ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா? அப்படியானால் தன்னை மிஞ்சிய முதுமை அவனுக்கு எப்படி சாத்தியமானது. நாவினடியில் ஊறிய சொல் ஒரு தித்திப்பின் மணத்தோடும் கசப்பின் சுவையோடும் அவன் பெயரை உருட்டி நகர்த்தியது. - ’ஜோதி’. இப்படி நினைப்பது கூட குற்றமோ என அச்சப்பட்டவளின் மனம் தன்னை மீறி திரும்பவும் உச்சரித்த சொல்லை வாய் உலகின் செவிகளுக்கு கேட்காத ஓசையில் சொல்லி அடங்கியது.