5 followers
