வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

அசல் குட்டநாடன் சாப்பாட்டுக் கடை உண்டு. போகலாம் சாரே.

ஆலப்புழை போகிற வழியில் அவன் நிறுத்திய இடத்தில் நாலு பெஞ்சுகளையும் மர ஸ்டூல்களையும் பரத்திப் போட்டு ஒரு விடுதி. ஓரமாகத் தூங்கிய நாய்களையும், வாசலில் கட்டி வைத்த செம்மறி ஆட்டையும், பீடி புகைத்தபடி ஓட்டல் வாசல் படிகளில் உட்கார்ந்திருந்த கைலி அணிந்த பெரியவர்களையும் எல்லா ஓட்டல்களிலும் தான் பார்க்க முடியும். ஆனால் வாசலில் நட்ட நடுவே கால் பரப்பி மண் தரையில் அமர்ந்து இருக்கும் ஸ்தூல சரீரப் பெண்மணி?

ஓ, அவளா, வழக்கு முத்தச்சி. டாக்சி டிரைவர் சொன்னான்.

என்றால்? வைத்தாஸ் குழப்பமாகப் பார்த்தபடி காரை விட்டு இறங்க, அந்தப் பெண் இரைய ஆரம்பித்தாள். அவள் சொல்லுகிறதெல்லாம் ஆண்கள் கூடப் பேச யோசிக்கும் தெறிகள், என்றால் வசவுகள் என்று சொன்னான் டாக்சி டிரைவர் சிரித்தபடி.

யாரையாவது வாய்ச் சொல்லால் துன்பப் படுத்த வேணும் என்றால், அவர்கள் எங்கே இருந்தாலும் சரிதான், முத்தச்சிக்குக் காசு கொடுத்தால் இங்கே இருந்தே சரமாரியாக வசவு வீசி அவர்களை முட்டுக் குத்தச் செய்து விடுவாள் இவள்.

இங்கிருந்து திட்டினால் வேற்றூரில் எப்படி அது போய்ச் சேரும்?

அது என்னவென்று தெரியாது. ஆனால் இங்கே திட்டியதும் அங்கே போய் சேர்ந்த உடனே சம்பந்தப் பட்டவர்களுக்குப் பேதியாவதும், நாக்குழறி, வியர்த்துப் போய் சுருண்டு விழுவதும் கிரமமாக நடக்கிறதே.

டாக்சி டிரைவர் சொன்னபடி எட்டணா நாணயத்தை அந்தக் கிழவிக்கு முன்னால் போட்டு விவரம் சொன்னான் – மகம்மை பஞ்சாயத்து தெக்கே பரம்பில் சங்குண்யார். என்னு பறஞ்சால் காணாதுண்ணி சங்கு.

அவன் விலாசம் விவரம் சொல்லும்போதே புன்னகைக்க, வைத்தாஸ் என்ன விஷயம் என்று கேட்டபடித் தானும் சிரித்து வைத்தான்.

என் மாமனார் தான். யாரும் பார்க்காமல் ஒளிந்திருந்து சாப்பிடுகிறவன் என்று பட்டப் பெயர். எனக்கும் காசு தரமாட்டேன் என்கிறான் வயசன்.

அவன் பின்னும் வெகு சத்தமாகச் சிரிக்க, கிழவி வைய ஆரம்பித்தாள். காற்றும் அபானவாயுவாக நாறிப் போனதாக யாரோ சொல்லி அந்தக் கிழவியின் அண்டையில் நின்று இன்னும் ஒருமுறை வசவைத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள்.

கடல் சிலந்தி புணரட்டும் என்கிறாள் கிழவி. ஆக்டோபஸ் பற்றி எங்கே தெரிந்து கொண்டாள்? வியப்போடு வேறே யாரோ சொன்னார்கள். அந்தப் பெண்பிள்ளை இந்த வயதிலும் புதுசு புதுசாக அறிந்து வைத்துக் கொள்வது வெகுவாகப் பாராட்டப் பட்டது.

காணாதுண்ணிக்கு அரையில் புழுப் புழுத்து வீங்கி குறி அறுந்து விழச் சொல்லித் திட்டு என்று சொல்லியபடி டிரைவர் படியேற அதுக்குத் தனியாகத் தரணும் என்றாள் கிழவி.

துரெ, ஒரு ரூபாய் காசோ நோட்டொ இருந்தா தள்ளைக்குக் கொடு. பின்னாலே அட்ஜெஸ்ட் ஆக்கித் தரும்.

யாருக்கோ குறி புழு வைத்து அழுகி அறுந்து விழத் தானும் ஒத்தாசை செய்கிற குற்ற போதத்தோடு உள்ளே நுழைந்தான் வைத்தாஸ்.
———————————————————————————

வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.

பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

அவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.

மிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.
உலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி? ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.

சாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.

திருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.

திலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.

அவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.

இது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்ல போகட்டும்.

கிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.

வாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –

நாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.

சொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.

கிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா? புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன? வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம்? ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள்? திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.

(என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து இரண்டு சிறு பகுதிகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2021 05:41
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.