இளையராஜாவும் மனுஷ்ய புத்திரனும்
‘96' படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது போல் இப்புத்தகத்தில்* மனுஷ்ய புத்திரன் கவிதைகளை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் உள்ளடக்க ஆற்றொழுக்கு குலைந்து விடக்கூடாதென்பதற்காக தனியே தருகிறேன்.
1. வரும்வரை
போய் வா
எவ்வளவு நேரமானாலும்
இங்கேயேதான்
இருந்துகொண்டிருப்பேன்
2. இருப்பு
காணாமல்
போய்விட்டேன்
என்பதற்காக
இல்லாமலேயே
போய்விட்டேன்
என்றாகி விடுமா
சொல்?
3. வேறெங்கோ
நினைப்புகளில் துருவேறிவிட்டது
வெற்று ஏக்கங்களில் பெருமூச்சுகள்
காலத்தை அரித்துத் தின்னுகின்றன
வாழ்க்கை வேறெங்கோ
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
4. ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை
இருப்பதிலேயே
கடினமான பாதையைத்
தேர்வு செய்கிறேன்
இந்தப் பயணம் எந்தவிதத்திலும்
இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக
கண்ணீர் மல்க
பிரார்த்தனை செய்கிறேன்
இவ்வளவு பிரயாசையுடன்
உன்னைத் தேடி வரும் நாளில்
நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக
5. கேட்காததும் சொல்லாததும்
கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை
சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை
வேறொன்றுமில்லை
இரகசியமென்றும்
இடைவெளியென்றும்
6. மீனாவின் சுயசரிதை
மீனாவாக வாழ்வது
எவ்வளவு கஷ்டமென்று
மீனாவுக்குத்தான் தெரியும்
என்றாள் மீனா
பிறகு எதையோ
யோசித்தவளாக
மீனாவாக வாழ்வதைக் கூட
சகித்துக் கொள்ளலாம்
மீனாவுக்காக வாழ்வது
அதைவிடத் துயரமானது
என்றாள் சிரித்துக்கொண்டே
7. அறியும் வழி
உன்னைப்
பற்றிக்கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக் கொண்டிருந்தேன்
என்பது
இழக்கவே முடியாதது
எதுவென தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?
8. இதற்குத் தானா?
பார்க்காமலே
இருந்திருக்கலாம்
பார்த்ததும்
பாராததுபோல் போயிருக்கலாம்
பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்
பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்
பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?
9. ஞாபகத்தின் மூன்று பருவங்கள்
முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்
பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்
இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்
ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்.
10. போகத்தின் பிரார்த்தனைகள்
போகத்தின் பிரார்த்தனை
எப்போதும் இரண்டுதான்
என்னை அனுமதி
என்னை ஆட்கொள்
11. பிரயத்தனம்
கடைசியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை
கீழே விழுந்து
உடைவதற்குத்தானா
இத்தனை ஆயத்தம்
இத்தனை பதட்டம்
இத்தனை கண்ணீர்?
12. கடைசிக் கணத்தில்
ஓரடி எடுத்து வைத்தால்
போதும்
தொட்டு அழிக்கவும்
கசக்கி எறியவும்
அவ்வளவு அருகில்தான் இருக்கிறது
எல்லாம்
எல்லாவற்றையும் மாற்றிவிடும்
அந்தக்கடைசிக் கணத்தில்
மனமின்றித் திரும்பிப்போகையில்
ஆயிரம் ஆயிரம் இருண்ட நட்சத்திரங்கள்
பிரகாசித்து
கூட நடக்கத் தொடங்குகின்றன
13. விடை பெறுதலுக்கென்று
விடை பெறுதலுக்கு என்று
விசேஷமான
ஒரு சொல்லோ
முத்தமோ
தனியாக இல்லை
மனிதர்கள்
அவ்வளவு நிராதரவாய்
படிக்கட்டுகளில் அமர்ந்து
அழுகிறார்கள்
14. இதற்குப் பிறகு
இதை வருத்தம் என்றால்
இதை வேதனை என்றால்
இதை தண்டனை என்றால்
இதைச் சித்திரவதை என்றால்
இதைக் கருணையற்ற செயல் என்றால்
இது மன்னிக்க முடியாதது என்றால்
இதற்குப் பின்னே வர இருப்பதற்கு
எப்படி உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வாய்
என்னதான் அதற்குப் பெயரிடுவாய்
15. அன்பின் சின்னம்
ஒரு அன்பில்
கடைசியாக மிஞ்சுகிறது
ஒரு அன்பின் சின்னம்
மட்டும்
[நீராலானது (2001), கடவுளுடன் பிராத்தித்திருத்தல் (2006), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013) மற்றும் தித்திக்காதே (2016) தொகுப்புகளில் இருக்கும் கவிதைகள். வெளியீடு உயிர்மை.]
* - '96: தனிப்பெருங்காதல்' நூலின் பின்னிணைப்பு
Published on March 15, 2019 03:55
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
