மு.க.நூல் - 3


நெஞ்சுக்கு நீதி – 1

5. என்னுடைய அரசியல் அரிச்சுவடி

திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் முதலில் இரண்டாம் படிவப் பரிட்சை எழுதினேன். தேறவில்லை. பிறகு முதல் படிவம். அதிலும் நிராகரித்தார்கள். கிராமத்து ஆசிரியரின் பயிற்சி அப்படி. பள்ளியில் சேராமல் ஊர் போனால் சிரிப்பார்கள். தலைமையாசிரியர் அறைக்குப் போனேன். நடந்தது சொல்லிக்கெஞ்சினேன். அவர் மறுக்க, எதிரே இருந்த தெப்பக்குளத்தில் விழுந்து சாகப் போவதாய்ச் சொன்னேன். அதிர்ந்தார். யோசித்தார். ஏற்கனவே பலரை தெரிந்தும் தெரியாமலும் பலி கொண்ட குளம். என்னை ஐந்தாம் வகுப்பில் எடுத்துக்கொண்டார். கூத்தாடினேன். முதன்மை மதிப்பெண்ணில்தேறினேன்.

ஐந்தாம் வகுப்பில் பனகல் அரசர் பற்றிய சிறுதுணைப்பாட நூல் உண்டு. அதை அப்படியே மனனம் செய்து சொல்வேன். அதுதான் எனக்கு அரசியல் அரிச்சுவடி.

திராவிடர்கள் அரசியல், சமூக இடம்பெற பி தியாகராயர், டிஎம் நாயர், பனகல் அரசர், நடேச முதலியார் 1916ல் தென்னிந்திய நலஉரிமைச்சங்கம் என்ற கட்சி தொடங்கினர். ஜஸ்டில் என்ற ஆங்கில நாளேடு கட்சி சார்பில் வந்து, பின் ஜஸ்டிஸ் கட்சி என்றே பெயரானது. 1917ல் செம்ஸ்ஃபோர்டு, மாண்டேகு பிரபுக்கள் வந்த போது நீதிக்கட்சி திராவிடர் நிலையை - குறிப்பாய் ஒடுக்கப்பட்டோர் - விளக்கி அறிக்கை அளித்தது. பின் என் சிவராஜ், எம்சி ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள் நீதிக்கட்சியுடன் இணைந்து பணிபுரியவந்தனர். 1919ல் நாயர் மறைந்தார்.

1920ல் வந்த மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தப்படி நடந்த இந்தியாவின் முதல் தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்றது. அன்னி பெசண்ட்டின் ஹோம்ரூல் இயக்கம் அதை எதிர்த்துப் போட்டியிட்டது. காந்தி சொன்னதால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்கள் பெற, தியாகராயரை மந்திரி சபை அமைக்குமாறு கவர்னர் வெலிங்டன் பிரபு கேட்டார். ஆனால் அவர் ஏ சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக்கினார். பனகல் அரசர் இரண்டாம் மந்திரி. 1921ல் சட்டமன்றம் தொடங்கியது. அவ்வாண்டே சுப்பராயலு மறைய, பனகர்அரசர் முதல்வர் ஆனார். அந்த ஆட்சிக்காலச் சாதனைகளைப் பேசியதே அத்துணைப்பாட நூல்.

அப்போது சென்னையில் நடந்த மில் வேலைநிறுத்தத்தில் 6 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் திருவிக, பிபி வாடியா, சக்கரைச் செட்டியார், நடேச நாயக்கர், இஎல் அய்யர் ஆகியோரை நாடுகடத்த கவர்னர் உத்தரவிட்டார். தியாகராயர் கொதித்தெழுந்து அதைத் திரும்பப்பெறாவிடில் மந்திரி சபை பதவி விலகும் என அறிவித்தார். அதனால் தோன்றிய கொந்தளிப்பால் ஆணை ரத்தானது.

1923ல் இரண்டாம் பொதுத்தேர்தலிலும் நீதிக்கட்சி வென்று, பனகல் அரசர் முதல்வர் ஆனார். 1925ல் தியாகராயர் மறைந்தார். 1926 மூன்றாம் பொதுத்தேர்தலில் சுயாட்சிக் கட்சி எனும் பெயரில் காங்கிரஸ் நீதிக்கட்சியை எதிர்த்து நின்று வென்றது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், பனகல் அரசர் ஆட்சியமைக்க முன்வரவில்லை. சுப்பராயன் முதல்வரானார். மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என ஆங்கில அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை பனகல் அரசர் கொண்டு வந்தார். அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் அவருடையதே. 1928ல் பனகல் அரசர் மறைந்தார்.

