From MILAGU, my next novel – a poignant interaction with the Crown

வந்து விட்டேன் அம்மா. அந்தத் தெருவில் சாக்கடை மூடிகள் காணாமல் போனதால் நேற்று இரவு ஆறேழு வயதுச் சிறுமி ஒருத்தி சாக்கடைக்குள் விழுந்தாள்.

என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு? சென்னா பரபரப்பாகக் கேட்டாள்.

இன்று காலை அவள் இறந்து போனாள்.

அய்யய்யோ. ஆண்டவனே

குயில்தோப்புத் தெருவின் சின்னக் குயில். நன்கு பாடுவாள். என் நல்ல சிறியபெண் சிநேகிதி அவள். போகட்டும். இப்போது மகாராணியிடம் ஒரு உள்ளூர் பிரச்சனையைச் சொல்லி விட்டேன். இதை உள்ளூராட்சிக்கு அனுப்பிக் கவனிக்க வைக்கலாம். சோனு என்ற அந்தக் குழந்தைப் பெண் திரும்பி வரப் போவதில்லை. இதுவும் போகட்டும்.

எல்லாம் போகட்டும் என்று புறம் தள்ளினால் எத்தனை உயிர்களை காவுவாங்கும் அந்தக் கழிவுநீர் ஓடை?

இனியும் இப்படியான விபத்துகள் நடக்காமல் இருக்க, ஹொன்னாவர் நகரச் சாக்கடை அமைப்பை சரியாக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதத்தில் மழைக்காலம் வருவதால் உடனடியாகச் செய்ய வேண்டியது இது.

செலவு என்ன பிடிக்கும்?

செலவு இருபதாயிரம் வராகன் கிட்டத்தட்ட ஆகும்.

இருபதாயிரமா? இரண்டு மாதத்துக்கு முன் என்றால் உடனே நிதி ஒதுக்கி இருப்பேன். இப்போது ஒரு வாரம் இரண்டு வாரம் தாமதமாக அதுவும் நான்கு தடவை ஐந்தாயிரம் ஐந்தாயிரமாகத் தரலாம். யோசித்துச் சொல்கிறேன்.

அம்மா, நேற்று கருவூலத்தில் வரவு வைக்க மாட்ரிட் வர்த்தகரிடம் இருந்து ஏற்றுமதிக்கான விலை இருபதாயிரம் வராகன் என்ற தொகைக்கு ஒரு கைச்சாத்து.

அதை சாக்கடை சீரமைக்க எடுத்துக் கொள்ளலாம் என்கிறாயா?

தர்மவீர் பிரதானி, உடுப்பி அருகே வராங்க கிராமத்தில் திருக்குளத்து நடுவே அமைந்த நானூறு வருடம் பழைய கேரே பஸ்தியைச் செப்பனிட அந்த மிளகுக்காசை திசை திருப்பி விட்டார்.

அதுவும் வேண்டிய செலவுதானே? வீண் செலவு இல்லையே.

நீங்களே சொல்லுங்கள் அம்மா, சாக்கடை நீரில் மூழ்கி மரணம் ஏற்படுவதைத் தடுப்பதா, தண்ணீர்க் கோவிலைச் செப்பனிடுவதா எது உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம்.

தனித்தனியாகப் பார்க்கும்போது மிகக் கொடிய நடவடிக்கையாகத் தெரியலாம். பிள்ளைகளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளாமல் சாக்கடைக்கு பலி கொடுப்பது பெற்றோரின் அசட்டை காரணமன்றோ என்று இன்னொரு வகையில் பார்த்து வாதாடலாம் பரன்.

இது ஒரே ஒரு சாக்கடை அடைப்பு. ஒரு மரணம். ஒரு பஸதி செப்பனிட அவசியம். ஒரு மிளகு விற்ற வரவு. இதுபோல் எத்தனை உண்டென்று அனுமதி கொடுத்தால் கணக்கு சொல்வேன் அம்மா.

செலவுகள் இந்த ஆண்டு கூடியுள்ளனவே.

இந்தச் செலவுகளில் கோவில் கட்டுகிற செலவு தவிர மற்றவை எப்போதும் வரும் இனம் தான்.

இந்த ஆண்டு கோவில் செலவு மிளகு வரவை எல்லாம் விழுங்கி விட்டது. இது இன்னும் நீள வேணுமா? தீர்வு என்னவாக இருக்கும்? இதற்கெல்லாம் தீர்வு மகாராணி திருமனசு தான் எடுக்க வேண்டும். நான் தவறாக ஏதாவது பேசியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
.
நீளமாகப் பேசி நிறுத்தியது பெருமழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. தடாரென்று சென்னபைரதேவி காலில் விழுந்து வணங்கினான் அந்தக் கருவூல அதிகாரி. பிரமித்துப்போய் இருந்த சென்னபைரதேவி, அவனைக் கைகொடுத்து எழுப்பினாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
Lisbon, the Capital of Portugal

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2021 07:39
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.