சிறுபறை கொட்டி, பாடல்கள் பாடி நதிநீராடி ஒரு காலை

மிளகு நாவலில் இருந்து

விடிந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண்கள் நடக்கத் தொடங்கினார்கள். சிறுபறை கொட்டிப் பாடிக்கொண்டே நடந்தால் நடக்கும் தொலைவு தெரியாதென்று பாட ஆரம்பித்தது, நடையும் தீரவில்லை, பாட்டும் ஓயவில்லை.

எல்லோரும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட கன்யகைகள். எல்லோரும் பதினைந்து வயதுக்காரிகள் என்றோ சொன்னது? இந்தக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திச் சென்றவள் காசிரை. அப்படித்தான் தன் பெயரைச் சொல்லிக்கொள்கிறாள் கஸாண்ட்ரா சில நேரம்.

பல நேரமும் அவள் தன் போர்த்துகீசிய தந்தை ரொனால்டோ பத்ரோஸின் மகளாக உணரும்போது அவள் கஸாண்ட்ரா. இந்துஸ்தானத்து அம்மா காவேரியின் செல்லப்பெண்ணாக உணரும்போது காசிரை.

இன்றைக்கு கல்யாணம் கழித்த, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள் நிலாக் கடவுளையும் சூரியனையும் வழிபட்டு, நிலா மறைந்த பின், ஆதவன் எழும்போது ஆற்றில் நீராடினால் விரைவில் திருமணம் நிகழும் என்று நம்பிக்கை.

கல்யாணம் ஆகாத கன்யகைகள் கோதுமையில் சர்க்கரை சேர்த்துப் பிடித்து வைத்த நிலாத்தேவனின் உருவத்தையும், சூரியனின் உருவையும் வணங்கி அந்தச் சிறு உருவங்களை சுவைக்காமல் வாயிலிட்டு விழுங்குதலும் வழிபாட்டில் ஒரு பகுதியாகும்.

நெய் மிகைத்துப் பெய்த சர்க்கரைப் பொங்கலும் அப்பங்களும், உப்பிட்ட கடலைப்பருப்பு சுண்டலும், ஒற்றை இட்டலிகளுமாக ஆற்றங்கரையில் இருந்து உண்ண வேண்டும். வழிபட்டு திரும்பி வரும்போது சிறுபறைகளையும் பழந்துணியையும் ஆற்றோடு போகவிட்டு வரவேண்டும்.

கூட்டமாகத் தோழிகளோடு போய் ஆற்று நீராடும் இந்த வழிபாடு தமிழ் பேசும் பிரதேசத்திலிருந்து வந்தது என்று சொல்வார்கள். காசிரைக்கு அதொன்றும் சிந்தனைக்குரிய விஷயமில்லை.

விடிகாலைப் பனியும், கூட்டமாக கோவிந்தன் பெயர் சொல்லிச் சிறு பறை கொட்டிப் போவதும், பாடுவதும், பேசுவதும் ஐந்து வயதிலிருந்து பிடித்துப்போனவை. காசிரை ஆகும் தினங்கள் வருடம் ஒருமுறை மட்டும், ஜோசியர்கள் கணித்தபடி வரும்.

pic Bathing Ghat
ack gettyimage

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2021 20:25
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.