காங்கிரஸின் தூணாய் இருந்த பெரியார் 1926ல் சுயமரியாதை இயக்கம் கண்டார். குடியரசு இதழ் துவங்கியது. ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, குத்தூசி குருசாமி, சௌந்திரபாண்டியன், பொன்னம்பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ் ராமநாதன் உள்ளிட்டோர் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பினர். 1930ல் சுயமரியாதை இளைஞர் கழகம் தொடங்கப்பட, கல்லூரி மாணவர் அண்ணா அதில் இணைந்து வாரந்தோறும் கருத்துரைகள் வழங்கினார். 1930 பொதுத்தேர்தலில் நீதிக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று திவான் பகதூர் முனுசாமி நாயுடு முதல்வரானார். இச்சமயம் பெரியார் தமிழர்களின் அரசியல் முன்னேற்றத்திற்காக ஒரு திட்டமளிக்க, அதை நீதிக்கட்சி ஒப்புக்கொண்டதும், அதோடு இணைந்து பணிபுரியத் தலைப்பட்டார்.

#NenjukkuNeethi #P1C5

*

6. நீதிக் கட்சியில் பல மாற்றங்கள்

1932ல் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் பொப்பிலி அரசர் நீதிக்கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முத்தையா செட்டியார், ஏடி பன்னீர்செல்வம் அமைச்சர்களாகினர். சைமன் கமிஷன் சொன்ன சீர்திருத்தங்களுடன் 1936ல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வீழ்ந்தது. அப்போது ஐந்தாம் வகுப்பில் பனகல் அரசரைத் தலைகீழாக ஒப்பித்துக்கொண்டிருந்தேன். 1937ல் காங்கிரஸ் முதன்முதலாக சென்னையில் ஆட்சியமைத்தது. ராஜாஜி முதல்வரானார்.

ராஜாஜி பள்ளிகளில் இந்தியைக்கட்டாயமாக்கினார். மாகாணம் முழுக்க கண்டனங்கள் கிளர்ச்சிகள் எழுந்தன. ராஜாஜி மேலும் பிடிவாதமானார். காங்கிரஸிலே கூட எதிர்ப்பு இருந்தது. சோமசுந்தர பாரதியார் ஓர் உதாரணம். ராஜாஜி சட்டமன்றத்தில் “இந்தியை இருவர் மட்டுமே எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், மற்றொருவர் பசுமலை பாரதியார்” என்றார். பதிலுக்கு பன்னீர்செல்வம் “அதை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவரே. ஆக, பெரும்பான்மை எதிர்ப்பு தான்.” என்றார். 1938ல் முக்கியச் சம்பவங்கள் நடந்தன.

இந்தி எதிர்ப்புப் போருக்கு பெரியார் தலைமை தாங்கினார். அண்ணா, சோமசுந்தர பாரதி, கிஆபெ விசுவநாதம், மூவலூர் இராமாமிர்தம் முன்வரிசையில் நின்றனர். இந்தியைக் கட்டாயமாக்கிய பள்ளி வாசல்களில் மறியல் செய்து ஆயிரம் பேருக்கு மேல் சிறையேகினர். தாளமுத்து, நடராசன் என்ற வீரர்கள் சிறையில் இறந்தனர்.

சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலையடிகள் தலைமை வகித்தார். காஞ்சிபுரத்தில் கான்பகதூர் கலிபுல்லா இந்தி எதிர்ப்புக்கான கொடியை உயர்த்தினார். பெரியாரும், சோமசுந்தர பாரதியும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் "அரசுப்பணம் இந்திக்காகச் செலவழியக்கூடாது" என்ற தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். “பெரியாருக்கு இந்தி எதிர்ப்பில் அக்கறையில்லை; காங்கிரஸை ஒழிப்பதற்காகவே இதில் இறங்கியுள்ளார்” என்றார்கள். இந்தி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கிய போது தமிழர் தலைவராக ஏற்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அண்ணாத்துரை என்ற பெயர் தமிழகமெங்கும் ஒலித்தது. பாமரர், படித்தவர் அனைவரும் வியந்தனர்.

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, நேரு ஓய்வெடுக்க ஐரோப்பா சென்றார். அஹிம்சையில் போஸுக்கும் காந்திக்கும் கடும் முரண்பாடுகள் எழுந்தன. அதே ஆண்டில் பள்ளியில் நான் இரண்டாம் படிவத்துக்கு வந்து விட்டேன்.

