காட்டு வேலிகளில் மரக்குச்சிகளை வெட்டி வந்து பாறையில் அங்கங்கே சிதறிக் கிடந்த பழைய ஓலைகளையும் பனங்கருக்குகளில் வெட்டிய புது ஓலைகளையும் கொண்டு கட்டிக் குளியலறை உருவாக்கினான். அவன் கை மாயம் செய்து அதை உருவாக்கியதாகத் தோன்றியது. வந்தவர்களிடம் பேசியபடியே இரண்டு மணி நேரம் வேலை செய்திருப்பான். எடுபிடிக்குக் கூட ஆளில்லை. பாறையில் சமதளமான இடம் ஒன்றில் சட்டென அது எழும்பி நின்றது. திறந்து மூடும் படல் கதவு. அவள் குமரேசனின் கைகளையே பார்த்தாள். அவற்றின் ஒவ்வொரு அசைவும் கணிக்க முடியாததாக இருந்தது. அதை முடித்தபின் குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் கொண்டு வந்தான். தூரம்.
Jeyerajha (JJ) and 1 other person liked this