நாம் கைவிட மறுத்து அக்குளில் இடுக்கியிருக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பிடுங்கி அப்பால் வீசுபவனே எழுத்தாளன். அவ்வாறு நம்மை ஒப்புக்கொடுத்து மாறுவது மிகமிக கடினமான ஒரு போராட்டம் வழியாகவே நிகழ்கிறது. விளைவு தெரிய நெடுநாட்களாகிறது. ஒரு ஆசிரியன் அளிக்கும் செல்வாக்கு என்பது நாம் அவனுக்கு ஆட்படுவது அல்ல, அவன் வழியாக நாம் நம் எல்லைகளை மீறிச்செல்வது. அது உண்மையில் ஒரு விடுதலை. தல்ஸ்தோய் முதல் நித்ய சைதன்ய யதி வரை எனக்கு அளித்தது விடுதலையையே.