#NenjukkuNeethi #P1C6

*

7. தமிழ் காக்கும் போர்முனை

இந்தியை எதிர்க்க அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சியிலிருந்து சென்னை நோக்கி தமிழர் படையொன்றை அணுவகுத்தார். மூவலூர் ராமாமிர்தம் படைக்கான உணவுகளை வழிநெடுக கவனித்துக் கொண்டார். நகரதூதன் வார இதழ் ஆசிரியர் மணவை திருமலைசாமி அப்படையின் ஒரு தளபதி. வழியெங்கும் இந்தி எதிர்ப்பாளர்கள் வரவேற்பும், காங்கிரஸ்காரர்களின் கல்வீச்சும், தடியடியும் கிட்டியது.

ஒரு கிராமத்தில் காங்கிரஸார் படைக்கு வரவேற்பாய்ச் செருப்புத் தோரணம் கட்டினர். அழகிரிசாமி அதன் முன் நின்று உரையாற்றத் தொடங்கினார். ஆயிரக்கணக்கானோர் கூடினர். இரண்டு மணி நேரம் தாண்டிய கோடை இடி! “ஆகாயத்தில் பரப்பியதைத் தரையில் வைத்திருந்தாலாவது ஆளுக்கொரு ஜோடி மாட்டிக் கொண்டிருப்போமே!” என்றார். மக்கள் தோரணத்தை வெட்டியெறிய முயல, அழகிரி தடுத்து விட்டார். பின் காங்கிரஸாரே அதை அவிழ்த்து, படைக்குத் தேநீர் விருந்தளித்து அனுப்பினர். இப்படி இருநூறு மைல் தொலைவெங்கும் இந்தி எதிர்ப்புணர்ச்சியை விதைத்துச் சென்றனர்.

பள்ளியில் மாணவர்களை இணைத்துச் சங்கங்கள் அமைத்து வாராந்திரக் கூட்டங்கள் நடந்துவேன். சிறப்புச்சொற்பொழிவு உண்டு. 1938ல் தினம் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கையில் தமிழ்க்கொடியுடன் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் போவேன். உடன் ராஜாஜி கட்டாய இந்திக் கட்டாரியால் தமிழ்த் தாயைக் குத்தும் படங்கொண்ட வண்டி. நானெழுதிய “இந்திப் பேயை விரட்டுவோம்” பாடலை மாணவர்கள் பாடுவர்.

ஒரு நான் எங்கள் இந்தி ஆசிரியர் இதைப்பார்த்து விட்டார். அவரிடமே இந்தி எதிர்ப்பு முழக்கத் துண்டறிக்கையைக் கொடுத்தேன். எனக்கு எந்தப் பயமும் இருக்கவில்லை. ரத்தத்தில் தமிழுணர்வு ஊறிக் கிடக்க, அதைப் புரட்சிச்செயல் என்றே எண்ணினேன். அவர் ஒன்றும் பேசாமல் போய் விட்டார். மறுநாள் வகுப்பில் கரும்பலகையில் சில இந்திச் சொற்களை எழுதி என்னை வாசிக்கச் சொன்னார். எனக்குத் தெரியவில்லை. என் காதைத்திருகிக் கன்னத்தில் அறைந்தார். தலைசுற்றிப் பலகையில் அமர்ந்தேன்.

நான் மாணவர்களைத் திரட்டி கிளர்ச்சி செய்வேன் என நினைத்தார்கள். ஆனால் நான் அப்படிச் சிந்திக்கவில்லை. நான் துண்டறிக்கை கொடுத்ததும் சரி, அவர் அடித்ததும் சரி என என் நெஞ்சு எனக்கு நீதி வழங்கியது. 36 ஆண்டு கழித்து அவர் மயிலையில் நடந்த ஓமியோபதி மாநாட்டுக்கு என்னை அழைத்துச் செல்ல வந்து காத்திருந்தார்.

இச்சமயம் வடக்கில் மதக்கலவரங்கள் மூண்டன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை முஸ்லிம் லீக் சுட்டியது. தமிழகத்தில் கட்டாய இந்தியை அது எதிர்த்தது. இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் தமிழ்க்கொடியுடன் பச்சைப்பிறைக் கொடியும் பறந்தது.

#NenjukkuNeethi #P1C7

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2018 20:32
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.