மிளகு – Abbakka Rani learns a lesson about politically correct thinking and speaking

An excerpt from my mega-novel MILAGU

 

இரண்டு நாள் முன்பு சென்னபைரதேவி அவளுடைய வளர்ப்பு மகனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றிய செய்தி   கொண்டு வந்த தூதன் ஏதாவது பதில் இருக்கிறதா அம்மா என்று கேட்டான்.

என் ஆதரவை சென்னபைரதேவிக்கு அளிக்கிறேன். ஜெர்ஸோப்பா நாட்டு மகாஜனங்களும் அவருக்கு பெரும் ஆதரவு தரவேண்டும் என்று விரும்புகிறேன் . உத்தர கர்னாடகா பிரதேசத்தின் வியாபார, பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்கு கணிசமானது. அவருக்கு எதிரான சிறு போராட்டங்கள் நிலைக்காது. நிலைமை சீராகிறது, பார்க்கலாம்”.

இதை என் மனதில் இருந்து பேசினேன். ஆனால் என்ன ஆச்சு? நேற்று காலையில் கேலடி அரசதிபர் வெங்கடப்ப நாயக்கர் அனுப்பியிருந்த துரிதச் செய்தியில் என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார், அவருடைய வேடிக்கை விநோத எழுத்துப் பாணியில் –

பிரியமான அப்புக்குட்டி, சென்னாவை உனக்கும் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும்; திகம்பர முனிகளை உனக்குப் பிடிக்கும் எனக்குப் பிடிக்காது.  அப்பக்காவை சென்னாவுக்கு பிடிக்கும் எனக்கும் பிடிக்கும். என்னை சென்னாவுக்குப் பிடிக்கும் உனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை. ஏன் சென்னாவுக்கு ஆதரவு சொல்ல அத்தனை அவசரம்? நீ செய்தி கொண்டு வந்த ஒற்றனிடம் ரகசிய லிகிதமாக எழுதிக் கொடுத்திருக்கலாம். வாய்வார்த்தையாகச் சொல்லி ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் உன் உள்ளாலிலும் சகலருக்கும் சம்பந்தமுண்டோ இல்லையோ சகலருக்கும் தெரிந்து விட்டிருக்கும். இனிமேலாவது ராஜாங்க ரகசியத்தை அற்பர்களிடம் வாய் வார்த்தையாகச் சொல்லாதே. வாய் நிறைய சந்தோஷமான காரியங்களுக்காக ஏற்பட்டது. உன்னை எனக்குப் பிடிக்கும். உனக்கு என்னை

அப்போது சிரித்தபடி படித்துச் சுருட்டி வைத்துவிட்டாலும், மறுபடி திரும்பத் திரும்பப் படிக்கும்போது வெங்கடப்ப நாயக்கார் சொல்வதின் ஆழமான பொருள் என்னைச் சூழ்ந்து மருட்டுகிறது.

இந்த விவகாரத்தில் நான் என்ன செயது கொண்டிருக்கிறேன்? அடுத்த குறுநிலத்தின் ஆட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்ல நான் யார், தனிப்பட்ட முறையில் சென்னா என் நெருங்கிய தோழி என்றாலும்?

நாளையே ஏதாவது உடன்பாடு ஏற்பட்டு தாயும் மகனும் மீண்டும் சேர்ந்து விட்டால், அதுவும் சென்னாவின் முழு விருப்பத்தோடு நேமிநாதன் அரசராகப் பதவி ஏற்றுக்கொண்டால், என் மேல் அவன் விரோதத்துடன் தானே ஆட்சிக்கு நட்பு – எதிரிக் கணக்கைத் தொடங்குவான்?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2021 07:40
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.