“வரி விதிப்பின் அரசன் இந்தியா”

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது

"அமெரிக்க அதிபரை மகிழ்விக்கத்தான்" என்று ட்ரம்ப் சொன்னதாக 03.10.2018 ஆம் நாளிட்ட "தமிழ் இந்து" கூறுகிறது

ஒரு தனிமனிதரை மகிழ்விப்பதற்காக ஒரு தேசத்தை அதன் தலைவர் ஒரு ஒப்பந்தத்திற்குள் கொண்டு சேர்க்கிறார் என்றால் அவர் தனது தேசத்தை விற்கத் துணிகிறார் என்று அர்த்தம்

இந்த இடத்தில் இந்தியா என்பதை இந்தியப் பிரதமர் என்று கொள்வதும் சரிதான்.

இன்னும் கொஞ்சம் சரியாய் சொல்வதெனில் அப்படி சொல்வதுதான் சரி.

எனில்,, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் இந்தியா ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதை அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியப் பிரதமர் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்? என்றுதான் கொள்ள வேண்டும்.

வழக்கமாக ஒரு நாடு மற்ற நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் அமெரிக்காவோடு இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவது என்பதும் இயல்பானதுதானே. பிறகு ஏன் அப்படி ஒரு கேள்வியை அந்த செய்தியாளர் திரு ட்ரம்ப் அவர்களிடம் கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது?

பொதுவாகவே இதுமாதிரிக் கேள்விகளோடு “இவ்வளவுக்குப் பிறகும்” என்ற இரண்டு வார்த்தைகள் மறைந்திருக்கும்.

கடை வைத்திருக்கும் ஒருவருக்கு வர்த்தகமே நோக்கம். தம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு சேர்க்க அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் யாரோடு வேணுமானாலும் பேசுவார். அவர் ஏன் அவரிடம் வியாபாரம் செய்ய ஆர்வமாயிருக்கிறார்? என்று யாரும் கேட்பதில்லை. உண்மையை சொல்லப் போனால் யாரையாவது அவர் தவிர்ப்பார் என்று சொன்னால் வியாபாரத்துல யாரு என்னன்னு எல்லாம் பார்க்கக் கூடாது என்றே அவருக்கு அறிவுரை கூறுவார்கள்.

”அவங்கிட்ட போயி எதுக்கு இந்த ஆளு வியாபாரம் செய்ய அலையறான்? என்று யாரேனும் கேட்டால்,

1) அவன் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுபவனாக இருக்க வேண்டும்
2) வாங்கிய பொருளுக்கு உரிய விலையை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பவனாக இருக்கும்

இவை இங்கும் பொருந்துமா?

சத்தியமாய் பொருந்தும்.

இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் இறக்குமதி விதிப்பதாக அவர் கூறியிருந்தார்.

”ஹார்லி டேவிட்சன்” என்பது அமெரிக்காவின் மிகப் பிரபலமான மோட்டார் நிறுவனம். அதன் உரிமையாளர் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். அவரது நிறுவனத்தில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

அதற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியின் அளவு அதிகமாக இருப்பதாக ட்ரம்ப்பிற்கு புகார் செல்கிறது. அதன்பொருட்டுதான் அவர் மிகக் கோவமாக “வரி விதிப்பின் அரசன் இந்தியா” என்று கூறினார்.

அவர் இது விஷயத்தில் மிகவும் வெளிப்படையாகவே உரையாடினார்.

மோட்டர் சைக்கிள்மீது 100 சதவிகித வரி என்பது மோசடியானது என்பது மாதிரி பேசிய அவர் விலை அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி அதை வாங்குவார்கள்? மக்கள் வாங்கவில்லை என்றால் அதன் உரிமையாளர் நட்டமடைய மாட்டாரா என்பதே அவரது ஆதங்கம்.

இந்தியப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களோடு நேரிடையாகவே இதுகுறித்தும் அவர் பேசி இருக்கிறார். திரு மோடி அவர்களும் வரியைக் கணிசமாக்க் குறைத்திருக்கிறார். ஆனாலும் இன்னமும் வரி அதிகமாய்த்தான் உள்ளது என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்

இந்த இடத்தில் மூன்று விஷயங்களைப் பார்க்க வேண்டும்

1) அமெரிக்கப் பொருட்களுக்கு விலையைக் குறைப்பதன் மூலம் ட்ரம்ப்பின் நண்பர்களான அமெரிக்க முதலாளிகளுக்கு நம் பிரதமர் நட்டம் வராமல் பார்த்துக் கொள்கிறார்
2) பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை ஏற்றுவதன் மூலமும் ரஃபேல், நிலக்கரி உள்ளிட்ட விஷயங்கள் மூலமும் உள்ளூரில் உள்ள தனது முதலாளி நண்பர்கள் பெரு லாபம் அடையவும் நடவடிக்கை எடுக்கிறார்.
3) இவ்வளவு வக்கனையாகப் பேசும் ட்ரம்ப் தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிலும் குறிப்பாக சீனப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்திருப்பதாக 17.06.2018 நாளிட்ட “விடுதலை” கூறுகிறது

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் இரும்பிற்கே இத்தனை கூடுதலாக வரி விதிக்கப் பட்டிருப்பதாக விடுதலை கூறுகிறது. இறக்குமதி செய்யப்படும் இரும்பின் விலை கூடினால் இரும்பினால் செய்யப்படும் பொருட்களின் விலை கூடும். அதை எப்படி அமெரிக்க மக்கள் வாங்கு இயலும் என்று யோசிக்க மறுப்பவர் ட்ரம்ப்.

ட்ரம்ப்பிற்கு அக்கறை அமெரிக்க மக்கள் மீது அல்ல. அவரது அக்கறை அவரது நண்பர்களான அமெரிக்க முதலாளிகள்மீது.

இங்கும் நமது பிரதமரின் அக்கறை தமது மக்கள் மீது அல்ல. அவரது முதாலாளி நண்பர்கள் மீதே அவர் அல்லும் பகலும் அக்கறையோடு இருக்கிறார்.

மோசமான நாடான இந்தியா அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறதே கவனம் இருக்கிறதா? என்பதல்ல அந்த செய்தியாளரின் கேள்வி.

அமெரிக்க இவ்வளவு மோசமான நாடு என்று தெரிந்தும் ஏன் இந்தியா இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? என்பதே அவரது கேள்வியின் நுட்பமான பொருள்

எனது கவலை எல்லாம்

இத்தனை நிபந்தனைகளுக்குப் பிறகும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?

பெரு முதலாளிகளின் பிடியில் இருந்து எப்போது விடுபட்டு மக்களைப் பற்றி எப்போது சிந்திப்பீர்கள்?

என்றெல்லாம் எப்போது நமது செய்தியாளர்கள் திரு மோடி அவர்களை நேருக்கு நேராய் கேட்பார்கள்

#சாமங்கவிய 42 நிமிடங்கள்
17.10.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2018 20:50
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.